Tuesday, December 29, 2020

14. 13ஆவது அத்தியாயம் - ஜீவாத்மாவும், பரமாத்மாவும்

1. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கேசவா! பிரகிருதி (இயற்கை, பொருள்), புருஷன் (ஆத்மா), க்ஷேத்ரம் (இடம்), க்ஷேத்ரக்ஞன் (உடலை அறிந்திருப்பவன்), ஞானம் (அறிவு), ஞேயம் (அறியப்படுவது) ஆகியவை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

2. பகவான் கூறினார்:
குந்தியின் மைந்தனே! இந்த உடல் க்ஷேத்ரம் என்றும், இந்த உடலை அறிபவன் க்ஷேத்ரக்ஞன் என்றும் இவற்றை அறிந்தவர்களால் (முனிவர்களால்) கூறப்பட்டுள்ளது.

3. பரத குலத் தோன்றலே! எல்லா க்ஷேத்ரங்களுக்கும் க்ஷேத்ரக்ஞன் நானே என்று அறிவாயாக. இந்த உடலையும், அதை அறிந்திருப்பவனையும் பற்றி  அறிந்திருப்பதுதான் ஞானம் என்பது என் கருத்து.

4. உடல், அதன் இயல்பு, அது அடையும் மாற்றங்கள், அவை எப்போதிலிருந்து ஏற்படுகின்றன, அதை அறிபவன் யார் அவனுடைய சக்திகள் என்ன என்பவை பற்றி நான் சுருக்கமாகக் கூறுவதைக் கேள்.

5. இந்த அறிவு முனிவர்களால் பல்வேறு பாடல்கள், வேத மந்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகியவை மூலம் வெவ்வேறு விதங்களில் காரணங்களுடன் ஆழமாக விளக்கப்பட்டிருக்கிறது.

6, 7. பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், வான், தீ, ஆகாயம் அல்லது வெற்றிடம்), அகங்காரம் (தான் என்னும் எண்ணம்), அறிவு, ஆத்மா, ஞானேந்தரியங்கள் (மெய், வாய் - சுவை, உணர்தல் கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் (வாய்- பேசுதல், கைகள், கால்கள், பிறப்புறுப்பு, ஆசனவாய்), ஞானேந்திரியமான மனம் என்ற 11 இந்திரியங்கள், புலன்களால் அறியப்படும் 5 பொருட்கள் (சுவை, ஒளி, உணர்வு, ஓசை, நாற்றம்), விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துயரம், கட்டமைக்கப்பட்டுள்ள உடல், அறிதல் அல்லது உணர்தல், உறுதி இவற்றைக் கொண்டு க்ஷேத்திரம் என்ற இந்த உடல் அதன் மாறுபாடுகளுடன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

8-12. பணிவு, செருக்கின்மை, அஹிம்சை, சகிப்புத்தன்மை, நேர்மை, குருவுக்கு சேவை செய்தல், தூய்மை, உறுதி, சுயக் கட்டுப்பாடு, வைராக்கியம் (புலனுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களில் பற்றின்றி இருத்தல்), அகங்காரமின்மை (தான் என்ற உணர்வின்றி இருத்தல்), பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் இவற்றால் விளையும் துயரம், வலி இவற்றை எப்போதும் உணர்ந்திருத்தல், பற்றில்லாமல் இருந்து கொண்டு, மனைவி, மக்கள், குடும்பம், மற்ற உறவுகளிடம் அதிக ஒட்டுதல் இன்றி, பிடித்த, பிடிக்காத நிகழ்வுகளைச் சமநிலையில் எதிர் கொண்டு கொண்டு, மனத்தை வேறு திசைகளில் செலுத்தாமல் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் தனிமையான இடங்களை விரும்பி அமைதியாக இருந்து கொண்டு, எப்போதும் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்தபடி, ஆன்மீகம் பற்றிய அறிவிலும், உண்மையை விளக்கும் தத்துவங்களிலும் ஈடுபாடு கொண்டிருத்தல் இவை மட்டும்தான் அறிவு, மற்றவை அனைத்தும் அறியாமை.   

13. அறியப்பட வேண்டியது எது, எதை அறிந்தால் மரணமற்ற நிலை கிடைக்கும் என்பதை நான் இப்போது கூறுகிறேன். துவக்கமற்ற அது என்னை உயர்ந்த பொருளாகக் கொண்டது. இருப்பவை, இல்லாதவை இண்டுக்கும் அப்பாற்பட்ட அது பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

14. அதற்கு எல்லா இடங்களிலும் கைகளும், கால்களும் உண்டு. எங்கும் கண்கள், தலைகள், வாய்கள், காதுகள் கொண்டு, அது எல்லா இடங்களையும் வியாபித்தபடி இவ்வுலகில் இருக்கிறது.

15. அது எல்லாப் புலன்களுக்கும், எல்லா குணங்களுக்கும் மூலம், ஆயினும் அது புலன்கள் இல்லாதது. எதிலும் பற்றில்லாமல் இருக்கிறது, ஆயினும் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறது, ஆயினும் எல்லா குணங்களையும் அனுபவிப்பதாக இருக்கிறது.

16. அசையும் மற்றும் அசையாத எல்லாப் பொருட்களுக்கு உள்ளேயும், வெளியிலும் அது இருக்கிறது. அது நுணுக்கமானது என்பதால் அறிய முடியாததாக இருக்கிறது. அது வெகு தொலைவிலும், மிக அருகிலும் இருக்கிறது.

17. அது பிரிக்கப்பட முடியாதது, ஆனால் எல்லாப் பொருட்களுக்குள்ளும் பிரிந்திருக்கிறது, எல்லாவற்றையும் தாங்குகிறது, ஆயினும் எல்லாவற்றையும் தன்னுள் விழுங்குவது என்றும், எல்லாவற்றையும் படைப்பது என்றும் அறியப்படுகிறது.

18. ஒளி தரும் பொருட்களுக்கெல்லாம் ஒளியாக, இருளைக் கடந்ததாக அது இருக்கிறது. அது அறிவாகவும், அறியப்பட வேண்டியதாகவும், அறிவின் நோக்கமாகவும் இருக்கிறது. அது அனைவரின் இதயங்களுக்குள்ளும் உள்ளது.

19. இவ்வாறு க்ஷேத்ரம், அறிவு, அறியப்பட வேண்டியது ஆகியவை என்னால்  விவரிக்கப்பட்டுள்ளன. என்னிடம் பக்தி செலுத்துபவன் இதை அறிந்த பிறகு என் இயல்பை அடைவான்.

20. பிரகிருதி (பஞ்ச பூதங்களால் ஆன உலகம்), புருஷன் (ஆத்மா ) இருவருமே ஆரம்பம் இல்லாதவர்கள் என்று அறிவாயாக. எல்லா மாற்றங்களும் குணங்களும் பிரகிருதியிலிருந்தே உருவானவை.

21. செயல்களையும் அவற்றுக்கான காரணங்களையும் உருவாக்குவது பிரகிருதியின் பொறுப்பு என்றும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதை  உருவாக்குவது புருஷனின் பொறுப்பு என்றும் கூறப்பட்டிருக்கிறது.

22. பிரகிருதியில் (உடலில்) இருக்கும் புருஷன் பிரகிருதியால் உருவாக்கப்பட்ட மூன்று குணங்களையும் நிச்சயமாக அனுபவிக்கிறான். குணங்களுடனான தொடர்பு நல்ல பிறப்புகளுக்கும் தீய பிறப்புகளுக்கும் காரணமாகிறது.

23. உடலில் இருந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கட்டுப்படுத்திக் கொண்டும், ஆதரித்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இருக்கும் மகேஸ்வரான பரமாத்மா புருஷன் என்று அழைக்கப்படுகிறார்.

24. புருஷன், பிரகிருதி மற்றும் குணங்களை இவ்விதமாகப் புரிந்து கொண்டவன் எந்த நிலையில் இருந்தாலும் மீண்டும் பிறக்க மாட்டான்.

25. சிலர் புருஷனாகிற ஆத்மாவை தியானத்தால் அறிகிறார்கள். சிலர் தங்களுக்குள் இருக்கும் ஆத்மாவைத் தானே (உணர்ந்து) அறிகிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும்,  இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவை அறிகிறார்கள்.

26. மற்றவர்கள் இந்த வழிகள் எதையும் அறியாமல் மற்றவர்களிடம் கேட்டதை வைத்து (என்னை) வணங்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் கூடக் கேள்வி ஞானத்தின் மூலமே மரணத்தை வெல்லும் நிலையை அடைகிறார்கள்.

27. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகில் தோன்றியது எதுவும், அது அசையும் பொருளாயிருந்தாலும், அசையாப் பொருளாயிருந்தாலும், அது க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞர் இரண்டும் இணைந்த தன்மை கொண்டதுதான் என்பதை அறிவாயாக.

28. எல்லாப் பொருட்களுக்குள்ளும் சமமாக வசித்து வரும் பரம்பொருளை அழிபவற்றுக்குள் இருக்கும் அழியாத பொருளாக எவன் பார்க்கிறனோ அவனே (உண்மையாக) பார்க்கிறான்.

29. எல்லா இடங்களிலும் சமமாக நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளை  எங்கும் சமமாகப் பார்ப்பவன் தன் ஆத்மாவைத் தாழ்த்துவதில்லை. அதன் விளைவாக அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

30, பிரகிருதி மட்டுமே எல்லாச் செயல்களையும் செய்வதாகவும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதாகவும் எவன் பார்க்கிறானோ, அவன் பார்க்கிறான்.

31.தனித்தனியான  பல்வேறு உயிர்களும்,பிற பொருள்களும் ஒரே பொருளில் நிலைபெற்று அதனிடமிருந்து விரிந்து பெருகுவதை ஒருவன் உணரும்போது அவன் பிரம்மத்தை அடைகிறான்.

32. குந்தியின் மைந்தனே!  ஆரம்பமும் முடிவும் இல்லாத, மாற்றமடையாத, குணங்கள் இல்லாத பரமாத்மா உடலில் இருந்தாலும், அது எதையும் செய்வதில்லை, எதனாலும் களங்கப்படுவதுமில்லை.

33. எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் (இடம் -  space)) எப்படி எதனாலும் களங்கப்படுவதில்லையோ, அது போல் ஆத்மா உடலில் எல்லா இடத்திலும் இருந்தாலும் அது களங்கப்படுவதில்லை.

34. பரத வம்சத்திவனே! ஒரு சூரியன் இந்த உலகம் முழுமைக்கும் ஒளியூட்டுவது போல், க்ஷேதரக்ஞன் (ஆத்மா), க்ஷேத்ரம் (உடல்) முழுவதற்கும் ஒளியூட்டுகிறான்.

35. க்ஷேத்ரத்துக்கும் க்ஷேத்ரக்ஞனுக்கும் உள்ள வேறுபாட்டைத் தன் அறிவினால் (சிந்தனையால்) உணர்ந்து, இந்த பிரகிருதியிலிருந்து விடுதலை பெறும் முறையையும் அறிபவர்கள் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். 


Thursday, December 17, 2020

13. 12ஆவது அத்தியாயம் - பக்தி யோகம்

1. அர்ஜுனன் கூறினான்:
உன்னையே (உன் வடிவத்தை) எப்போதும் வணங்குபவர்கள், உன் எல்லையற்ற, வடிவற்ற நிலையை வழிபடுபவர்கள் என்ற இரண்டு வகை பக்தர்களில் எந்த வகையினர் யோகப் பயிற்சியில் சிறந்தவர்கள்?

2. பகவான் கூறினார்:
என்னிடம் மனத்தைச் செலுத்தி, பக்தியுடனும், சிரத்தையுடனும் என்னை எப்போதும் வணங்குபவர்களே யோகத்தில் சிறந்து விளங்குபவர்களாக என்னால் கருதப்படுவார்கள்.

3, 4. ஆயினும், அழிவற்ற, வரையறுக்க முடியாத, எங்கும் நிறைந்திருக்கும், எண்ணங்களால் உணர முடியாத, மாறாத, அசைக்க முடியாத, நிலையான பரம்பொருளை, தங்கள் புலன்களை அடக்கி, எல்லா இடங்களிலும் சமநிலையில் இருந்து, எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டு வழிபடுபவர்களும் என்னிடம்தான் வருகிறார்கள். 

5. வடிவம் இல்லாத பரம்பொருளை வழிபடுவதில் மனத்தைச் செலுத்தி இருப்பவர்களுக்கு அது அதிகக் கடினமாக இருக்கும். உடலுடன் வாழ்பவர்களுக்கு (வடிவில்லாத) அந்த இலக்கை அடைவதில் முன்னேற்றம் காண்பது கடினமானது.

6, 7.  ஆனால், எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, என்னிடம் ஈடுபாடு கொண்டு, வேறு சிந்தனையின்றி, பக்தி யோகத்தால் என்னையே தியானிப்பவர்களை இறப்பு என்னும் உலக வாழ்க்கைக் கடலிலிருந்து விரைவிலேயே மீட்பவனாக நான் இருப்பேன், பார்த்தா!  

8. உன் மனத்தை என்னிடம் நிலை பெறச் செய்து உன் அறிவையும் என்னிடத்தில் செலுத்து. அதற்குப் பிறகு நீ என்னிடம் வசிப்பாய். இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

9. தனஞ்சயா! உன் மனத்தை முழுமையாக என்னிடம் செலுத்த முடியாவிட்டால், பக்தி யோகத்தைப் பயிற்சி செய். இவ்விதமாக, என்னை அடைவதற்கான விருப்பத்தை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும்.

10. உன்னால் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்ய முடியாவிட்டால், நீ செய்யும் செயல்களை என் பணியாகக் கருதி, அவற்றை எனக்கு அர்ப்பணித்துச் செயல்படு. எனக்காகப் பணி செய்வதால் நீ முழுமை அடைவாய்.

11. இதைச் செய்வது கூட உனக்கு இயலாவிட்டால்,உன் செயல்களின் பலன்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு என்னைச் சரணடை.

12. பயிற்சியை விட ஞானம் நிச்சயம் உயர்ந்ததுதான். ஆனால் ஞானத்தை விட தியானம் உயர்ந்தது. செயல்களின் பலன்களைத் தியாகம் செய்வது தியானத்தை விட உயர்ந்தது. பலன்களைத் தியாகம் செய்வதால் அமைதி கிட்டும். 

13, 14. பொறாமை உணர்வு இன்றி, எல்லா உயிர்களிடமும் அன்பும், கருணையும் கொண்டு, எதையும் தனக்குச் சொந்தமென்று நினைக்காமல், அகங்காரம் இல்லாமல், இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையிலும், பிறர் குற்றங்களைப் பொறுக்கும் மனநிலையுடனும், எப்போதும் திருப்தியுடனும் இருந்து கொண்டு, உறுதியான மனத்துடன் யோக நிலையில் இருந்து கொண்டு, தன் மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணித்து இருக்கும் பக்தன் என்னால் விரும்பப்படுபவனாக இருப்பான்.

15. உலகுக்கு (மற்றவர்களிக்கு)த் தொந்தரவாக இல்லாமலும், உலகத்தால் (மற்றவர்களின் செயல்களால்) பாதிக்கப்படாமலும், மகிழ்ச்சி, கோபம், பயம், உத்வேகம் (அதீதமான உற்சாகம், கவலை, படபடப்பு போன்றவை) ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் இருப்பவன் எனக்கு விருப்பமானவன்.   

16. எதிர்பார்ப்புகள் இல்லாதவனாக, தூய்மையானவனாக, திறமையுடன் செயல்படுபவனாக, கவலைகள் இல்லாதவனாக, துயரப்படாதவனாக, எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணிப்பவனாக இருக்கும் என் பக்தன் எனக்கு விருப்பமானவன்.

17. விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, சோகம் ஆகியவை இல்லாத, நன்மை-தீமை இரண்டையும் ஒன்றாகக் கருதும் பக்திமான் எனக்கு விருப்பமானவன்.

18, 19. நண்பனிடமும் எதிரியுடனும் சமமாக நடந்து கொண்டு, கௌரவம் அவமானம் இரண்டையும் ஒன்றாகக் கருதி, வெப்பம் - குளிர், சுகம் - துக்கம் இவற்றைச் சமநிலையில் எதிர்கொண்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு, புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதி,  மௌனமாகவும் (அதிகம் பேசாமல்), திருப்தியுடனும், எந்த ஒரு இருப்பிடத்தையும் நிலையானதாகக் கருதாமல், உறுதியான சிந்தனையுடன் என்னிடம் பக்தியில் ஈடுபட்டிருப்பவன் எனக்கு விருப்பமானவன்.

20. உயர்ந்ததான தர்மத்தை விதிக்கப்பட்டுள்ளபடி பின்பற்றி, என்னை உயர்ந்த பரம்பொருளாக நினைத்து உறுதியுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எனக்கு மிகவும் விருப்பமானவன்.

அத்தியாயம் 13 - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் 

Thursday, December 10, 2020

12.11 ஆவது அத்தியாயம் - விஸ்வரூப தரிசனம்

1. அர்ஜுனன் கூறினான்:
என்னை உய்விக்கும் விதமாக ஆதியான பொருள் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களை நீ கூறியதால் என் மாயை அகன்று விட்டது.

2. தாமரைக் கண்ணா! எல்லாப் படைப்புகளும் உருவாவது பற்றியும், அழிவது பற்றியும், உன் அழிவற்ற உயர்வுகளைப் பற்றியும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்டறிந்தேன்.

3. பரமேஸ்வரா! உன் ஆத்ம நிலை பற்றி நீ விரிவாக விளக்கினாய். ஆயினும், புருஷோத்தமா, உன் தெய்வீக வடிவை நான் காண விரும்புகிறேன்.

4. பிரபு, யோகேஸ்வரா! என்னால் அந்த வடிவைக் காண முடியும் என்று நீ கருதினால், உன் பிரம்ம வடிவத்தை எனக்குக் காட்டு.

5. பகவான் கூறினார்:
பார்த்தா! என் கோடிக்கணக்கான, பல்வகையான வண்ணமயமான தெய்வீக வடிவங்களைப் பார்.

6. ஆதித்யர்கள் (அதிதியின் 12 புதல்வர்கள்), வசுக்கள் (எட்டு வசுக்கள்), ருத்ரர்கள் (11 ருத்ரர்கள்), அஸ்வினிகள் (இரட்டையரான அஸ்வினி தேவதைகள்), மருத்துக்கள் (ஒன்பது மருத்துக்கள்) ஆகியோரைப் பார். பரத வம்சத்தவனே! நீ இதுவரை பார்க்காத கணக்கற்ற அற்புதங்களைப் பார்.

7. குடகேசா (தூக்கத்தை வென்றவனே)! அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் கொண்ட அண்டம் முழுவதையும் இன்னும் நீ பார்க்க விரும்பும் எதையும் ஒரே இடத்தில் என் உடலில் இப்போது பார்.

8. ஆனால் உன்னுடைய இயல்பான கண்களால் என்னை உன்னால் பார்க்க முடியாது. எனவே என் யோக ஐஸ்வரியத்தைப் பார்க்க உனக்கு நான் தெய்வீகக் கண்களை வழங்குகிறேன்.

9. சஞ்சயன் கூறினான்:
அரசே! இவ்வாறு கூறி விட்டு, மகாயோகியான ஹரி (விஷ்ணு) அர்ஜுனனுக்குத் தன் உயர்ந்த, எல்லாம் நிறைந்த தோற்றத்தைக் காட்டினார்.

10. கணக்கிட முடியாத எண்ணிக்கையில் அற்புதத் தோற்றங்களாக, எண்ணற்ற வாய்கள், கண்கள், பல தெய்வீக ஆபரணங்கள், தாக்கத் தயாரான நிலையில் பல பெரிய ஆயுதங்கள் ஆகியவற்றை அர்ஜுனன் பார்த்தான்.

11. பல தெய்வீக மாலைகளையும், உடைகளையும் அணிந்து, பல தெய்வீக நறுமணப் பொருட்களையும், சாந்துகளையும் பூசிக்கொண்டு எல்லையற்றதாகவும், வியப்பூட்டுவதாகவும், எங்கும் நிறைந்ததாகவும் இருந்தது அவருடைய தோற்றம். 

12. ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றினால் அவற்றின் ஒளி ஒருவேளை அந்தப் பரம்பொருளின் தோற்றத்துக்கு ஒப்பானதாக இருக்கலாம்.

13. இப்போது அந்த தேவர்களுக்கெல்லாம் தேவனின் உடலில் அண்டம் முழுவதையும் அதன் பல பிரிவுகளாக ஒரே இடத்தில் அர்ஜுனன் பார்த்தான்.

14. அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு ஆச்சரியத்தால் திக்குமுக்காடிய அர்ஜுனன், புளகாங்கிதத்தால் தன் உடலிலிருந்த ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிற்க, தன் முன் நின்ற கடவுளான கண்ணனைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, கை கூப்பியபடி அவரிடம் கூறினான்

15. அர்ஜுனன் கூறினான்:
தேவனே! உன் உடலில் எல்லா தேவர்களையும், பல்வகை உயிர்களையும் பார்க்கிறேன். தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், சிவனையும், பல தெய்வீக முனிவர்களையும், பாம்புகளையும் பார்க்கிறேன்.

16, எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், வாய்கள், கண்கள் ஆகியவற்றை நான் பார்க்கிறேன். முடிவற்ற உருவத்துடன் நீ எங்கும் இருக்கிறாய். பிரபஞ்சத்தின் நாயகனே! அண்டம் தழுவிய உன் உருவத்தின் துவக்கம், நடு, முடிவு எதையும் என்னால் காண முடியவில்லை.

17. உன் கிரீடங்கள், கதைகள், சக்கரங்கள் ஆகியவற்றால், உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுகிறது. அளவிட முடியாத சூரியனைப் போன்ற உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுவதால் உன்னைக் காண்பது எனக்குக் கடினமாக இருக்கிறது.

18. நீ அழிவில்லாதவன், அறியப்பட வேண்டிய இறுதியான உண்மை நீயே. இந்த உலகம் முழுவதும் ஓய்வெடுப்பது உன்னிடம்தான். என்றும் நிலையான தர்மத்தைக் காப்பவன் நீயே. நீதான் மிகவும் பழமையானவன் என்று நான் உறுதியாக அறிகிறேன்.

19. துவக்கம், நடு, முடிவு இவை எதுவும் இல்லாதவனாகவும், எல்லையற்ற சக்தி கொண்டவனாகவும், எண்ணில்லாத கரங்களையும், சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவனாகவும் உன்னை நான் பார்க்கிறேன். உன் வாய்களுக்குள்ளிருந்து ஒரு பிரகாசமான நெருப்பு வீசிக் கொண்டிருக்கிறது. உன் உள்ளொளியால் இந்த அண்டம் முழுவதையும் நீ வெப்பமாக வைத்திருக்கிறாய்.

20. ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் அனைத்திலும், எல்லாத் திசைகளிலும் நீ வியாபித்திருக்கிறாய். பரமாத்மாவே! வியப்பும் அச்சமும் ஊட்டும் உன்னுடைய இந்தத் தோற்றத்தைக் கண்டு மூவுலகங்களும் அச்சத்தினால் நடுங்குகின்றன.

21. விண்ணுலகில் உள்ள தேவர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக உனக்குள் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் பயத்துடன் உன்னைக் கை கூப்பி வணங்கிப் பிரார்தனை செய்கிறார்கள். பல முனிவர்களும், சித்தர்களும்  வேதங்களில் உள்ள ஸ்தோத்திரங்களைக் கூறி உன்னைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

22. (பதினோரு) ருத்ரர்கள், (பன்னிரண்டு) ஆதித்யர்கள், (எட்டு) வசுக்கள், சாத்யர்கள், வசுதேவர்கள், (இரட்டையரான) அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அரக்கர்கள், சித்தர்கள் அனைவரும் உன்னை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

23. சக்தி வாய்ந்த கரங்களைக் கொண்டவனே! இத்தனை முகங்கள், கண்கள், வலுவான கரங்கள், கால்கள், பாதங்கள், வயிறுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்ட உன் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து எல்லா உலகங்களும் நடுங்குகின்றன, நானும் நடுங்குகிறேன்.

24, 25. ஓ, விஷ்ணுவே! பலவேறு வண்ணங்களுடனும், அகலத் திறந்த வாய்களுடனும், ஒளி விடும் பரந்த கண்களுடனுமான விண்ணை முட்டும் உன் விஸ்வரூபத்தைக் கண்டு என் மனத்தில் அச்சம் ஏற்பட்டு, என் உறுதியும், சமநிலையும் குலைந்து போயிருக்கின்றன. அச்சமூட்டும் பற்களுடன் பிரளய கால நெருப்பு போல் என் முன் நிற்பது போல் தோற்றமளிக்கும் உன் முகத்தைப் பார்த்த பிறகு எனக்கு திக்குத் திசை தெரியவில்லை, அமைதி கிட்டவில்லை. எல்லோருக்கும் ஈசனே! எல்லா உலகங்களிலும் வசிப்பவனே! என் மீது கருணை காட்டு.

26, 27. திருதராஷ்டிரரின் புதல்வர்கள், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் எங்கள் தரப்பிலுள்ள படைத்தலைவர்கள் ஆகியோர், அச்சமூட்டும் பற்கள் நிறைந்த உன் வாய்க்குள் வேகமாகப் புகுந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் உன் பற்களுக்கிடேயே தங்கள் தலைகள் நசுக்கப்பட்டு அங்கேயே சிக்கி இருக்கிறார்கள்.

28. நதிகளிலிருந்து பல்வேறு நீரோட்டங்கள் கடலை நோக்கிச் செல்வது போல், மனிதர்கள் வாழும் உலகிலிருந்து இந்த வீரர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் தீப்பிழம்பாகத் திகழும் உன் வாய்களுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். 

29. விட்டில் பூச்சிகள் தங்கள் அழிவைத் தேடி எரியும் நெருப்பை நோக்கி அதி வேகத்துடன் செல்வது போல், இந்த மனிதர்களும் அழிவதற்காக உன் வாய்களுக்குள் அதி வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.

30. இவர்கள் அனைவரையும் எல்லாத் திசைகளிலிருந்தும் நெருப்பாகக் கனல் விடும் உன் வாய்களுக்குள் நீ உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய். ஓ, விஷ்ணு! நெருப்பாகக் கனலும் உன் ஒளிக்கதிர்களால் இந்த அண்டம் முழுவதும் ஒளியும் வெப்பமும் பெற்று விளங்குகிறது.

31. இந்த பயங்கர உருவத்தில் இருக்கும் நீ யார் என்பதை எனக்கு தயவு செய்து விளக்கு. எல்லோருக்கும் இறைவனான உன்னை வணங்குகிறேன். என்னிடம் கருணை காட்டு. ஆதிமூலமான உன்னை நான் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். உன் இயல்பையும், செயல்முறையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

32. பகவான் கூறினார்:
நான் எல்லா உலகங்களையும் அழிக்கும் கொடுமையான காலம். இப்போது நான் மனிதர்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளேன். நீ இல்லா விட்டாலும் எதிர் எதிர் சேனைகளில் உள்ள எல்லா வீரர்களும் அழிக்கப்படுவார்கள்.

33. எனவே, எழுந்து போய்ப் போர் செய்து புகழடைந்து, உன் எதிரிகளை வென்று அளவற்ற செல்வம் கொண்ட நாட்டை ஆள்வாயாக. சவ்யசாசி (இரு கைகளுள் எதனாலும் அம்பு செலுத்தும் திறமை பெற்றவனே)! முன்னமே உருவாக்கப்பட்ட என் திட்டத்தால் அந்த வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ ஒரு கருவிதான்.

34. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே சஞ்சலம் கொள்ளாதே! போரில் ஈடுபடு. உன் எதிரிகளை நீ நிச்சயம் அழிப்பாய்.

35. சஞ்சயன் கூறினான்:
கேசவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அர்ஜுனன் தன் கைகளைக் கூப்பிக்கொண்டு, உடல் நடுங்கியபடி கிருஷ்ணரை மீண்டும் மீண்டும் வணங்கி விட்டு உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினான்:

36. அர்ஜுனன் கூறினான்:
ரிஷிகேஸா (புலன்களுக்கு ஈசனே)! உன் மேன்மைகளால் இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியூட்டப்பட்டு, உன்னிடம் கவர்ந்து இழுக்கப்படுவது இயல்புதானே! அரக்கர்கள் எல்லாப் புறங்களிலும் பறந்து கொண்டிருக்க, சித்தர்கள் கூட்டம் கூட்டமாக உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

37. மஹாத்மாவே! அவர்கள் ஏன் உன்னை வணங்க மாட்டார்கள்? நீ பிரம்மாவை விட உயர்ந்தவன், ஆதியான பரம்பொருள், எல்லையற்றவன். தேவர்களுக்கெல்லாம் தேவன். உலகுக்கு அடைக்கலம் அளிப்பவனே! நீ அழிவற்றவன், காரணம் நீ, காரியம் நீ, இவை இரண்டையும் கடந்து நிற்பவனும் நீ.

38. நீ மூலமான கடவுள், பழமையானவன், எல்லாவற்றுக்கும் மேலானவன், இந்த உலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஆதாரமானவன், அனைத்தையும் அறிபவன், அறியப்பட வேண்டியவன், சென்றடையப்பட வேண்டிய உயர்ந்த இடம். உன் முடிவற்ற வடிவங்களால் எல்லா உலகங்களும் வியாபிக்கப்பட்டுள்ளன.

39. வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரம்மா, எல்லாருக்கும் மூதாதையர் நீயே! உன்னை  ஆயிரம் முறை வணங்குகிறேன். திரும்பத் திரும்ப உன்னை வணங்குகிறேன்.

40. முன்புறத்திலிருந்தும், பின்புறத்திலிருந்தும் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் உன்னை வணங்குகிறேன். அளவற்ற திறனுடனும், எல்லையற்ற சக்தியுடனும் நீ எங்கும் நிறைந்திருக்கிறாய். எல்லாமே உன்னால் சூழப்பட்டுள்ளன. எல்லாமே நீதான்.

41. உன் மேன்மையை அறியாமல், என்னை அறியாமலோ அல்லது உன் மேல் இருக்கும் அன்பினாலோ என் நண்பனே என்றும், கிருஷ்ணா என்றும், யாதவா என்றும் பலவிதமாக உன்னை நான் அழைத்திருக்கிறேன்.

42. அச்சுதா! விளையாடும்போதோ, படுத்திருக்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உணவு உண்ணும்போதோ, தனியாக இருக்கும்போதோ, மற்ற நண்பர்களுடன் இருக்கும்போதோ, உன்னைச் சிறுமைப்படுத்தும் விதமாகவோ, மரியாதைக் குறைவாகவோ நான் நடந்து கொண்டிருந்தால், அளவிட முடியாதவனே, என்னை மன்னிப்பாயாக.

43. அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உள்ளிட்ட இந்த உலகம் முழுவதற்கும் தந்தை நீ. வணங்கப்பட வேண்டியவன் நீ, ஆசான் நீ, புகழுக்குரியவன் நீ. இந்த மூன்று உலகங்களிலும் உனக்குச் சமமானது எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில், எல்லையற்ற சக்தி கொண்டவனே! உன்னை விட உயர்வானது வேறு எது இருக்க முடியும்?

44. எனவே, என் உடலை உன் காலடியில் வைத்து உன்னை வணங்கி, உன் அருளை வேண்டுகிறேன். ஒரு தந்தை தன் மகனையும், ஒருவன் தன் நண்பனையும், ஒரு காதலர் தான் காதலிப்பவரையும்  மன்னிப்பது போல் என்னை மன்னிப்பாயாக.  

45. இதுவரை எப்போதும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே சமயம் என் மனது கலக்கமடைந்து பயத்துடனும், கவலையுடனும் இருக்கிறது. தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகத்தின் இருப்பிடமே! ஆகவே, உன் இயல்பான தெய்வீக உருவத்தை எனக்குக் காட்டு.

46. திருமுடி அணிந்தும், கைகளில் கதை மற்றும் சங்குடனுமான உன் இயல்பான உருவத்தைக் காண விரும்புகிறேன்.ஆயிரம் கரங்கள் கொண்டவனே! நான்கு கரங்களுடனான உன் முந்தைய உருவத்தை எடுத்துக் கொள்.

47. பகவான் கூறினார்:
அர்ஜுனா! என் மேலான இந்த உருவத்தை என் ஆத்ம யோகத்தின் சக்தியால் மனம் மகிழ்ந்து நான் உனக்குக் காட்டினேன். ஒளி மிகுந்த, எல்லையற்ற, ஆதியான இந்த விஸ்வரூபத்தை உனக்கு முன் வேறு யாரும் பார்த்ததில்லை.

48. குரு வம்சத்தவரில் சிறந்தவனே! வேதங்களைக் கற்பதன் மூலமோ, யாகங்கள் செய்வதன் மூலமோ, தானங்கள் செய்வதன் மூலமோ, சடங்குகளைச் செய்வதன் மூலமோ அல்லது பல்வகைத் தவங்களைச் செய்வதன் மூலமோ  என்னைக் காண முடியாது.  இந்தப் பூவுலகில் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய இந்த உருவத்தைக் கண்டதில்லை

49. என்னுடைய இந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து மயக்கமோ, கலக்கமோ அடையாதே! பயங்களிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான மனத்துடன் என்னுடைய இந்த உருவத்தை மீண்டும் பார்.

50. சஞ்சயன் கூறினான்;
இவ்வாறு கூறிய பிறகு, வாசுதேவர் தன் இயல்பான (நான்கு கரங்களுடன் கூடிய) உருவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார். பிறகு, மீண்டும் தன் இனிமையான (இரண்டு கரங்களுடனான) வடிவத்தை எடுத்துக்கொண்டு அந்த மஹாத்மா அச்சமடைந்திருந்த அர்ஜுனனை அமைதிப்படுத்தினார்.

51. அர்ஜுனன் கூறினான்:
ஜனார்த்தனா! இந்த உன் இனிமையான மானுட உருவத்தைப் பார்த்ததும், என் மனம் அமைதி அடைந்து விட்டது. நான் என்  இயல்பான நிலைக்கு வந்து விட்டேன்.

52.  பகவான் கூறினார்:
நீ இப்போது காணும் (இரண்டு கரங்களுடனான) என்னுடைய தோற்றத்தைக் காண்பது மிகவும் கடினம். தேவர்கள் கூட இந்த என் வடிவத்தைக் காண எப்போதும் விழைகின்றனர்.

53. வேதங்களைக் கற்பதாலோ, கடுமையான தவத்தாலோ, தர்மங்கள் செய்வதாலோ, வேறு சடங்குகள் செய்வதாலோ நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விதமான என் தோற்றத்தைக் காண முடியாது.

54. ஆனால், பரந்தபா! (எதிரிகளை வெல்பவனே)! வேறு எதிலும் நாட்டமில்லாத, மனம் ஒருமித்த பக்தியால் என்னுடைய இந்த வடிவத்தை அறிய முடியும், காண முடியும், இதற்குள் நுழையவும் முடியும்.

55. ஆயினும், பாண்டவனே! என்னையே அடைய வேண்டிய உயர்ந்த நோக்கமாகக் கருதி, என் பொருட்டே தன் கர்மங்களைச் செய்தபடி, பலன்களில் பற்றை விட்டு, எந்த உயிரிடமும் விரோதம் பாராட்டாமல் இருப்பவன் என்னை அடைவான்.  

12ஆவது அத்தியாயம்









Friday, November 20, 2020

11. 10 ஆவது அத்தியாயம் - பிரம்மத்தின் பெருமைகள்

1. பகவான் கூறினார்:
வலுவான கரங்களை உடையவனே! எனக்குப் பிரியமானவானான உனக்கு நன்மை பயப்பதற்காக நான் கூறப்போகும் உயர்வான வார்த்தைகளை மீண்டும் கேள். 

2. என்னுடைய பெருமையை தேவர்களோ, முனிவர்களோ கூட அறிய மாட்டார்கள். எல்லா வகைகளிலும், தேவதைகள் மற்றும் மாமுனிவர்களின் மூலம் நான்தான்.

3. என்னைப் பிறப்பற்றவனாக, துவக்கம் இல்லாதவனாக, எல்லா உலகங்களுக்கும் இறைவனாக எவனொருவன் அறிகிறானோ, அவன் மனிதர்களுக்குள் அறியாமையற்றவனாகவும், எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கியவனாகவும் இருக்கிறான். 

4, 5. புத்திக் கூர்மை, அறிவு (கல்வியறிவு), அறியாமை மற்றும் மாயையிலிருந்து விடுபடுதல், கருணை, உண்மை, சுயக் கட்டுப்பாடு, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அச்சம், துணிவு, அஹிம்சை, மனதைச் சமநிலையில் வைத்திருத்தல், திருப்தி அடைதல், தவம், தர்மம், புகழ், அவமானம் என்று பல மாறுபட்ட தன்மைகளும் என்னிடமிருந்து பிறந்தவைதான்.

6. சப்த ரிஷிகள் (அகஸ்தியர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர் என்ற ஏழு உயர்ந்த முனிவர்கள்) அவர்களுக்கு முன்பு வந்த நான்கு மனுக்கள் (ஸ்வயம்புவர், ஸ்வரோசிதர், ரைவதர், உத்தமர்) ஆகியோர் என் மனதிலிருந்து தோன்றியவர்கள்தான். இந்த உலகில் உள்ள மக்கள் எல்லாம் அவர்களின் வழித்தோன்றல்கள்தான். 

7. என்னுடைய மேன்மையையும், யோக சக்தியையும் அறிந்தவன் மனத்தை அலைய விடாமல் பக்தியில் நிலைத்திருப்பான். இதில் எந்த ஐயமும் இல்லை.

8. எல்லாவற்றுக்கும் மூலமான சக்தி நான்தான். என்னிடமிருந்துதான் எல்லாம் உருவாகின்றன. இந்த ஞானத்தைப் பெற்றவர்கள் ஒருமித்த சிந்தனையுடன் என்னை வணங்குகிறார்கள்.

9. தங்கள் மனத்தை முழுவதும் என்னிடம் நிலை பெறச் செய்தவர்களாக, தங்கள் வாழ்க்கையை எனக்கு அர்ப்பணித்தவர்களாக, என்னைப் பற்றிய அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டவர்களாக, என்னைப் பற்றிய விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டு அவர்கள் திருப்தியுடனும், மகிழ்ச்சியடனும் இருக்கிறார்கள்.

10. எப்போதும் என்னிடம் அன்புடன் பக்தி செலுத்தி வருபவர்களுக்கு, அவர்கள் என்னிடம் வருவதற்கான உண்மையான ஞானத்தை நான் கொடுக்கிறேன்.

11. அவர்களிடம் கருணை கொண்டு அறியாமையால் அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் இருளை அவர்கள் மனதில் ஒளி விடும் ஞான விளக்கின் மூலம் நான் போக்குகிறேன்.

12, 13. அர்ஜுனன் கூறினான்:
நீதான் உயர்ந்த பிரம்மம், உயர்ந்த இடம், தூய்மையானவன், உயர்ந்த புருஷன், நிரந்தரமானவன், அனைத்தையும் கடந்து நிற்பவன், ஆதியான தெய்வம், பிறவியற்றவன் எங்கும் நிறைந்திருப்பவன் என்றெல்லாம் உயர்ந்த முனிவர்களான நாரதர், அசிதர், தேவலர், வியாசர் ஆகியோர் உன்னைப் பற்றிக் கூறுகிறார்கள்.  இப்போது நீயே இவ்வாறு என்னிடம் கூறுகிறாய்.

14. கேசவா! நீ சொன்ன இவை அனைத்தையும் உண்மையென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். பகவானே, உன் தெய்வீக மஹாத்மியத்தை தேவர்களோ, தானவர்களோ (அரக்கர்கள்) அறியமாட்டார்கள்.

15. புருஷோத்தமா! எல்லாவற்றுக்கும் மூலமானவனே! எல்லாவற்றுக்கும் இறைவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகத்தின் நாயகனே! நீ மட்டுமே உன்னை அறிவாய்.

16. நீ எல்லா உலகங்களுக்குள்ளும் பரவி அவற்றில் இருந்து கொண்டிருப்பதற்கு அடிப்படையாக விளங்கும் உன் தெய்வீக சக்திகளைப் பற்றி எனக்கு விரிவாகக் கூறு.

17. ஓ, உயர்ந்த யோகியே! எப்போதும் உன்னை தியானிப்பதன் மூலம் உன்னை நான் அறிவது எப்படி? பகவானே! எந்தெந்த வடிவங்களில் எல்லாம் உன்னை நான் தியானிக்க வேண்டும்? 

18. ஓ, ஜனார்த்தனா! உன்னுடைய யோக நிலை பற்றியும், உயர்வுகளைப் பற்றியும் மீண்டும் எனக்கு விவரமாகச் சொல். இந்த அமிர்தத்தை எவ்வளவு பருகினாலும் எனக்குத் திருப்தி ஏற்படாது.

19. பகவான் கூறினார்:
குரு வம்சத்தினருள் சிறந்தவனே! என் நிலைகளுக்கு எல்லையே இல்லை என்பதால், முக்கியமானதான என் தெய்வீக நிலைகள் பற்றி மட்டும் உனக்கு விளக்குகிறேன்.

20. குடகேசா (தூக்கத்தை வென்றவனே)! படைப்பின் எல்லாக் கூறுகளுக்குள்ளும் இருக்கும் ஆத்மா நான்தான். படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் துவக்கம் நான், அவற்றின் இடையில் இருப்பவன் நான், முடிவில் இருப்பவனும் நான்தான்.

21. ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு, ஒளி படைத்தவர்களுக்குள் நான் சூரியன், மருத்களுக்குள் (வாயு வடிவத்தில் உள்ளவை), நான் மரீசி, நட்சத்திரங்களுக்குள் நான் சந்திரன்.

22. வேதங்களுக்குள் நான் சாமவேதம், தேவர்களுக்குள் நான் வாசவன் (இந்திரன்), புலன்களுக்குள் நான் மனம், படைப்புகளுக்குள் நான் அறிவு.

23. ருத்ரர்களுக்குள் நான் சிவன், யக்ஷர்கள் மற்றும் அரக்கர்களுக்குள் நான் குபேரன், வசுக்களுக்குள் நான் அக்னி, மலைகளுக்குள் நான் மேரு.

24. பார்த்தா! புரோஹிதர்களுக்குள் நான் பிரஹஸ்பதி என்று அறிந்து கொள். படைத் தலைவர்களுக்குள் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளுக்குள் நான் சமுத்திரம்.

25. முனிவர்களுக்குள் நான் பிருகு. ஒலிகளுக்குள் நான் அனைத்தையும் கடந்து நிற்கும் ஓம் என்ற பிரணவ ஒலி. யாகங்களில் ஜபிக்கப்படும் இறை நாமம் நான் என்று அறிந்து கொள். அசையாப் பொருட்களுக்குள் நான் இமயமலை.

26. மரங்களுக்குள் நான் அரச மரம். தேவரிஷிகளுக்குள் நான் நாரதர், கந்தர்வர்களுக்குள் நான் சித்ரரதன், சித்தர்களுக்குள் நான் கபில முனி.

27. குதிரைகளுக்குள், பாற்கடலைக் கடந்தபோது வெளிப்பட்ட உச்சஸ்ரவஸ் நான் என்று அறிவாயாக. அரச யானைகளுக்குள், நான் ஐராவதம், மனிதர்களுக்குள் நான் அரசன்.

28. ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதம், பசுக்களுக்குள் நான் காமதேனு, படைப்புக்குக் காரணமானவர்களில், நான் காமதேவன், பாம்புகளில் நான் வாசுகி.

29. நாகர்களில் நான் அனந்தன், நீர்தேவதைகளில் நான் வருணன், பித்ருக்களுக்குள் நான் அர்யமா. தர்மத்தை நிலைநிறுத்துபவர்களில் நான் யமதர்மன்.

30. அசுரர்களுக்குள் நான் பிரஹ்லாதன்,கட்டுப்படுத்துபவைகளுக்குள் நான் காலம், மிருகங்களுக்குள் நான் சிங்கம் என்றும், பறவைகளுக்குள் நான் கருடன் என்றும் அறிவாயாக.

31. தூய்மைப்படுத்துபவற்றுக்குள் (அல்லது வேகமானவற்றுள் - பவனஹ என்ற வடமொழிச் சொல்லுக்கு இந்த இரு பொருட்களும் உண்டு) நான் காற்று, ஆயுதம் ஏந்துபவர்களுக்குள் நான் ராமன், நீர்ப் பிராணிகளில் நான் முதலை, நதிகளுக்குள் நான் கங்கை.

32. ஓ, அர்ஜுனா! எல்லாப் படைப்புகளுக்கும் துவக்கம், நடு, முடிவு எல்லாமே நான் என்று அறிவாயாக. ஞானங்களுக்குள் நான் ஆத்மஞானம், வாதங்களில் நான் முடிவான வாதம்.

33. எழுத்துக்களில் அகரம் நானே, இலக்கணச் சேர்க்கைகளில் நான் இரட்டை (வடமொழியில் ஒரு கூட்டுச் சொல் வடிவம்),முடிவற்ற காலம் நானே. படைப்பவர்களுக்குள் நான் பிரம்மா.

34. எல்லாவற்றையும் விழுங்கும் மரணம் நான்தான், நிகழப்போகும் செயல்களை உருவாக்குபவனும் நான்தான். பெண்களுக்குள் நான் புகழ், செல்வம், சிறப்பான பேச்சு, ஞாபகம், அறிவுக் கூர்மை, உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுமை.

35. சாம வேதத்தில் நான் பிருஹத் சாமம், சந்தங்களில் நான் காயத்ரி, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம்.

36. ஏமாற்றுபவர்களில் நான் சூதாட்டக்காரன், ஒளி விடுபவற்றின் ஒளி நான், வெற்றி நான், சாகசம் நான், வலுவானவர்களின் (வலுவானவற்றின்) வலிமை நான்.

37. விருஷ்ணிகளில் (விருஷ்ணியின் வம்சத்தினரில்) நான் வாசுதேவன் (கிருஷ்ணன்), பாண்டவர்களில் நான் தனஞ்ஜயன் (அர்ஜுனன்), முனிவர்களில் நான் வியாசர், கவிஞர்களில் நான் உசனர் (அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியர்)

38. தண்டிப்பவற்றுள் நான் தர்மத்தின் தடி. வெற்றி பெற விரும்பவர்களின் உத்தி நான். ரகசியங்களில் நான் மௌனம். அறிவுள்ளவர்களின் அறிவு நான்.

39. அர்ஜுனா! எல்லாப் படைப்புகளுக்கும் மூலமானவன் நானே, அசையும் மற்றும் அசையாத பொருட்களிலோ, உயிர்களிலோ நான் இல்லாதது எதுவும் இல்லை.

40. பரந்தபா (எதிரிகளை வெல்பவனே)! என் தெய்வீக மஹிமைகளுக்கு எல்லையே இல்லை. நான் இதுவரை கூறியவை என் அளவற்ற சக்திகளுக்கான சில உதாரணங்கள்தான்.

41. உண்மை, அழகு, சக்தி இவற்றிலிருந்து உருவான எந்த ஒரு படைப்பும் என் பிரகாசத்திலிருந்து உருவானது என்று அறிவாயாக.

42. ஆனால் இத்தனை விவரங்கள் உனக்கு எதற்கு? இந்த அண்டங்கள் அனைத்தையும் என் சிறு பகுதியால் வியாபித்து அவற்றை நான் தாங்குகிறேன்.

அத்தியாயம் 11

Friday, November 6, 2020

10. 9ஆவது அத்தியாயம் - அழிவற்ற பிரம்மம்

1. பகவான் கூறினார்:
என்னிடம் பொறாமை கொள்ளாதவனான உனக்கு மிகவும் ரகசியமான விஷயத்தையும் விவேகத்தையும் அளிக்கிறேன். இதை அறிந்து கொண்டால் இந்த உலக வாழ்க்கையின் துயரத்திலிருந்து நீ விடுபடுவாய்.

2. அறியப்படுபவற்றுக்கெல்லாம் தலையாயதான இந்த அறிவு ரகசியங்களுக்கெல்லாம் தலையாய ரகசியம், தலைசிறந்த தர்மம், நேரடியாக உணரக் கூடியது, தூய்மைப்படுத்துவது, கடைப்பிடிப்பதற்கு ஆனந்தமானது, என்றும் நிலைத்திருப்பது.   

3. எதிரிகளை வெல்பவனே! இந்த தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடையாமல் பிறப்பு இறப்பு என்னும் இந்த உலகப் பாதைக்குத் திரும்ப வருகிறார்கள்.

4. எல்லா உலகங்களும் என் வடிவற்ற தன்மையால் ஊடுருவப்பட்டிருக்கின்றன. எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுக்குள் இல்லை.

5. ஆயினும் எல்லாப் படைப்புகளும் என்னிடத்தில் வசிக்கவில்லை. என் அசாதாராணமான யோக நிலையைப் பார். எல்லாப் படைப்புகளையும் நான் தாங்கி நிற்கிறேன், ஆயினும் நான் அவற்றுக்குள் இல்லை!

6. எல்லா இடத்திலும் வீசிக் கொண்டிருக்கும் காற்று எப்போதும் வெளியில் இருப்பது போல், எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன.

7. ஓ, குந்தி மைந்தனே! ஒவ்வொரு கல்பத்தின் (நான்கு யுகங்கள் கொண்டது ஒரு கல்பம்) முடிவிலும் எல்லாப் படைப்புகளும் எனக்குள் ஒடுங்குகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் துவக்கத்திலும் அவற்றை நான் மீண்டும் படைக்கிறேன்.

8. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள என் இயல்பின்படி, இந்தக் கணக்கற்ற படைப்புகளை அவர்களின் / அவற்றின் இயல்புக்கேற்ப நான் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.

9. ஓ. தனஞ்சயா! எனக்கு எந்தப் பற்றும், விருப்பமும் இல்லாததால், என்னுடைய இந்தச் செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. 

10. அசையும் மற்றும் அசையாப் பொருட்களை இயற்கை என்னுடைய கட்டுப்பாட்டில் உருவாக்குகிறது. இதனால்தான் படைப்புச் சுழற்சி (பிறப்பு இறப்புச் சுழற்சி) நிகழ்கிறது.

11. நான் மனித உருவெடுத்து உலகில் அவதரிக்கும்போது, மூடர்கள் என்னை நிந்திக்கிறார்கள். நான் எல்லாப் படைப்புகளுக்கும் இறைவன் என்பதையும், நான் அனைத்துக்கும் மேலானவன் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

12. அடைய முடியாத ஆசைகளுடனும், பயன் தராத செயல்களுடனும், மாயையான அறிவுடனும் இந்த மனம் குழம்பிய மூடர்கள் அசுரர்கள் மற்றும் தீயவர்களின் இயல்பை மேற்கொள்கிறார்கள்.

13.ஆனால் பார்த்தா! தெய்வத்திடம் சரணடைந்த உயர்ந்த ஆத்மாக்கள் என்னை நிலையான மேலான சக்தி என்று உணர்ந்து மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் என்னிடம் பக்தி செலுத்துகிறார்கள்.

14. என் பக்தர்கள் எப்போதும் என் புகழைப் பாடிக்கொண்டு, உறுதியான மனத்துடனும், பணிவுடனும் என்னை எப்போதும் வணங்குகிறார்கள்.

15. மற்றவர்கள் என்னை ஞானமார்க்கத்தைப் பின்பற்றியோ, ஒன்றாகவோ, பலவாகவோ, அண்ட சராசரங்களின் வடிவாகவோ கருதி வணங்குகிறார்கள்.

16. யாகங்களில் செய்யப்படும் கர்மம் நான்தான். யாகம் நான்தான், யாகங்களில் படைக்கப்படும் பொருள் நான்தான், மருந்து நான்தான், மந்திரம் நான்தான், யாகத்தீயில் ஊற்றப்படும் நெய் நான்தான், யாகத்தீயும் நான்தான், யாகத்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருளும் நான்தான்.

17. இந்த உலகத்தின் தந்தை நான்தான், தாயும் நான்தான், உலகத்தை ஆதரிப்பவன் நான்தான், உலகத்தின் மூதாதையரும் நான்தான், அறியப்பட வேண்டியவன் நான்தான், புனிதமான ஓம் என்ற மந்திரமும் நான்தான், ரிக் வேதம் நான்தான், யஜூர்வேதம் நான்தான், சாமவேதமும் நான்தான்.

18. அடையப்பட வேண்டிய இலக்கு நான், காப்பவன் நான், எஜமானன் நான், சாட்சி நான், வசிக்குமிடம் நான், அடைக்கலம் நான், மிக நெருக்கமான நண்பன் நான், படைப்பு நான், அழிவு நான், அமருமிடம் நான், காரணம் நான், அழிவற்ற விதை நான்.

19. அர்ஜுனா! வெப்பத்தைக் கொடுப்பவன் நான். மழையைக் கொடுப்பவனும், நிறுத்தி வைப்பவனும் நான். மரணமற்ற தன்மை நான், மரணம் நான். இருப்பவை எல்லாம் நான், இல்லாதவை அனைத்தும் நான்.

20. மூன்று வேதங்களையும் அறிந்தவர்கள், சோம பானம் அருந்தியவர்கள், பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் யாகங்களின் மூலம் என்னை வணங்கி சொர்க்கத்தை வேண்டுகிறார்கள். தங்கள் புண்ணியத்தால் அவர்கள் இந்திர லோகத்தை அடைந்து அங்கே சொர்க்கலோகத்தின் இன்பங்களைத் துய்க்கிறார்கள். 

21. சொர்க்க லோகத்தின் இன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் அவர்கள் மீண்டும் இந்த உலகில் வந்து பிறக்கிறார்கள். இவ்வாறு மூன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றி, புலன் இன்பங்களை விரும்பியவர்களாக அவர்கள் இந்த உலகுக்கும் சொர்க்க லோகத்துக்கும் இடையே வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

22. என்னைத் தவிர வேறு எந்த சிந்தனையுமின்றி, என்னுடன் நிரந்தரமாக இருக்க விருப்பம் கொண்டு என்னிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு நான் உயர்ந்த நன்மையை வழங்குகிறேன்.

23. குந்தியின் மைந்தனே! வேறு தெய்வங்களை வணங்குபவர்கள் கூட, அவர்கள் தவறான விதத்தில் வழிபடுகிறார்கள் என்றாலும், என்னைத்தான் வணங்குகிறார்கள்,  

24. எல்லா யாகங்களிலும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களைப் பெறுபவன் நானே, எல்லா யாகங்களுக்கும் அதிபர் நானே. என்னை உண்மையாக அறியாதவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் விழுகிறார்கள்.

25. தேவதைகளை வணங்குபவர்கள் தேவதைகளிடம் செல்வர், பித்ருக்களை முன்னோர்களை) வணங்குபவர்கள் பித்ருக்களிடம் செல்வர், ஆவிகளை வணங்குபவர்கள் ஆவிகளிடம் செல்வர், என்னை வணங்குபவர்கள் நிச்சயம் என்னை வந்தடைவர்.

26. பக்தியுடன் எனக்கு அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் எதையும், அந்தத் தூய உள்ளம் கொண்ட ஆத்மாவிடமிருந்து நான் ஏற்றுக் கொள்வேன்.

27. குந்தியின் மைந்தனே! நீ எதைச் செய்தாலும், எதை உண்டாலும், யாகப் பொருளாக எதை வழங்கினாலும், எதை தானம் செய்தாலும், அதை எனக்கு அர்ப்பணித்து விடு.

28. இவ்விதமாக உன் நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளிலிருந்து நீ விடுபடுவாய். இத்தகைய துறவு மனநிலையைக் (சந்நியாச யோகம்) கடைப்பிடிப்பதால் நீ விடுதலை அடைந்தவனாக என்னை வந்தடைவாய்.

29. நான் எல்லாவற்றிலும் ஒரே விதமாக நிறைந்திருக்கிறேன். எனக்கு யாரிடமும் வெறுப்புமில்லை, விருப்புமில்லை. பக்தியுடன் என்னை வணங்குபவர்களிடத்தில் நான் இருக்கிறேன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.

30. ஒருவன் மிகவும் கொடிய செயல்களைச் செய்தாலும், அவன் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்னிடம் மட்டும் பக்தி செலுத்துபவனாக இருந்தால், அவன் சரியாக நிலை பெற்றிருப்பதால் அவன் உயர்ந்தவனாகவே (சாது என்றே) கருதப்பட வேண்டும்.

31. குந்தியின் மைந்தனே! அத்தகைய பக்தன் விரைவிலேயே அறத்தின் வழி நடப்பவனாகி, நிலையான அமைதியைப் பெறுகிறான். என் பக்தர்கள் எப்போதுமே அழிந்து போக மாட்டார்கள் என்பதை உணர்வாயாக.

32. ஓ, அர்ஜுனா! என்னிடம் சரணடைவதன் மூலம், பாவமான கருவின் முலம் பிறந்தவர்கள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் உயர்ந்த நிலையை அடைவர்.

33. என்னிடம் பக்தி செய்யும் அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் உயர்நிலையை அடைவார்கள் என்று தனியே கூற வேண்டியதில்லை. துன்பம் நிறைந்த, நிலையற்ற  இவ்வுலகில் பிறந்து விட்ட நீ என்னிடம் பக்தி செலுத்து.

34. எப்போதும் என்னையே நினைத்திரு, என் பக்தனாகி, என்னை வணங்கு. எனக்குள் முழுமையாக ஆழ்ந்திரு. நீ நிச்சயம் என்னை அடைவாய்.

அத்தியாயம் 10


Monday, October 26, 2020

9. எட்டாவது அத்தியாயம் - பிரம்மத்தை அடைதல்

1. அர்ஜுனன் கூறினான்:
புருஷோத்தமா! பிரம்மம் என்பது என்ன? ஆத்மா என்பது என்ன? பலன் தரும் செயல் (கர்மா) என்பது எது? எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்பது என்ன? மூலதெய்வம் என்பது என்ன?

2. மதுசூதனா! யாகங்களுக்கெல்லாம் மூலமானவன் இந்த உடலுக்குள் எங்கே எவ்வாறு இருக்கிறான்? தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள் தங்கள் இறுதிப் பயணத்தின்போது உன்னை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

3. பகவான் கூறினார்:
பிரம்மம் என்பது அழிவற்றது, மிக உயர்ந்தது. தன்னை அறிந்திருப்பதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. இனப்பெருக்கம் செய்வதும், உலகில் உள்ளவர்களையும், உள்ளவற்றையும் பேணி வளர்ப்பதும் பாதுகாப்பதும்தான் செயல் (கர்மா) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

4. மனிதர்களில் சிறந்தவனே! மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையவற்றின் மூலம் (ஆதிபூதம்) நான்தான். ஆத்மாதான் மூலதெய்வம் (ஆதி தெய்வம்). யாகங்களுக்கு மூலமாக உடலுக்குள் இருப்பவன் நான்தான் (ஆதியக்ஞம்).

5. தன் இறுதிக் காலத்தில் எவன் ஒருவன் என்னை நினைத்துக் கொண்டே இந்த உடலை விட்டு நீங்குகிறானோ, அவன் என்னுடைய இயல்பை அடைகிறான். இதில் எந்த வித ஐயமும் இல்லை.

6. குந்தியின் மைந்தனே! ஒருவன் தன் உடலை விட்டு நீங்கும்போது, எதைப் பற்றிச் சிந்திக்கிறானோ, அந்தச் சிந்தனையின் வடிவமாக ஆகிறான். 

7. எனவே அர்ஜுனா! நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டே போரில் ஈடுபடு. உன் அறிவையும் மனத்தையும் என்னிடம் அர்ப்பணித்தால் நீ ஐயமின்றி என்னை நிச்சயம் அடைவாய்.

8. பார்த்தா! யோகம் மற்றும் தியானம் மூலம், மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் உயர்ந்த பொருளான கடவுளை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைவான். 

9. எல்லாம் அறிந்தவரும், மிகவும் பழமையானவரும், உலகை இயக்குபவரும், அணுவை விடத் துல்லியமானவரும், எல்லாவற்றையும் தாங்கி நிற்பவரும், அறிய முடியாத வடிவம் கொண்டவரும், சூரியனைப் போல் ஒளி கொண்டவரும், உலகப் பொருட்களைக் கடந்து நிற்பவருமான கடவுளை தியானிக்க வேண்டும்.

10. இறக்கும் தருவாயில், மனதை அலைய விடாமல், பக்தியுடன், பயிற்சியால் கிடைத்த யோகத்தின் சக்தியால் மூச்சுக் காற்றை இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்துபவன் ஒளி பொருந்திய அந்த பிரம்மத்தை அடைகிறான்.

11.  எது வேதங்களை அறிந்தவர்களால் அழிவற்றது என்று கூறப்பட்டிருக்கிறதோ, எது புலன்களக் கட்டுப்படுத்தித் தவம் செய்பவர்களால் அடையப்படுகிறதோ, எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த (மேலான) உலகைப் பற்றி நான் உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். 

12. உடலில் உள்ள எல்லா துவாரங்களையும் மூடி, மனத்தை இதயத்திலும், மூச்சுக் காற்றை தலையின் உச்சியிலும் நிலை நிறுத்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

13. பிரம்மத்தைக் குறிக்கும் ஓம் என்ற ஒற்றையெழுத்தை உச்சரித்து, என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் எவரும் இந்த உடலை விட்ட பின் உயர்ந்த நிலையான வீடு பேற்றை அடைவர்.

14. ஒ, பார்த்தா! வேறு எந்த நினைவுமின்றி என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு யோகியால் என்னைச் சுலபமாக அடைய முடியும். 

15. என்னை அடைந்த பின் இந்த உயர்ந்த ஆத்மாக்கள் நிலையற்ற, வலி மிகுந்த இந்த உலகில் மீண்டும் பிறக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மிக உயர்ந்த நிலையை அடந்து விட்டார்கள்.

16. ஓ, அர்ஜுனா! பிரம்மலோகம் முதல் எல்லா உலகங்களில் இருப்பவர்களுக்கும் மறுபிறவி உண்டு. ஆனால், குந்திபுத்திரனே! என்னை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பது என்பது இல்லை.

17. பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் யுகங்கள் கொண்டது, அதே கால அளவு கொண்டதுதான் அவருடைய ஒரு இரவும் என்பதை அறிந்தவர்கள் பகலையும், இரவையும் அறிந்தவர்கள்

18. பிரம்மாவின் பகல் துவங்கும்போது, வடிவற்ற நிலையிலிருந்து உயிர்கள் பிறக்கின்றன. பிரம்மாவின் இரவு துவங்கும்போது, அவை வடிவற்ற நிலைக்குள் அடங்குகின்றன.

19. இந்தக் கணக்கற்ற உயிரினங்கள் இந்தப் பகல் பிறந்ததும் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள், இரவு வந்ததும் அழிந்து போய், பகல் வந்ததும் மீண்டும் பிறக்கிறார்கள்.

20. ஆயினும் எல்லா உயிர்களும் அழியும்போதும் அழியாத, என்றும் நிலைத்திருக்கும், தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தோற்றமற்ற, உயர்ந்த சக்தி இருக்கிறது.

21. அது தோற்றமில்லாதது என்றும், அழிவற்றது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுதான் அடைய வேண்டிய, அடைந்தபின் (பிறவிச் சுழற்சிக்கு) திரும்ப வராத இடம். அதுதான் என்னுடைய உயர்ந்த இடம்.

22. ஓ, பார்த்தா, தன்னை விட உயர்ந்ததாக எதுவும் இல்லாத அந்தப் பரமாத்மா எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறார். அவர் எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறார். ஒருமுகப்படுத்திய பக்தியால்தான் அவரை அடைய முடியும்.

23. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகை விட்டு நீங்கிய பிறகு யோகிகள் எப்போது திரும்ப வருவார்கள், எப்போது திரும்ப வர மாட்டார்கள் என்பதை நான் உனக்கு விளக்குகிறேன்.

24.  நெருப்பு, வெளிச்சம், பகல்வேளை, வளர்பிறை, உத்தராயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் நேரே பிரம்மத்தை அடைவார்கள்.

25. புகை, இரவுவேளை, தேய்பிறை, தக்ஷிணாயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் சந்திரனின் ஒளியை அடைந்து மீண்டும் பிறப்பார்கள்.  

26. ஒளி மற்றும் இருள் என்ற இந்த இரண்டு பாதைகள்தான் இவ்வுலகிலிருந்து செல்வதற்கு எப்போதுமே உள்ள வழிகள். முந்தைய பாதையில் செல்பவன் திரும்பி வர மாட்டான், பிந்தைய பாதையில் செல்பவன் திரும்ப வருவான்.

27. பார்த்தா! இந்த இரண்டு பாதைகளை அறிந்த எந்த ஒரு யோகியும் மதி மயங்க மாட்டான். எனவே, அர்ஜுனா, நீ எப்போதும் யோகப்பாதையிலேயே நிலைத்திரு.

28. இதை உணர்ந்த ஒரு யோகி வேதங்களைப் படிப்பதாலும், யாகங்களைச் செய்வதாலும், தவம், தானம் ஆகியவற்றால் கிடைக்கும் பலன்களுக்கும் மேலாக ஒரு உயர்ந்த நிலையை அடைகிறான்.

அத்தியாயம் 9


Friday, October 16, 2020

8. ஏழாவது அத்தியாயம் - ஞான யோகம்

1. பகவான் கூறினார்:
ஓ பார்த்தா! உன் மனத்தை என்னிடத்தில் செலுத்தி, யோகப்பயிற்சி செய்து, என்னைச் சரணடைந்து, எந்த ஒரு ஐயமும் இன்றி என்னை உன்னால் எப்படி முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதைக் கேள்.

2. இப்போது இந்த ஞானத்தையும் அதை முழுமையாக அடையும் விதத்தையும் உனக்கு விளக்குகிறேன். இதை அறிந்த பின், நீ அறிய வேண்டியது வேறு எதுவும் இருக்காது.

3. பல்லாயிரம் மனிதர்களில் ஒருவரே யோக நிலையை அடைய முயற்சி செய்கிறார். அதில் வெற்றி கண்டவர்களுக்குள்ளும் ஒருவரே என்னை உண்மையாக அறிகிறார். 

4. நிலம், நீர், தீ, காற்று, வெளி, மனம், ஆத்மா, அகங்காரம் இவை என் வெளிப்புற சக்தியின் எட்டு பிரிவுகளாகும். 

5. வலுவான கரங்களை உடையவனே, கீழ்நிலையில் உள்ள இந்த சக்தியைத் தவிர, உயர் நிலையில் இன்னொரு சக்தி உள்ளது என்பதை அறிவாயாக. அது இந்த உலகில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி வரும் உயிர்களைக் கொண்டது.

6. படைக்கப்பட்ட எல்லாமே என்னுடைய இந்த இரண்டு சக்திகளிலிருந்தும்தான் உருவானவை என்பதை அறிவாயாக. இந்த அண்டம் முழுவதையும் படைத்தவனும் நானே, அழிப்பவனும் நானே. 

7. ஓ, தனஞ்ஜயா! எனக்கு மேலாகவும், என்னை விட உயர்வானதாகவும் வேறொரு சக்தி இல்லை. இங்கே உள்ள அனைவரும்/ அனைத்தும் மாலையில் கோர்க்கப்பட்ட முத்துக்கள்போல் என்னுடன் பிணைந்துள்ளனர்.

8. குந்தி மைந்தனே! நீரின் சுவையாகவும், சூரிய சந்திரர்களின் ஒளியாகவும், எல்லா வேதங்களிலும் ஓம் என்ற பிரணவ மந்திரமாகவும், வெளியில் (ஆகாயத்தில்) ஒலியாகவும் மனிதனின் சக்தியாகவும் நான் இருக்கிறேன்.

9. பூமியின் இயல்பான மணமாகவும், தீயின் வெப்பமாகவும், எல்லா உயிரினங்களின் உயிராகவும், தவசிகளின் தவமாகவும் நான் இருக்கிறேன்.

10. அர்ஜுனா! நான் எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான வித்தாக இருக்கிறேன், அறிவுள்ளவர்களின் அறிவாக இருக்கிறேன், சக்தி உள்ளவர்களின் சக்தியாக இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்.

11. பரத வம்சத் தோன்றலே! நான் வலுவுள்ளவர்களின் வலுவாக இருக்கிறேன். ஆசைகளற்றவனாகவும் பற்றற்றவனாகவும் இருக்கிறேன். ஆனால் எல்லா உயிர்களுக்குள்ளும் தர்மத்துக்குப் புறம்பாக இல்லாத காம இச்சையாக இருக்கிறேன்.

12. சத்வ (தூய்மையான), ரஜோ (உணர்ச்சி மிகுந்த), தமோ (அறியாமையால் பீடிக்கப்பட்ட) குணங்களின் தன்மையில் அமைந்துள்ள எல்லாமே என்னிடமிருந்து உருவானவைதான் என்பதை அறிந்து கொள். அவை என்னுள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுள் இல்லை.

13. இந்த மூன்று குணங்களின் மாயையில் ஆழ்ந்திருக்கும் இந்த மொத்த உலகமும் இவற்றுக்கு அப்பால் இருக்கும், மாற்றத்துக்கு உட்படாத என்னை அறிய மாட்டா.

14. உண்மையில் இந்த குணங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்னுடைய இந்த தெய்வீக மாயையிலிருந்து மீள்வது கடினம். என்னைச் சரணடைந்தவர்களால் மட்டும்தான் இது இயலும்,

15. ஆனால் தீமை புரிபவர்களும், மூடர்களும், கீழ்த்தரமான மனிதர்களும் என்னைச் சரணடைய மாட்டார்கள். மாயையால் தங்கள் அறிவு கவரப்பட்டவர்களாக இவர்கள் அசுரத் தன்மையை மேற்கொள்வார்கள்.

16. பரத வம்சத்தில் பிறந்தவர்களுக்குள் சிறந்தவனே! நான்கு வகை பக்தர்கள் என்னை வணங்குகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்கள், ஞானத்தைத் தேடுபவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், ஞானிகள்.

17. இவர்களுக்குள் எப்போதும் பக்தியில் மட்டுமே ஈடுபட்டிருக்கும் ஞானிகள் சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில் நான் அவர்களிடம் அதிக அன்பு வைத்திருக்கிறேன், அவர்களும் என்னிடம் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள்.

18. இவர்கள் அனைவருமே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்தான். ஆயினும் என்னை அறிந்தவனை என்னைப் போன்றவனாகவே நான் கருதுகிறேன்.  ஏனெனில் அடைய வேண்டிய உயர்ந்த பொருள் நான் என்று உணர்ந்து அவன் என்னிடம் பக்தி செய்கிறான்.

19. பல பிறவிகளுக்குப் பிறகுதான் வாசுதேவன்தான் எல்லாம் என்று புரிந்து கொண்டு ஞானி என்னைச் சரணடைகிறான். ஆனால் அத்தகைய மகாத்மாக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவார்கள்.

20. உலகப் பொருட்களின் மீது ஆசை கொண்டதால் தங்கள் அறிவு திசை மாற்றப்பட்டவர்கள் அவர்கள் இயல்புக்கேற்றபடி சடங்குகள், நியமங்கள் மூலம் பிற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

21. ஒரு பக்தன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறைவனை எந்த வடிவத்தில் வழிபட விரும்பினாலும் அந்த வடிவத்தில் அவனுடைய நம்பிக்கையை நான் உறுதியாக்குகிறேன்.

22. அந்த பக்தியின் பயனாக அவன் தான் வணங்கும் தேவதையிடம் தான் விரும்பிய பலன்பளைக் கேட்டுப் பெறுகிறான். ஆயினும் அவை என்னால் வழங்கப்பட்டவையே.

23. அத்தகைய குறைந்த அறிவுடையவர்கள் குறைவான தற்காலிகமான பலன்களையே பெறுகிறார்கள். குட்டி தேவதைகளை வணங்குபவர்கள் அந்தக் குட்டி தேவதைகளின் இருப்பிடத்துக்குச் செல்கிறார்கள். என்னை வணங்குபவர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.

24. என் அழிவற்ற, உயர்ந்த தன்மையை அறியாதவர்கள் என்னை நான் எடுத்துக் கொண்டுள்ள வடிவமாகவே அறிகிறார்கள்.

25. யோக மாயையால் நான் மறைக்கப்பட்டிருப்பதால் என்னை எல்லோராலும் அறிய முடியாது. பிறப்போ, அழிவோ இல்லாத என்னை அறிவற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது. 

26. ஓ, அர்ஜுனா! கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் நான் அறிவேன். எல்லா உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறிய மாட்டார்கள்.

27. எதிரிகளை வெல்பவனே! பரத வம்சத்தவனே! விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு தன்மைகள் உருவாக்கும் மாயையால் எல்லா உயிர்களும் பிறக்கும்போதிலிருந்தே அறியாமையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  

28. ஆனால் நற்செயல்களைச் செய்து தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்றவர்கள் (விருப்பு வெறுப்பு என்ற) எதிரெதிரான இரண்டு குணங்களின் மாயையீலிருந்து விடுபட்டு என்னை எப்போதும் வணங்கி வருவார்கள்.

29. என்னைச் சரண்டைவதன் மூலம் முதுமை மற்றும் மரணத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் பிரம்மத்தையும், ஆத்மாவைப் பற்றிய முழு அறிவையும், செயல்கள் பற்றியும் அறிகிறார்கள்.

30. என்னை எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்றும் மூல தெய்வமென்றும், யாகங்களுக்கெல்லாம் அடிப்படை என்றும் அறிந்து கொள்பவர்கள் என்னை உறுதியாக நினைப்பதன் மூலம், இறக்கும் தருவாயிலும் என்னை அறிவார்கள்.

அத்தியாயம் 8





 

Tuesday, October 6, 2020

7. ஆறாவது அத்தியாயம் - தியான யோகம்

பகவான் கூறினார்:
1. நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை, பலனை எதிர்பார்க்காமல் செய்பவன்தான் உண்மையான துறவி மற்றும் யோகி, நெருப்பைப் பயன்படுத்தாமல் இருப்பவனோ, செயல் புரியாமல் இருப்பவனோ அல்ல.

2. பாண்டுவின் புதல்வனே! தன்னை பிரம்மத்துடன் இணைத்துக் கொள்ளும் யோகம்தான் துறத்தல் என்று போற்றப்படுகிறது என்று அறிவாயாக. செயல்களுக்கான பலன்களைத் துறக்காமல் ஒருவன் யோகி ஆக முடியாது.

3. தன்னை பிரம்மத்துடன் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள துறவிக்கு செயல்தான் வழி என்று கூறப்பட்டுள்ளது. தன்னை பிரம்மத்துடன் இணைப்பதில் முழுமை பெற்று விட்டவனுக்கு செயல் புரியாமல் இருப்பதுதான் வழி என்று கூறப்பட்டிருக்கிறது.

4. ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து, புலன்களைத் திருப்தி செய்வதற்காகவோ அல்லது பலன்களுக்காகவோ செயல் புரியாதபோதுதான், அவன் யோகத்தில் நிலை பெற்றதாகக் கருதப்படுகிறான்.

5. ஒருவன் தன்னைத் தன் ஆத்மாவினாலேயே உயர்த்திக் கொள்ள வேண்டும், தன்னையே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒருவனுக்கு நண்பனாக இருப்பது அவன் ஆத்மா, எதிரியாக இருப்பதும் அவன் ஆத்மாதான்.

6. தன் ஆத்மாவின் துணையுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஒருவனுக்கு அவன் ஆத்மாதான் சிறந்த நண்பன். ஆனால் தன்னை வெற்றி கொள்ளாத ஒருவனுக்கு அவன் ஆத்மா எதிரியாகத்தான் இருக்கும்.

7. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் குளிர்-வெப்பம், மகிழ்ச்சி-துயரம், மதிப்பு-இகழ்ச்சி ஆகிய இரட்டை நிலைகளைக் கடந்து பிரம்மத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

8. கல்வி அறிவினாலும், ஆத்ம ஞானத்தாலும் திருப்தி அடைந்தவன் புலன்களை வென்றவனாக பிரம்மத்தில் நிலைக்கிறான். அவன் தங்கம், மண், கல் அனைத்தையும் ஒன்றாகக் கருதுவான்.

9. தன் நலனை விரும்புபவர்கள், தன்னிடம் அன்பு காட்டி ஆதரிப்பவர்கள், நடுநிலையில் இருப்பவர்கள், மத்தியஸ்தம் செய்பவர்கள், விரோதிகள், நண்பர்கள், பொறாமை கொண்டவர்கள், பாவம் செய்தவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாக நினைப்பவன் இன்னும் மேம்பட்ட நிலையை அடைந்தவன்.

10. யோகநிலையை அடைய விரும்புபவன் ஒரு தனிமையான இடத்தில் தனியாக இருந்தபடி உடல், மனம், ஆத்மா அனைத்தையும் பிரம்மத்தில் நிலைபெறச் செய்து ஆசைகளிலிருந்தும், எதுவும் தனக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலிருந்தும் விடுபட்டவனாக இருக்க வேண்டும்.

11, 12. அதிக உயரத்திலோ, அதிகக் கீழாகவோ இல்லாத ஒரு இடத்தில் தர்ப்பைப் புல், மான் தோல் அல்லது துணியின் மீது அமர்ந்து மனம், புலன்கள், செயல்கள் இவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தியானம் செய்ய வேண்டும்.

13. உடல், நெற்றி, கழுத்து இவற்றை ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைத்துக் கொண்டு, உடல்  அசையாமல், மனத்தை வேறு எங்கும் அலைய விடாமல் மூக்கின் நுனியின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

14. அமைதியான மனத்துடன், அச்சம் இல்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில் உறுதியாக இருந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மனத்தைச் சமநிலையில் வைத்து என்னை மட்டுமே இலக்காகக் கருதி அமர்ந்திருக்க வேண்டும்.

15. இந்த வகையில் தொடர்ந்து உடல், மனம், செயல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, யோகி என்னுள் நிலை பெற்று முழு அமைதியை அடைகிறான்.

16. அர்ஜுனா! யோகம் என்பது அதிகம் உண்பவர்களுக்குக் கைவராது, மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் கைவராது. அது போல், அதிகம் தூங்குபவர்களுக்கோ, மிகவும் குறைவாகத் தூங்குபவர்களுக்கோ யோகம் சித்திக்காது.

17. உண்பதையும், சுகங்களை அனுபவிப்பதையும் கட்டுப்படுத்திக் கொண்டு, சமனமான நிலையில் செயல்பட்டு, விழித்துக் கொண்டிருப்பதற்கும், உறங்குவதற்கும் இடையே ஒரு சமன நிலையைக் கடைப்பிடிப்பவனுக்கு, யோகம் அவனுடைய எல்லாத் துயங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். 

18. ஒருவன் யோகத்தைப் பயிற்சி செய்து மனத்தை ஆத்மாவில் நிலை பெற்றிருக்கச் செய்து, வெளிப் பொருட்களின் மீதான விருப்பங்களால் ஈர்க்கப்படாமல் இருந்தால் அவன் யோகத்தில் நிலை பெற்றவன் ஆகிறான்.

19. காற்று இல்லாத இடத்தில் தன் சுடர் ஆடாமல் இருக்கும் ஒரு விளக்கு தன் மனதைக் கட்டுப்படுத்தி, பிரம்மத்துடன் இணைந்திருக்கும் யோகிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

20. யோகத்தினால் இவ்வாறு மனம் கட்டுப்படுத்தப்பட்டபோது ஆத்மா ஆத்மாவையே பார்த்து ஆத்மாவினாலேயே திருப்தி அடைகிறது.

21. அந்த நிலையில் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவை அறிவு உணர்ந்து, எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவித்து உண்மையிலிருந்து விலகாமல் இருக்கிறது.

22. அந்த நிலையில் ஒருவன் எல்லாம் கிடைத்து விட்டதை உணர்ந்து, இனி கிடைப்பதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, கடுமையான துயரங்களால் கூட பாதிக்கப்படாமல் இருக்கிறான்.

23. துன்பத்திலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நிலைதான் யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது உறுதியுடனும், அலைபாயாத மனநிலையுடனும் பின்பற்றப்பட வேண்டும்.

24. தொடர் முயற்சி, அர்ப்பண உணர்வு, உறுதியான நம்பிக்கை இவற்றின் மூலம் யோக நிலையை எப்போதும் நிலை நிறுத்த வேண்டும். மனத்தில் எழும் புலன் இன்ப ஆசைகளை எல்லாப் புறங்களிலிருந்தும் மனத்தினாலேயே கட்டுப்படுத்தி விலக்க வேண்டும்.

25. அறிவு மற்றும் ஆழ்ந்த தியானம் மூலம் சிறிது சிறிதாக, படிப்படியாக தனக்குள்ளே கவனம் செலுத்தி, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனதை முழுவதும் ஆத்மாவில் நிலை நிறுத்த வேண்டும்.

26.  மனம் வேறு எங்கோ செல்லும்போதெல்லாம், அதை உடனே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

27. இத்தகைய யோகி பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான். அவன் ஆசைகளிலிருந்து விடுபட்டு அமைதியுடனும், பாவத்திலிருந்து விடுபட்டும் இருக்கிறான்.

28. இவ்வாறு தொடர்ந்து யோகநிலையில் இருப்பவன் பாவங்களிலிருந்து விடுபட்டவனாக, பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்த்ததை அடைகிறான்.

29. உண்மையான யோகி எல்லாப் பொருட்களிலும் என்னைப் பார்க்கிறான், என்னிடம் எல்லாப் பொருட்களையும் பார்க்கிறான். உண்மையில் தன்னை அறிந்த ஒருவன் என்னை எங்கும் பார்க்கிறான்.

30. என்னை எல்லா இடங்களிலும் பார்ப்பவன், என்னில் எல்லாவற்றையும் பார்ப்பவன் என்னை விட்டு நீங்குவதில்லை, நானும் அவனை விட்டு நீங்குவதில்லை.

31. எல்லாப் பொருட்களுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா நானே என்பதை உணர்ந்து என்னை வணங்குபவன் எல்லாச் சூழல்களிலும் எனக்குள்ளேயே இருக்கிறான்.

32. ஓ, அர்ஜுனா! எவன் தன் ஆத்மாவுடன் ஒப்பிட்டு, மகிழ்ச்சியிலும், துயரத்திலும் எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கிறானோ, அவனே யோக நிலையில் மிக உயர்ந்தவன்.

33. அர்ஜுனன் கூறினான்:
ஓ, மதுசூதனா, மனத்தின் அலைபாயும் தன்மையையும், நிலையற்ற தன்மையையும் கருதும்போது, நீ குறிப்பிட்ட, சம நிலையில் பார்க்கும் யோகம் எனக்குப் புரியவில்லை.

34. ஓ, கிருஷ்ணா! உண்மையில், மனம் அலைபாயும் தன்மை உடையது, குழப்பம் மிகுந்தது, வலுவானது, மற்றும் கடினத்தன்மை கொண்டது. மனத்தைக் கட்டுப்படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவது போல் கடினமானது

35. பகவான் கூறினார்:
வலுவான கரங்களை உடையவனே! சந்தேகமில்லாமல், மனம் அலைபாயும் தன்மை கொண்டதுதான், கட்டுப்படுத்தக் கடினமானதுதான். ஆயினும், பயிற்சியாலும், பற்றற்ற நிலையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாலும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

36. மனம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்போது யோகத்தைக் கடைப்பிடிப்பது இயலாத செயல். மனத்தைக் கட்டுப்படுத்தி சரியான வழியில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.

37. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கிருஷ்ணா, நம்பிக்கையுடன் யோகத்தை அடைய முயற்சி செய்து, அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தன் முயற்சியில் தோல்வி அடைபவனின் கதி என்ன?

38. வலுவான கரங்களை உடையவனே! உலக இன்பங்களைக் கைவிட்டு, யோக நிலை அடையும் முயற்சியிலும் தோல்வியுற்று, இரண்டையும்  இழந்து போக்கிடமின்றி நிற்பவன் சிதறுண்ட மேகத்தைப் போல் கதியற்றுப் போக வேண்டியதுதானா?

39. ஓ, கிருஷ்ணா! என்னுடைய இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வை. உன்னைத் தவிர வேறு யாராலும் இதை விளக்க முடியாது.

40. பகவான் கூறினார்:
"பார்த்தா! நற்செயல்களில் ஈடுபடும் அத்தகைய யோகப் பயிற்சியாளனுக்கு இந்த உலகிலும் சரி, மேலுலகிலும் சரி  அழிவு ஏற்படாது. நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு எப்போதுமே தீங்கு ஏற்படாது.

41. யோக முயற்சியில் வெற்றி பெறாதவன் மரணத்துக்குப் பிறகு புண்ணியம் செய்தவர்கள் வாழும் உலகங்களில் பல வருடங்கள் வாழ்ந்த பின், பக்தி மிகுந்த, செல்வச் செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் மீண்டும் பிறப்பான்.

42. அல்லது அவன் மேன்மையான அறிவு படைத்த யோகிகளின் குடும்பத்தில் கூடப் பிறக்கலாம். ஆனால் இது போன்ற பிறப்பைப் பெறுவது மிகவும் அரிதான விஷயம்.

43. குரு வம்சத்தவனே! அப்போது அவன் தன் முந்தைய பிறப்பின் அறிவைத் திரும்பப் பெற்று, தன் நோக்கத்தை முழுமையாக அடைவதற்கு மீண்டும் முயற்சி செய்வான்.

44. தன் முந்தைய பிறப்பின் சாதனையின் விளைவாக, அவன் யோகப்பாதைக்கு ஈர்க்கப்படுகிறான். அத்தகைய ஆர்வமுள்ள ஞானத்தேடல் கொண்டவன் வேத மந்திரங்களின் சொற்களைத் தாண்டி ஞானம் பெறுகிறான்.

45. உறுதியுடன் முயற்சி செய்யும் யோகி பற்றுக்களிலிருந்து நீங்கி, பல பிறவிகளில் தன்னை முழுமையாகச் சீர்படுத்திக்கொண்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

46. யோகி தவசியை விட உயர்ந்தவன், ஞானியை விட உயர்ந்தவன், பலனை எதிர்பார்த்துச் செயல்படுபவனை விட உயர்ந்தவன். எனவே, அர்ஜுனா, நீ ஒரு யோகியாக இரு.

47. முழு நம்பிக்கையுடன் மனத்தில் என்னை நிறுத்தி, உண்மையாகவும், அர்ப்பணத்துடனும் என்னிடம் பக்தி செலுத்துபவன் எல்லா யோகிகளிலும் சிறந்த யோகியாகக் கருதப்படுவான்.

அத்தியாயம் 7


Saturday, September 5, 2020

6. ஐந்தாவது அத்தியாயம் - செயலும் துறத்தலும்

1. அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! முதலில் நீ செயலைத் துறப்பதின் பெருமையைக் கூறினாய். பிறகு, யோகநிலையில் செயல் புரிய வேண்டும் என்று கூறினாய். இரண்டில் எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்வாயா?

2. பகவான் கூறினார்:
2. செயலைத் துறத்தல், யோகநிலையில் செயல்படுதல் ஆகிய இரண்டுமே ஒருவனை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இவை இரண்டில், செயலைத் துறப்பதை விட, யோகநிலையில் செயல்படுவதே சிறப்பானது.

3. விருப்பு, வெறுப்பு இல்லாதவன்தான் எப்போதும் துறவு நிலையில் இருப்பான். ஏனெனில், எதிரெதிர் துருவங்களிலிருந்து விலகி இருப்பவன்தான் தளைகளிலிருந்து விடுபட்டிருப்பான்.

4. அறியாதவர்கள்தான் ஞானயோகம் (அதாவது  செயல்களின் பலனைத் துறத்தல்), கர்மயோகம் (அதாவது கடமையைச் செய்தல்) ஆகிய இரண்டும் வெவ்வேறு என்று  கூறுவார்கள். அறிந்தவர்கள் அப்படிக் கருத மாட்டார்கள். இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் உறுதியாக இருப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்.

5. ஞானயோகி அடையும் இடத்தை பக்தியோகியும் அடைகிறான். ஞானம், கடமையைச் செய்தல் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் சரியான பார்வையைக் கொண்டவன்.

6. ஆனால் அர்ஜுனா, யோகநிலை அடையாமல் செயலைத் துறக்க முயல்பவன் வருத்தத்தை அனுபவிப்பான். யோகத்தில் நிலைபெற்ற முனிதான் பிரம்மத்தை அடைகிறான்.

7. யோகத்தில் (பலனை எதிர்பாராத செயலில்) நிலைபெற்று, தூய்மையான மனம் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறமை கைவரப் பெற்றவனாக, தன் புலன்களை வென்று, தனக்குள் இருக்கும்  ஆத்மாவை உணர்ந்து, மற்றவர்களின் ஆத்மாவையும் உணர்ந்தவன் செயல்களில் ஈடுபட்டாலும், அதனால் அவன் களங்கமடைவதில்லை.

8. பார்க்கும்போதும், கேட்கும்போதும், தொடும்போதும், நுகரும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், தூங்கும்போதும், மூச்சு விடும்போதும் "நான் எதையும் செய்யவில்லை" என்பதுதான் உண்மையை உணர்ந்து சமநிலை அடைந்த மனம் உள்ளவனின் எண்ணமாக இருக்கும்.

9. விதிக்கப்பட்ட செயல்களைப் புரிபவன், புலன்களால் நுகரப்படும் செயல்களைப் புரிபவை புலன்கள்தான் என்ற உண்மையை அறிந்தவன், தான் எதையும் செய்வதாக அவன் எப்போதும் நினைப்பதில்லை - பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணுதல், நகர்தல், உறங்குதல், மூச்சு விடுதல், பேசுதல், மலம் கழித்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களை, தன் ஈடுபாடு இல்லாமலே கண்களை இமைப்பது போல் அவன் புரியும்போதும்.

10. தன் எல்லாச் செயல்களையும் பற்றில்லாமல் செய்து, அவற்றின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒருவன், தாமரை இலை நீரில் படாமல் இருப்பது போல் பாவத்தால் பாதிக்கப்படாமல் இருப்பான்.

11. யோகிகள் பற்றை விட்டு விட்டு, உடல், மனம், அறிவு மற்றும் புலன்களால் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான செயல்களை மட்டுமே செய்கிறார்கள்

12. யோகநிலை அடைந்தவன் தன் செயல்களின் பலன்களைத் துறந்தவனாக நிலையான அமைதியை அடைகிறான். ஆனால் யோகத்தில் நிலை பெறாதவன் தான் செய்யும் செயல்களுக்கான பலன்களில் பற்று வைத்து (அவற்றால்) கட்டுண்டவனாகிறான்.

13. மனதளவில் எல்லாச் செயல்களையும் கைவிட்டு, தன்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டு இருப்பவன் தான் எதையும் செய்கிறோம் அல்லது (உடலையோ, புலன்களையோ) செயல்பட வைக்கிறோம் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒன்பது வாசல்கள் கொண்ட ஊரில் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

14. உலகத்தின் செயல்களையோ, செய்விப்பவரையோ இந்த உடலுக்குரியவர் (ஆத்மா அல்லது பேருணர்வு) உருவாக்கவில்லை. செயல்களுக்கும் அவற்றின் பலன்களுக்குமான தொடர்பையும் அவர் உருவாக்கவில்லை. இவை ஒருவனின் இயல்பான குணங்களால் விளைகின்றன.

15. பேருணர்வு (ஆத்மா) ஒருவரின் நல்ல செயல்களுக்கோ, பாவச் செயல்களுக்கோ பொறுப்பேற்காது. உண்மையான அறிவு அறியாமையால் சூழப்பட்டிருக்கிறது. எனவே ஜீவர்கள் மாயையில் மூழ்கியிருக்கிறார்கள்.

16. சூரிய ஒளி உலகில் உள்ள பொருட்களைக் காட்டுவது போல், தன்னைப் பற்றிய அறிவினால் இந்த அறியாமை அழிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆத்மா புலப்படும். அவர்கள் இந்த உலகத்தை வெற்றி கொள்வார்கள்.

17. சிந்தனை மூலம் மாயையிலிருந்து விடுபட்டவர்களும், ஆத்மஞானம் பெற்றவர்களும், உள்ளிருக்கும் ஆத்மாவைக் குறித்துச் சிந்திப்பவர்களும், நம்பிக்கையில் நிலையாக இருப்பவர்களும், இறுதியான உண்மையிடம் முழுவதும் சரணடைந்தவர்களும் இவ்வுலக வாழ்வின் தளைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

18.  வேதம் கற்ற, பணிவுள்ள அந்தணன், பசு, யானை, நாய், கீழ்நிலையில் உள்ள பிராணி இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் சமமான நிலையில் இருப்பதை உணரும் ஒருவன்தான் உண்மையான அறிவு பெற்றவன்.

19. தங்கள் மனத்தைச் சமநிலையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பிறவியிலேயே இவ்வுலகை வெற்றி கொள்வர். அவர்கள் குற்றங்கள் நீங்கியவர்களாக பிரம்மத்தின் சமநிலையை அறிந்திருப்பதால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

20. பிரம்மத்தில் முழுமையாக நிலை பெற்று, நிலையான அறிவு பெற்று, மாயைகளிலிருந்து முழுவதும் விடுபட்டு, பிரம்மஞானியாக இருப்பவன் இனிமையான விஷயங்கள் கிடைப்பதால் குதூகலிக்கவும் மாட்டான், கசப்பான விஷயங்கள் கிடைப்பதால் வருந்தவும் மாட்டான்.

21. புலன்களால் துய்க்கப்படும் பொருட்களில் மனதைச் செலுத்தாதவன் ஆத்மசுகத்தை அனுபவிப்பான். தன் உணர்வறிவை பரந்த அறிவான பிரம்மத்துடன் யோகத்தால் இணைப்பவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்பான்.

22. குந்தியின் மைந்தனே! புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்களின் தொடர்பால் கிடைக்கும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணமாக அமைகின்றன. அவை நிச்சயம் நிலையற்றவை. அவற்றுக்கு ஒரு துவக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஆத்மஞானம் பெற்றவன், அறிவாளியாக இருப்பவன் அவற்றில் ஈடுபட மாட்டான்.

23. இந்தப் பிறவியிலேயே இந்த உடல் அழிவதற்கு முன் ஆசை, கோபம் இவற்றினால் எழும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தவன் யோக நிலையடைந்து மகிழ்ச்சியாக வாழ்வான்.

24. மனத்தை ஆத்மாவில் இருத்தி உள்ளுக்குள் இருக்கும் ஒளியைக் காண்பவன், அத்தகைய ஆனந்தத்தை அனுபவிப்பவன், பிரம்மத்தை உணர்ந்து ஆத்ம விடுதலை பெற்றவன் ஆகிறான்.

25. சந்தேகங்களினால் எழும் இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, மனத்தை உள்ளிருத்தி, மற்ற எல்லா உயிர்களின் நலன்களுக்காக எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டிருக்கும் மனிதர்கள் பிரம்மத்தில் நிலை பெற்றவர்களாக இருப்பார்கள்.

26. கோபத்திலிருந்து விடுபட்டு, உலகப் பொருட்களின் மீது ஆசை இல்லாதவர்களாக, தன்னை உணர்ந்து, சுயக்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள முயன்றபடியும் இருப்பவர்கள் விரைவிலேயே  விடுதலை பெற்று பிரம்மத்தை அடைவார்கள்.

27, 28. புலன்களுக்கு இன்பமளிக்கும் தேவையற்ற பொருட்களைத் தன் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, கண்களை இமைகளுக்கு நடுவில் இருக்கும் புள்ளியில் நிலை நிறுத்தி, உள்ளிழுக்கும் மூச்சையும், வெளிவிடும் மூச்சையும் கட்டுப்படுத்திச் சமன் செய்பவன், மனம், புலன்கள், அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்று, விடுதலை பெறுவதில் ஈடுபாடு கொண்டவனாகி, ஆசைகள், பயம், கோபம் இவற்றை விட்டு, எப்போதுமே விடுதலை பெற்ற நிலையை அடைகிறான்.

29. எல்லா யாகங்களிலும், தவங்களிலும் அளிக்கப்படுபவற்றைப் பெறுபவனாகவும், எல்லா உலகங்களுக்கும் அதிபதியாகவும், எல்லா உயிர்களுக்கும் நண்பனாகவும், நலன் விரும்பியாகவும் விளங்குபவன் நானே என்று அறிபவன் அமைதியை அடைகிறான்.