Friday, October 16, 2020

8. ஏழாவது அத்தியாயம் - ஞான யோகம்

1. பகவான் கூறினார்:
ஓ பார்த்தா! உன் மனத்தை என்னிடத்தில் செலுத்தி, யோகப்பயிற்சி செய்து, என்னைச் சரணடைந்து, எந்த ஒரு ஐயமும் இன்றி என்னை உன்னால் எப்படி முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதைக் கேள்.

2. இப்போது இந்த ஞானத்தையும் அதை முழுமையாக அடையும் விதத்தையும் உனக்கு விளக்குகிறேன். இதை அறிந்த பின், நீ அறிய வேண்டியது வேறு எதுவும் இருக்காது.

3. பல்லாயிரம் மனிதர்களில் ஒருவரே யோக நிலையை அடைய முயற்சி செய்கிறார். அதில் வெற்றி கண்டவர்களுக்குள்ளும் ஒருவரே என்னை உண்மையாக அறிகிறார். 

4. நிலம், நீர், தீ, காற்று, வெளி, மனம், ஆத்மா, அகங்காரம் இவை என் வெளிப்புற சக்தியின் எட்டு பிரிவுகளாகும். 

5. வலுவான கரங்களை உடையவனே, கீழ்நிலையில் உள்ள இந்த சக்தியைத் தவிர, உயர் நிலையில் இன்னொரு சக்தி உள்ளது என்பதை அறிவாயாக. அது இந்த உலகில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி வரும் உயிர்களைக் கொண்டது.

6. படைக்கப்பட்ட எல்லாமே என்னுடைய இந்த இரண்டு சக்திகளிலிருந்தும்தான் உருவானவை என்பதை அறிவாயாக. இந்த அண்டம் முழுவதையும் படைத்தவனும் நானே, அழிப்பவனும் நானே. 

7. ஓ, தனஞ்ஜயா! எனக்கு மேலாகவும், என்னை விட உயர்வானதாகவும் வேறொரு சக்தி இல்லை. இங்கே உள்ள அனைவரும்/ அனைத்தும் மாலையில் கோர்க்கப்பட்ட முத்துக்கள்போல் என்னுடன் பிணைந்துள்ளனர்.

8. குந்தி மைந்தனே! நீரின் சுவையாகவும், சூரிய சந்திரர்களின் ஒளியாகவும், எல்லா வேதங்களிலும் ஓம் என்ற பிரணவ மந்திரமாகவும், வெளியில் (ஆகாயத்தில்) ஒலியாகவும் மனிதனின் சக்தியாகவும் நான் இருக்கிறேன்.

9. பூமியின் இயல்பான மணமாகவும், தீயின் வெப்பமாகவும், எல்லா உயிரினங்களின் உயிராகவும், தவசிகளின் தவமாகவும் நான் இருக்கிறேன்.

10. அர்ஜுனா! நான் எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான வித்தாக இருக்கிறேன், அறிவுள்ளவர்களின் அறிவாக இருக்கிறேன், சக்தி உள்ளவர்களின் சக்தியாக இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்.

11. பரத வம்சத் தோன்றலே! நான் வலுவுள்ளவர்களின் வலுவாக இருக்கிறேன். ஆசைகளற்றவனாகவும் பற்றற்றவனாகவும் இருக்கிறேன். ஆனால் எல்லா உயிர்களுக்குள்ளும் தர்மத்துக்குப் புறம்பாக இல்லாத காம இச்சையாக இருக்கிறேன்.

12. சத்வ (தூய்மையான), ரஜோ (உணர்ச்சி மிகுந்த), தமோ (அறியாமையால் பீடிக்கப்பட்ட) குணங்களின் தன்மையில் அமைந்துள்ள எல்லாமே என்னிடமிருந்து உருவானவைதான் என்பதை அறிந்து கொள். அவை என்னுள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுள் இல்லை.

13. இந்த மூன்று குணங்களின் மாயையில் ஆழ்ந்திருக்கும் இந்த மொத்த உலகமும் இவற்றுக்கு அப்பால் இருக்கும், மாற்றத்துக்கு உட்படாத என்னை அறிய மாட்டா.

14. உண்மையில் இந்த குணங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்னுடைய இந்த தெய்வீக மாயையிலிருந்து மீள்வது கடினம். என்னைச் சரணடைந்தவர்களால் மட்டும்தான் இது இயலும்,

15. ஆனால் தீமை புரிபவர்களும், மூடர்களும், கீழ்த்தரமான மனிதர்களும் என்னைச் சரணடைய மாட்டார்கள். மாயையால் தங்கள் அறிவு கவரப்பட்டவர்களாக இவர்கள் அசுரத் தன்மையை மேற்கொள்வார்கள்.

16. பரத வம்சத்தில் பிறந்தவர்களுக்குள் சிறந்தவனே! நான்கு வகை பக்தர்கள் என்னை வணங்குகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்கள், ஞானத்தைத் தேடுபவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், ஞானிகள்.

17. இவர்களுக்குள் எப்போதும் பக்தியில் மட்டுமே ஈடுபட்டிருக்கும் ஞானிகள் சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில் நான் அவர்களிடம் அதிக அன்பு வைத்திருக்கிறேன், அவர்களும் என்னிடம் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள்.

18. இவர்கள் அனைவருமே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்தான். ஆயினும் என்னை அறிந்தவனை என்னைப் போன்றவனாகவே நான் கருதுகிறேன்.  ஏனெனில் அடைய வேண்டிய உயர்ந்த பொருள் நான் என்று உணர்ந்து அவன் என்னிடம் பக்தி செய்கிறான்.

19. பல பிறவிகளுக்குப் பிறகுதான் வாசுதேவன்தான் எல்லாம் என்று புரிந்து கொண்டு ஞானி என்னைச் சரணடைகிறான். ஆனால் அத்தகைய மகாத்மாக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவார்கள்.

20. உலகப் பொருட்களின் மீது ஆசை கொண்டதால் தங்கள் அறிவு திசை மாற்றப்பட்டவர்கள் அவர்கள் இயல்புக்கேற்றபடி சடங்குகள், நியமங்கள் மூலம் பிற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

21. ஒரு பக்தன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறைவனை எந்த வடிவத்தில் வழிபட விரும்பினாலும் அந்த வடிவத்தில் அவனுடைய நம்பிக்கையை நான் உறுதியாக்குகிறேன்.

22. அந்த பக்தியின் பயனாக அவன் தான் வணங்கும் தேவதையிடம் தான் விரும்பிய பலன்பளைக் கேட்டுப் பெறுகிறான். ஆயினும் அவை என்னால் வழங்கப்பட்டவையே.

23. அத்தகைய குறைந்த அறிவுடையவர்கள் குறைவான தற்காலிகமான பலன்களையே பெறுகிறார்கள். குட்டி தேவதைகளை வணங்குபவர்கள் அந்தக் குட்டி தேவதைகளின் இருப்பிடத்துக்குச் செல்கிறார்கள். என்னை வணங்குபவர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.

24. என் அழிவற்ற, உயர்ந்த தன்மையை அறியாதவர்கள் என்னை நான் எடுத்துக் கொண்டுள்ள வடிவமாகவே அறிகிறார்கள்.

25. யோக மாயையால் நான் மறைக்கப்பட்டிருப்பதால் என்னை எல்லோராலும் அறிய முடியாது. பிறப்போ, அழிவோ இல்லாத என்னை அறிவற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது. 

26. ஓ, அர்ஜுனா! கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் நான் அறிவேன். எல்லா உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறிய மாட்டார்கள்.

27. எதிரிகளை வெல்பவனே! பரத வம்சத்தவனே! விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு தன்மைகள் உருவாக்கும் மாயையால் எல்லா உயிர்களும் பிறக்கும்போதிலிருந்தே அறியாமையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  

28. ஆனால் நற்செயல்களைச் செய்து தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்றவர்கள் (விருப்பு வெறுப்பு என்ற) எதிரெதிரான இரண்டு குணங்களின் மாயையீலிருந்து விடுபட்டு என்னை எப்போதும் வணங்கி வருவார்கள்.

29. என்னைச் சரண்டைவதன் மூலம் முதுமை மற்றும் மரணத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் பிரம்மத்தையும், ஆத்மாவைப் பற்றிய முழு அறிவையும், செயல்கள் பற்றியும் அறிகிறார்கள்.

30. என்னை எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்றும் மூல தெய்வமென்றும், யாகங்களுக்கெல்லாம் அடிப்படை என்றும் அறிந்து கொள்பவர்கள் என்னை உறுதியாக நினைப்பதன் மூலம், இறக்கும் தருவாயிலும் என்னை அறிவார்கள்.

அத்தியாயம் 8





 

No comments:

Post a Comment