Tuesday, October 6, 2020

7. ஆறாவது அத்தியாயம் - தியான யோகம்

பகவான் கூறினார்:
1. நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை, பலனை எதிர்பார்க்காமல் செய்பவன்தான் உண்மையான துறவி மற்றும் யோகி, நெருப்பைப் பயன்படுத்தாமல் இருப்பவனோ, செயல் புரியாமல் இருப்பவனோ அல்ல.

2. பாண்டுவின் புதல்வனே! தன்னை பிரம்மத்துடன் இணைத்துக் கொள்ளும் யோகம்தான் துறத்தல் என்று போற்றப்படுகிறது என்று அறிவாயாக. செயல்களுக்கான பலன்களைத் துறக்காமல் ஒருவன் யோகி ஆக முடியாது.

3. தன்னை பிரம்மத்துடன் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள துறவிக்கு செயல்தான் வழி என்று கூறப்பட்டுள்ளது. தன்னை பிரம்மத்துடன் இணைப்பதில் முழுமை பெற்று விட்டவனுக்கு செயல் புரியாமல் இருப்பதுதான் வழி என்று கூறப்பட்டிருக்கிறது.

4. ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து, புலன்களைத் திருப்தி செய்வதற்காகவோ அல்லது பலன்களுக்காகவோ செயல் புரியாதபோதுதான், அவன் யோகத்தில் நிலை பெற்றதாகக் கருதப்படுகிறான்.

5. ஒருவன் தன்னைத் தன் ஆத்மாவினாலேயே உயர்த்திக் கொள்ள வேண்டும், தன்னையே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒருவனுக்கு நண்பனாக இருப்பது அவன் ஆத்மா, எதிரியாக இருப்பதும் அவன் ஆத்மாதான்.

6. தன் ஆத்மாவின் துணையுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஒருவனுக்கு அவன் ஆத்மாதான் சிறந்த நண்பன். ஆனால் தன்னை வெற்றி கொள்ளாத ஒருவனுக்கு அவன் ஆத்மா எதிரியாகத்தான் இருக்கும்.

7. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் குளிர்-வெப்பம், மகிழ்ச்சி-துயரம், மதிப்பு-இகழ்ச்சி ஆகிய இரட்டை நிலைகளைக் கடந்து பிரம்மத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

8. கல்வி அறிவினாலும், ஆத்ம ஞானத்தாலும் திருப்தி அடைந்தவன் புலன்களை வென்றவனாக பிரம்மத்தில் நிலைக்கிறான். அவன் தங்கம், மண், கல் அனைத்தையும் ஒன்றாகக் கருதுவான்.

9. தன் நலனை விரும்புபவர்கள், தன்னிடம் அன்பு காட்டி ஆதரிப்பவர்கள், நடுநிலையில் இருப்பவர்கள், மத்தியஸ்தம் செய்பவர்கள், விரோதிகள், நண்பர்கள், பொறாமை கொண்டவர்கள், பாவம் செய்தவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாக நினைப்பவன் இன்னும் மேம்பட்ட நிலையை அடைந்தவன்.

10. யோகநிலையை அடைய விரும்புபவன் ஒரு தனிமையான இடத்தில் தனியாக இருந்தபடி உடல், மனம், ஆத்மா அனைத்தையும் பிரம்மத்தில் நிலைபெறச் செய்து ஆசைகளிலிருந்தும், எதுவும் தனக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலிருந்தும் விடுபட்டவனாக இருக்க வேண்டும்.

11, 12. அதிக உயரத்திலோ, அதிகக் கீழாகவோ இல்லாத ஒரு இடத்தில் தர்ப்பைப் புல், மான் தோல் அல்லது துணியின் மீது அமர்ந்து மனம், புலன்கள், செயல்கள் இவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தியானம் செய்ய வேண்டும்.

13. உடல், நெற்றி, கழுத்து இவற்றை ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைத்துக் கொண்டு, உடல்  அசையாமல், மனத்தை வேறு எங்கும் அலைய விடாமல் மூக்கின் நுனியின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

14. அமைதியான மனத்துடன், அச்சம் இல்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில் உறுதியாக இருந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மனத்தைச் சமநிலையில் வைத்து என்னை மட்டுமே இலக்காகக் கருதி அமர்ந்திருக்க வேண்டும்.

15. இந்த வகையில் தொடர்ந்து உடல், மனம், செயல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, யோகி என்னுள் நிலை பெற்று முழு அமைதியை அடைகிறான்.

16. அர்ஜுனா! யோகம் என்பது அதிகம் உண்பவர்களுக்குக் கைவராது, மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் கைவராது. அது போல், அதிகம் தூங்குபவர்களுக்கோ, மிகவும் குறைவாகத் தூங்குபவர்களுக்கோ யோகம் சித்திக்காது.

17. உண்பதையும், சுகங்களை அனுபவிப்பதையும் கட்டுப்படுத்திக் கொண்டு, சமனமான நிலையில் செயல்பட்டு, விழித்துக் கொண்டிருப்பதற்கும், உறங்குவதற்கும் இடையே ஒரு சமன நிலையைக் கடைப்பிடிப்பவனுக்கு, யோகம் அவனுடைய எல்லாத் துயங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். 

18. ஒருவன் யோகத்தைப் பயிற்சி செய்து மனத்தை ஆத்மாவில் நிலை பெற்றிருக்கச் செய்து, வெளிப் பொருட்களின் மீதான விருப்பங்களால் ஈர்க்கப்படாமல் இருந்தால் அவன் யோகத்தில் நிலை பெற்றவன் ஆகிறான்.

19. காற்று இல்லாத இடத்தில் தன் சுடர் ஆடாமல் இருக்கும் ஒரு விளக்கு தன் மனதைக் கட்டுப்படுத்தி, பிரம்மத்துடன் இணைந்திருக்கும் யோகிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

20. யோகத்தினால் இவ்வாறு மனம் கட்டுப்படுத்தப்பட்டபோது ஆத்மா ஆத்மாவையே பார்த்து ஆத்மாவினாலேயே திருப்தி அடைகிறது.

21. அந்த நிலையில் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவை அறிவு உணர்ந்து, எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவித்து உண்மையிலிருந்து விலகாமல் இருக்கிறது.

22. அந்த நிலையில் ஒருவன் எல்லாம் கிடைத்து விட்டதை உணர்ந்து, இனி கிடைப்பதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, கடுமையான துயரங்களால் கூட பாதிக்கப்படாமல் இருக்கிறான்.

23. துன்பத்திலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நிலைதான் யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது உறுதியுடனும், அலைபாயாத மனநிலையுடனும் பின்பற்றப்பட வேண்டும்.

24. தொடர் முயற்சி, அர்ப்பண உணர்வு, உறுதியான நம்பிக்கை இவற்றின் மூலம் யோக நிலையை எப்போதும் நிலை நிறுத்த வேண்டும். மனத்தில் எழும் புலன் இன்ப ஆசைகளை எல்லாப் புறங்களிலிருந்தும் மனத்தினாலேயே கட்டுப்படுத்தி விலக்க வேண்டும்.

25. அறிவு மற்றும் ஆழ்ந்த தியானம் மூலம் சிறிது சிறிதாக, படிப்படியாக தனக்குள்ளே கவனம் செலுத்தி, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனதை முழுவதும் ஆத்மாவில் நிலை நிறுத்த வேண்டும்.

26.  மனம் வேறு எங்கோ செல்லும்போதெல்லாம், அதை உடனே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

27. இத்தகைய யோகி பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான். அவன் ஆசைகளிலிருந்து விடுபட்டு அமைதியுடனும், பாவத்திலிருந்து விடுபட்டும் இருக்கிறான்.

28. இவ்வாறு தொடர்ந்து யோகநிலையில் இருப்பவன் பாவங்களிலிருந்து விடுபட்டவனாக, பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்த்ததை அடைகிறான்.

29. உண்மையான யோகி எல்லாப் பொருட்களிலும் என்னைப் பார்க்கிறான், என்னிடம் எல்லாப் பொருட்களையும் பார்க்கிறான். உண்மையில் தன்னை அறிந்த ஒருவன் என்னை எங்கும் பார்க்கிறான்.

30. என்னை எல்லா இடங்களிலும் பார்ப்பவன், என்னில் எல்லாவற்றையும் பார்ப்பவன் என்னை விட்டு நீங்குவதில்லை, நானும் அவனை விட்டு நீங்குவதில்லை.

31. எல்லாப் பொருட்களுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா நானே என்பதை உணர்ந்து என்னை வணங்குபவன் எல்லாச் சூழல்களிலும் எனக்குள்ளேயே இருக்கிறான்.

32. ஓ, அர்ஜுனா! எவன் தன் ஆத்மாவுடன் ஒப்பிட்டு, மகிழ்ச்சியிலும், துயரத்திலும் எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கிறானோ, அவனே யோக நிலையில் மிக உயர்ந்தவன்.

33. அர்ஜுனன் கூறினான்:
ஓ, மதுசூதனா, மனத்தின் அலைபாயும் தன்மையையும், நிலையற்ற தன்மையையும் கருதும்போது, நீ குறிப்பிட்ட, சம நிலையில் பார்க்கும் யோகம் எனக்குப் புரியவில்லை.

34. ஓ, கிருஷ்ணா! உண்மையில், மனம் அலைபாயும் தன்மை உடையது, குழப்பம் மிகுந்தது, வலுவானது, மற்றும் கடினத்தன்மை கொண்டது. மனத்தைக் கட்டுப்படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவது போல் கடினமானது

35. பகவான் கூறினார்:
வலுவான கரங்களை உடையவனே! சந்தேகமில்லாமல், மனம் அலைபாயும் தன்மை கொண்டதுதான், கட்டுப்படுத்தக் கடினமானதுதான். ஆயினும், பயிற்சியாலும், பற்றற்ற நிலையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாலும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

36. மனம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்போது யோகத்தைக் கடைப்பிடிப்பது இயலாத செயல். மனத்தைக் கட்டுப்படுத்தி சரியான வழியில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.

37. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கிருஷ்ணா, நம்பிக்கையுடன் யோகத்தை அடைய முயற்சி செய்து, அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தன் முயற்சியில் தோல்வி அடைபவனின் கதி என்ன?

38. வலுவான கரங்களை உடையவனே! உலக இன்பங்களைக் கைவிட்டு, யோக நிலை அடையும் முயற்சியிலும் தோல்வியுற்று, இரண்டையும்  இழந்து போக்கிடமின்றி நிற்பவன் சிதறுண்ட மேகத்தைப் போல் கதியற்றுப் போக வேண்டியதுதானா?

39. ஓ, கிருஷ்ணா! என்னுடைய இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வை. உன்னைத் தவிர வேறு யாராலும் இதை விளக்க முடியாது.

40. பகவான் கூறினார்:
"பார்த்தா! நற்செயல்களில் ஈடுபடும் அத்தகைய யோகப் பயிற்சியாளனுக்கு இந்த உலகிலும் சரி, மேலுலகிலும் சரி  அழிவு ஏற்படாது. நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு எப்போதுமே தீங்கு ஏற்படாது.

41. யோக முயற்சியில் வெற்றி பெறாதவன் மரணத்துக்குப் பிறகு புண்ணியம் செய்தவர்கள் வாழும் உலகங்களில் பல வருடங்கள் வாழ்ந்த பின், பக்தி மிகுந்த, செல்வச் செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் மீண்டும் பிறப்பான்.

42. அல்லது அவன் மேன்மையான அறிவு படைத்த யோகிகளின் குடும்பத்தில் கூடப் பிறக்கலாம். ஆனால் இது போன்ற பிறப்பைப் பெறுவது மிகவும் அரிதான விஷயம்.

43. குரு வம்சத்தவனே! அப்போது அவன் தன் முந்தைய பிறப்பின் அறிவைத் திரும்பப் பெற்று, தன் நோக்கத்தை முழுமையாக அடைவதற்கு மீண்டும் முயற்சி செய்வான்.

44. தன் முந்தைய பிறப்பின் சாதனையின் விளைவாக, அவன் யோகப்பாதைக்கு ஈர்க்கப்படுகிறான். அத்தகைய ஆர்வமுள்ள ஞானத்தேடல் கொண்டவன் வேத மந்திரங்களின் சொற்களைத் தாண்டி ஞானம் பெறுகிறான்.

45. உறுதியுடன் முயற்சி செய்யும் யோகி பற்றுக்களிலிருந்து நீங்கி, பல பிறவிகளில் தன்னை முழுமையாகச் சீர்படுத்திக்கொண்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

46. யோகி தவசியை விட உயர்ந்தவன், ஞானியை விட உயர்ந்தவன், பலனை எதிர்பார்த்துச் செயல்படுபவனை விட உயர்ந்தவன். எனவே, அர்ஜுனா, நீ ஒரு யோகியாக இரு.

47. முழு நம்பிக்கையுடன் மனத்தில் என்னை நிறுத்தி, உண்மையாகவும், அர்ப்பணத்துடனும் என்னிடம் பக்தி செலுத்துபவன் எல்லா யோகிகளிலும் சிறந்த யோகியாகக் கருதப்படுவான்.

அத்தியாயம் 7


No comments:

Post a Comment