Monday, October 26, 2020

9. எட்டாவது அத்தியாயம் - பிரம்மத்தை அடைதல்

1. அர்ஜுனன் கூறினான்:
புருஷோத்தமா! பிரம்மம் என்பது என்ன? ஆத்மா என்பது என்ன? பலன் தரும் செயல் (கர்மா) என்பது எது? எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்பது என்ன? மூலதெய்வம் என்பது என்ன?

2. மதுசூதனா! யாகங்களுக்கெல்லாம் மூலமானவன் இந்த உடலுக்குள் எங்கே எவ்வாறு இருக்கிறான்? தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள் தங்கள் இறுதிப் பயணத்தின்போது உன்னை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

3. பகவான் கூறினார்:
பிரம்மம் என்பது அழிவற்றது, மிக உயர்ந்தது. தன்னை அறிந்திருப்பதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. இனப்பெருக்கம் செய்வதும், உலகில் உள்ளவர்களையும், உள்ளவற்றையும் பேணி வளர்ப்பதும் பாதுகாப்பதும்தான் செயல் (கர்மா) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

4. மனிதர்களில் சிறந்தவனே! மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையவற்றின் மூலம் (ஆதிபூதம்) நான்தான். ஆத்மாதான் மூலதெய்வம் (ஆதி தெய்வம்). யாகங்களுக்கு மூலமாக உடலுக்குள் இருப்பவன் நான்தான் (ஆதியக்ஞம்).

5. தன் இறுதிக் காலத்தில் எவன் ஒருவன் என்னை நினைத்துக் கொண்டே இந்த உடலை விட்டு நீங்குகிறானோ, அவன் என்னுடைய இயல்பை அடைகிறான். இதில் எந்த வித ஐயமும் இல்லை.

6. குந்தியின் மைந்தனே! ஒருவன் தன் உடலை விட்டு நீங்கும்போது, எதைப் பற்றிச் சிந்திக்கிறானோ, அந்தச் சிந்தனையின் வடிவமாக ஆகிறான். 

7. எனவே அர்ஜுனா! நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டே போரில் ஈடுபடு. உன் அறிவையும் மனத்தையும் என்னிடம் அர்ப்பணித்தால் நீ ஐயமின்றி என்னை நிச்சயம் அடைவாய்.

8. பார்த்தா! யோகம் மற்றும் தியானம் மூலம், மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் உயர்ந்த பொருளான கடவுளை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைவான். 

9. எல்லாம் அறிந்தவரும், மிகவும் பழமையானவரும், உலகை இயக்குபவரும், அணுவை விடத் துல்லியமானவரும், எல்லாவற்றையும் தாங்கி நிற்பவரும், அறிய முடியாத வடிவம் கொண்டவரும், சூரியனைப் போல் ஒளி கொண்டவரும், உலகப் பொருட்களைக் கடந்து நிற்பவருமான கடவுளை தியானிக்க வேண்டும்.

10. இறக்கும் தருவாயில், மனதை அலைய விடாமல், பக்தியுடன், பயிற்சியால் கிடைத்த யோகத்தின் சக்தியால் மூச்சுக் காற்றை இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்துபவன் ஒளி பொருந்திய அந்த பிரம்மத்தை அடைகிறான்.

11.  எது வேதங்களை அறிந்தவர்களால் அழிவற்றது என்று கூறப்பட்டிருக்கிறதோ, எது புலன்களக் கட்டுப்படுத்தித் தவம் செய்பவர்களால் அடையப்படுகிறதோ, எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த (மேலான) உலகைப் பற்றி நான் உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். 

12. உடலில் உள்ள எல்லா துவாரங்களையும் மூடி, மனத்தை இதயத்திலும், மூச்சுக் காற்றை தலையின் உச்சியிலும் நிலை நிறுத்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

13. பிரம்மத்தைக் குறிக்கும் ஓம் என்ற ஒற்றையெழுத்தை உச்சரித்து, என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் எவரும் இந்த உடலை விட்ட பின் உயர்ந்த நிலையான வீடு பேற்றை அடைவர்.

14. ஒ, பார்த்தா! வேறு எந்த நினைவுமின்றி என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு யோகியால் என்னைச் சுலபமாக அடைய முடியும். 

15. என்னை அடைந்த பின் இந்த உயர்ந்த ஆத்மாக்கள் நிலையற்ற, வலி மிகுந்த இந்த உலகில் மீண்டும் பிறக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மிக உயர்ந்த நிலையை அடந்து விட்டார்கள்.

16. ஓ, அர்ஜுனா! பிரம்மலோகம் முதல் எல்லா உலகங்களில் இருப்பவர்களுக்கும் மறுபிறவி உண்டு. ஆனால், குந்திபுத்திரனே! என்னை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பது என்பது இல்லை.

17. பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் யுகங்கள் கொண்டது, அதே கால அளவு கொண்டதுதான் அவருடைய ஒரு இரவும் என்பதை அறிந்தவர்கள் பகலையும், இரவையும் அறிந்தவர்கள்

18. பிரம்மாவின் பகல் துவங்கும்போது, வடிவற்ற நிலையிலிருந்து உயிர்கள் பிறக்கின்றன. பிரம்மாவின் இரவு துவங்கும்போது, அவை வடிவற்ற நிலைக்குள் அடங்குகின்றன.

19. இந்தக் கணக்கற்ற உயிரினங்கள் இந்தப் பகல் பிறந்ததும் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள், இரவு வந்ததும் அழிந்து போய், பகல் வந்ததும் மீண்டும் பிறக்கிறார்கள்.

20. ஆயினும் எல்லா உயிர்களும் அழியும்போதும் அழியாத, என்றும் நிலைத்திருக்கும், தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தோற்றமற்ற, உயர்ந்த சக்தி இருக்கிறது.

21. அது தோற்றமில்லாதது என்றும், அழிவற்றது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுதான் அடைய வேண்டிய, அடைந்தபின் (பிறவிச் சுழற்சிக்கு) திரும்ப வராத இடம். அதுதான் என்னுடைய உயர்ந்த இடம்.

22. ஓ, பார்த்தா, தன்னை விட உயர்ந்ததாக எதுவும் இல்லாத அந்தப் பரமாத்மா எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறார். அவர் எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறார். ஒருமுகப்படுத்திய பக்தியால்தான் அவரை அடைய முடியும்.

23. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகை விட்டு நீங்கிய பிறகு யோகிகள் எப்போது திரும்ப வருவார்கள், எப்போது திரும்ப வர மாட்டார்கள் என்பதை நான் உனக்கு விளக்குகிறேன்.

24.  நெருப்பு, வெளிச்சம், பகல்வேளை, வளர்பிறை, உத்தராயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் நேரே பிரம்மத்தை அடைவார்கள்.

25. புகை, இரவுவேளை, தேய்பிறை, தக்ஷிணாயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் சந்திரனின் ஒளியை அடைந்து மீண்டும் பிறப்பார்கள்.  

26. ஒளி மற்றும் இருள் என்ற இந்த இரண்டு பாதைகள்தான் இவ்வுலகிலிருந்து செல்வதற்கு எப்போதுமே உள்ள வழிகள். முந்தைய பாதையில் செல்பவன் திரும்பி வர மாட்டான், பிந்தைய பாதையில் செல்பவன் திரும்ப வருவான்.

27. பார்த்தா! இந்த இரண்டு பாதைகளை அறிந்த எந்த ஒரு யோகியும் மதி மயங்க மாட்டான். எனவே, அர்ஜுனா, நீ எப்போதும் யோகப்பாதையிலேயே நிலைத்திரு.

28. இதை உணர்ந்த ஒரு யோகி வேதங்களைப் படிப்பதாலும், யாகங்களைச் செய்வதாலும், தவம், தானம் ஆகியவற்றால் கிடைக்கும் பலன்களுக்கும் மேலாக ஒரு உயர்ந்த நிலையை அடைகிறான்.

அத்தியாயம் 9


No comments:

Post a Comment