Saturday, January 23, 2021

17. 16 ஆவது அத்தியாயம் - தேவ, அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

 

1-3. பகவான் கூறினார்:
பரத வம்சத்தவனே! அச்சமின்மை, மனத்தூய்மை, ஞானம் பெறுவதில் யோக நிலையிலான ஈடுபாடு, கொடை, சுயக்கட்டுப்பாடு, யாகம் போன்ற சடங்குகள், வழிபாடு, வேத நூல்களைப் படித்தல் ஆகியவற்றில் ஈடுபாடு, தவம், எளிமை, அகிம்சை, உண்மை, கோபமின்மை, தியாக மனப்பான்மை, மன அமைதி, குற்றம் கூறாமை, எல்லா உயிர்களிடமும் கருணை, பேராசைப்படாமை, மென்மை, அடக்கம், மன உறுதி, ஒளி விடல், அறிவுக் கூர்மை, மன்னிக்கும் இயல்பு, மன வலிமை, தூய்மை, பொறாமையின்மை, ஆணவமின்மை ஆகியவை தேவ இயல்போடு பிறந்தவர்களின் தன்மைகள்.

4. பார்த்தா! போலித்தனம், தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுதல், கர்வம், கோபம், பணிவின்மை, அறியாமை ஆகியவை அசுர இயல்போடு பிறந்தவர்களின் குணங்கள்.

5. தேவ குணங்கள் விடுதலைக்கானவை என்றும், அசுர குணங்கள் பிணையை ஏற்படுத்தும் வகையானவை என்றும் கருதப்படுகிறது.. பாண்டவனே, கவலைப்படாதே! நீ தேவகுணங்களோடு பிறந்தவன்.

6. தேவ குணம் கொண்டவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்று இரண்டு வகை மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்படுகிறார்கள். தேவ குணங்களைப் பற்றி நான் விரிவாகச் சொல்லி விட்டேன், பார்த்தா! இப்போது அசுர குணங்கள் பற்றி நான் கூறுவதைக் கேள்.

7. அசுர இயல்பு உள்ளவர்களால் எது சரியான செயல், எது முறையற்ற செயல் என்று அறிய முடியாது. அவர்களிடம் தூய்மையோ, முறையான நடத்தையோ, உண்மையோ இருக்காது.

8. இந்த உலகம் பொய்யென்றும், (தர்மம் என்ற) அடிப்படை இல்லாதது என்றும், கடவுளைக் கொண்டு அமையாதது என்றும், கூடலால் மட்டுமே உருவானது என்றும், காமத்தைத் தவிர வேறு காரணம் இல்லாதது என்றும் அவர்கள் கூறுவர்.

9. இந்தக் கருத்தைக் கொண்டவர்களாக, தங்கள் ஆத்மாவை இழந்த, குறைந்த அறிவு பெற்ற இவர்கள் இந்த உலகத்தை அழிப்பதற்கான பயனற்ற, கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

10. எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தியை ஏற்படுத்தாத ஆசைகள், போலி கௌரவம், ஆணவம், திமிர், மாயை இவற்றினால் பீடிக்கப்பட்டு, நிலையற்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் தூய்மையற்ற நோக்கங்களுடன் செயலாற்றுகிறார்கள்.

11. எண்ணிலடங்காத கவலைகளிலும் பயங்களிலும் இறக்கும் வரையில் சிறைப்பட்டு, அசுர இயல்பு உடையவர்கள் புலன் இன்பங்களை அனுபவிப்பதையே உயர்ந்த நோக்கமாகக் கருதுகிறார்கள்.

12. நூற்றுக்கணக்கான ஆசாபாசங்களால் பிணைக்கப்பட்டு, ஆசை மற்றும் கோபத்தால் இயக்கப்பட்டுப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக அவர்கள் தவறான வழிகளில் பொருள் ஈட்டுகிறார்கள்.

13. "இன்று என்னால் இது பெறப்பட்டது. நான் விரும்பும் இதை நான் அடைவேன். இது என்னுடையது. எதிர்காலத்தில் நான் மீண்டும் செல்வம் பெறுவேன்.

14. "என்னுடைய இந்த எதிரியை நான் வீழ்த்தி விட்டேன். மற்றவர்களையும் நான் வீழ்த்துவேன். நானே எஜமானன். நானே அனுபவிப்பவன். நான் சிறந்தவன், சக்தி வாய்ந்தவன், மகிழ்ச்சியாக இருப்பவன்.

15. "நான் செல்வந்தன், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு நிகரானவன் யார்? நான் யாகம் செய்வேன், தர்மம் செய்வேன், சுகமாக இருப்பேன்" -  அசுர இயல்பு உள்ளவன் அறியாமையினால் இவ்வாறு தவறாகச் சிந்திப்பான்.

16. பல்வகைக் கவலைகளாலும் பயங்களாலும் பீடிக்கப்பட்டு, மாயையின் வலையில் வீழ்ந்து, ஆசைப்படுபவற்றை அனுபவிப்பதில் ஆழ்ந்து கீழான நரகத்தில் அவர்கள் வீழ்கிறார்கள்.

17. தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டு, ஆணவத்துடன், செலவத்தினால் செருக்கும், வெறியும் கொண்டு, நியமங்களைப் பின்பற்றாமல் அவர்கள் ஆடம்பரத்துக்காகப் பெயரளவில் யாகங்களைச் செய்கிறார்கள்.  

18. அகங்காரம், சக்தி, ஆணவம், ஆசை, கோபம் ஆகியவற்றால் ஆளப்பட்டு, அசுர இயல்பு கொண்டவர்கள் தங்கள் உடலிலும், மற்ற உடல்களிலும் இருக்கும் என் மீது வெறுப்பு கொண்டு என்னை நிந்திக்கிறார்கள்.

19. வெறுப்பணர்வு கொண்ட இந்தக் கொடூரமான, உலகின் மிகக் கீழான மனிதர்களை நான் மீண்டும் மீண்டும் துன்பத்தைத் தரும் அசுரக் கருப்பைகளுக்குள் தள்ளுகிறேன்.

20. குந்தியின் மகனே! அசுரக் கருக்களை அடைந்து,  இந்த மூடர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் கீழான நரகத்தை அடைகிறார்கள்.

21. ஆத்மாவுக்குத் தீங்கான இந்த நரகங்களுக்கு மூன்று வாசல்கள் உண்டு - காமம், கோபம், ஆசை.எனவே இந்த மூன்றையும் ஒருவன் கைவிட வேண்டும்.

22. குந்தியின் மைந்தனே! இருளுக்கு இட்டுச் செல்லும் இந்த மூன்று வாசல்களிலிருந்தும் விடுபட்டவன் ஆத்மாவுக்கு நன்மையளிக்கும் செயல்களைச் செய்து உயர்ந்த நிலையை அடைகிறான்.

23. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதைக் கைவிட்டு, ஆசையினால் உந்தப்படும் செயல்களைப் புரிபவன் சித்தியையோ (நிறைவு) மகிழ்ச்சியையோ உயர்ந்த கதியையோ அடைவதில்லை.

24. எனவே, செயத்தக்கவை எவை, செயத்தகாதவை எவை எனபதைத் தீர்மானிப்பதில் சாஸ்திரங்கள் உனக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவற்றை முறையாக  அறிந்து கொண்டு நீ உன் செயல்களைப் புரிய வேண்டும்.

அத்தியாயம் 17 - மூன்று வகை நம்பிக்கைகள்



Friday, January 15, 2021

16. 15ஆவது அத்தியாயம் - புருஷோத்தம யோகம்

 

1. பகவான் கூறினார்:
பூமிக்குக் கீழே கிளைகளும். பூமிக்கு மேல் வேர்களும் கொண்டு இந்த ஆல மரம் முடிவற்றதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேத மந்திரங்களே அதன் வேர்கள். அதை அறிந்த ஒருவன் வேதத்தை அறிந்தவனாகிறான்.

2. அதன் கிளைகள் கீழேயும், மேலேயும் விரிகின்றன. அது குணங்களால் ஊட்டமளிக்கப் படுகிறது. புலன்களால் உணரப்படும் பொருட்களே அதன் மொட்டுக்கள். அதன் வேர்கள் கீழே விரிந்து மனிதர்களின் உலகில் செயல்களை உருவாக்குகின்றன.

3, 4. அந்த மரத்தின் வடிவத்தையோ, அதன் துவக்கத்தையோ, முடிவையோ, அதன் வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையோ இந்த உலகத்தில் காண முடியாது. அந்த ஆலமரத்தின் வலுவான வேர்களைப் பற்றற்ற தன்மை என்ற ஆயுதத்தின் மூலம் வெட்ட வேண்டும். அதற்குப் பிறகு துவக்கமற்ற காலத்திலிருந்து இந்த முடிவற்ற செயல் யாரிடம் துவங்கி நிலை பெறுகிறதோ அந்தப் பழமையான, ஆதியான, உயர்ந்த புருஷனிடம் சரணடைந்து திரும்பி வர முடியாத அந்த இடத்துக்குச் செல்ல விழைய வேண்டும்.

5.அகங்காரம், மாயை இவற்றிலிருந்து விடுபட்டு, பற்று என்னும் குற்றத்திலிருந்து நீங்கி, ஆதியான பிரம்மத்தை எப்போதும் நினைத்து, காமத்திலிருந்து விலகி, இன்பம் துன்பம் என்ற இரட்டை நிலைகளிலிருந்து விடுபட்டு நிற்கும் அறிவுள்ளவன் அந்த முடிவற்ற நிலையை அடைகிறான்.

6. அங்கே சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளி விடுவதில்லை. அங்கே சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. அதுதான் என் இருப்பிடம்.

7. உயிர்கள் வாழும் இவ்வுலகில் உயிராக இருப்பது என்றும் நிலையாக இருக்கும் என் அம்சம்தான். அது மனம் உள்ளிட்ட ஆறு புலன்களையும் கொண்டு பிரகிருதியில் (உடலில்) நிலை கொண்டு கஷ்டப்படுகிறது. 

8. ஆத்மா உடலுக்குள் நுழையும்போதும், உடலை விட்டு நீங்கும்போதும், காற்று ஒரு நறுமணத்தை அது இருக்கும் இடத்திலிருந்து எடுத்துச் செல்வது போல் ஆத்மா ஆறு புலன்களையும் எடுத்துச் செல்கிறது.

9. கேள்வி, பார்வை, தொடு உணர்வு, சுவை, மணம், மனம் இவற்றில் இருந்து கொண்டு, ஆத்மா புலனின்பங்களை அளிக்கும் பொருட்களை அனுபவிக்கிறது.

10. தெளிவு பெறாமல், குணங்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்களால் ஆத்மா உடலை விட்டுச் செல்வதையோ, உடலில் இருப்பதையோ, புலன்கள் மூலம் அனுபவிப்பதையோ பார்க்க முடியாது. ஆனால் ஞானக் கண்கள் கொண்டவர்களால் இவற்றைப் பார்க்க முடியும்.

11. கடுமையான முயற்சி செய்யும் யோகிகளாலும் உடலுக்குள் இருக்கும் அந்த ஆத்மாவைப் பார்க்க முடியும். ஆனால் ஆத்ம ஞானம் பெறாத, சிந்தனைப் தெளிவற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதைப் பார்க்க முடியாது.

12. சூரியனிலிருந்து வந்து இந்த உலகம் முழுவதற்கும் ஒளியூட்டும் பிரகாசம், சந்திரனிலும், நெருப்பிலும் இருக்கும் ஒளி இவை என்னுடையவை என்று அறிவாயாக.

13. பூமிக்குள் பரவி எல்லா அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் என்னுடைய சக்தியால் நான் தாங்கிக் காக்கிறேன். சோமம் என்ற உயிர்ச் சத்தாகி எல்லாத் தாவரங்களுக்கும் நான் ஊட்டமளிக்கிறேன். 

14. ஜீரண சக்தியாக நான் எல்லா உடல்களிலும் இருந்து கொண்டு உள் வரும்  மற்றும் வெளியேறும் மூச்சுக் காற்றின் மூலம் நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கப்படச் செய்கிறேன்.

15. நான் எல்லோர் இதயத்திலும் இருக்கிறேன். ஞாபகம், அறிந்து கொள்ளுதல், அறியாமை ஆகியவை என்னிடமிருந்துதான் வருகின்றன. வேதங்களிலிருந்து அறிந்து கொள்ளப்பட வேண்டியன் நான்தான். வேதங்களை இயற்றியவன் நான், வேதங்களை அறிந்தவனும் நான்தான்.

16. இவ்வுலகில் இரண்டு விதமான புருஷர்கள் (உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள்) இருக்கிறார்கள் -  அழிவுள்ளவை, அழிவற்றவை. எல்லாப் பொருட்களும், உயிர்களும் அழியக் கூடியவை, ஆனால் உள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது.

17. ஆனால் உயர்ந்தவரான இன்னொருவர்தான் உத்தம (முதன்மையான) புருஷன் என்று சொல்லப்படுகிறார். அவர் மூன்று உலகங்களிலும் பரவி அவற்றைக் காத்து நிற்கும் முடிவற்ற ஈஸ்வரன்.

18. அழிபவை, அழியாதவை இரண்டையும் நான் கடந்து நிற்பதால் இந்த உலகத்தாலும், வேதங்களாலும் நான் புருஷோத்தமன் என்று கொண்டாடப் படுகிறேன்.

19. பரத வம்சத்தவனே! மாயை இல்லாமல் இந்த விதமாக என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்து கொள்பவன் எல்லா விதங்களிலும் என்னிடம் முழுமையாக பக்தி செலுத்துவான்.

20. பாவங்களற்றவனே! இவ்விதமாக சாஸ்திரங்களில் இந்த உயர்ந்த ரகசியம் என்னால் இப்போது கூறப்பட்டது. பரத வம்சத்தவனே! இதை அறிந்து கொண்டவன் அறிவு பெற்றவனாகி அவனுடைய எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்பவனாக ஆவான்.

அத்தியாயம் 16 - தேவ அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்



Friday, January 8, 2021

15. 14ஆவது அத்தியாயம் - மூன்று குணங்களுக்குமிடையிலான வேறுபாடுகள்

 1. பகவான் கூறினார்:
எல்லா ஞானங்களிலும் உயர்ந்த ஞானத்தை - எதை அறிந்ததன் மூலம் முனிவர்கள் இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு உயர்ந்த நிலையை அடைந்தார்களோ, அந்த ஞானத்தை - உனக்கு நான் மீண்டும் வழங்குகிறேன்.

2. இந்த ஞானத்தைச் சரணடைந்தவர்கள் என் தூய நிலையை அடைகிறார்கள். இந்த உலகம் உண்டாக்கப்படும்போது அவர்கள் பிறப்பதில்லை, பிரளயத்தின் போது (உலகம் அழியும்போது) அவர்கள் அழிவதும் இல்லை.

3. பரத வம்சத்தவனே! பிரம்மம் என்னும் என் கருப்பையில் நான் எல்லாப் பொருட்களையும் உருவாக்குகிறேன்.

4. எல்லா வகை உயிரினங்களின் கருப்பைகளிலும் உருவாகும், எந்த வடிவிலும் இருக்கும் எல்லாப் பிறவிகளும் பிரம்மம் என்ற அந்தப் பெரும் கருப்பையில் உருவானவைதான். அவற்றின் படைப்புக்குக் காரணமான தந்தை நானே.

5. தோள்வலி உடையவனே! சத்வம் (தூய்மை), ரஜஸ் (உணர்ச்சிகளால் உந்தப் படுதல்), தமஸ் (அறியாமை, சோம்பல்) ஆகிய மூன்று குணங்களும் பிரகிருதியிலிருந்து (உடலின் இயல்பிலிருந்து) தோன்றும் குணங்கள். இவை ஆத்மாவை உடலுடன் பிணைக்கின்றன.

6. பாவங்கள் அற்றவனே! அவற்றில் சத்வம் என்பது தூய்மையானது, ஒளி வழங்குவது, தீங்கற்றது. மகிழ்ச்சி, அறிவு இவற்றுடன் ஏற்படும் தொடர்பால், அது ஆத்மாவுக்குப் பிணைப்பை ஏற்படுத்திகிறது. 

7. குந்தி மைந்தனே! ரஜஸ் காமத்துக்கும், பந்தத்துக்கும் காரணமானது என்று அறிவாயாக. புலன்களால் துய்க்கப்படும் இன்பங்களின் மீதான ஆசையைத் தூண்டுவதன் மூலம் அது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களுடனான பிணைப்பை (ஆத்மாவுக்கு) ஏற்படுத்துகிறது. 

8. பரத வம்சத்தவனே! தமஸ் அறியாமையால் விளைவது என்று அறிவாயாக. அது எல்லா உயிர்களிடத்திலும் மாயையை உருவாக்கி அலட்சியம், சோம்பல், தூக்கம் ஆகியவற்றின் மூலம் (ஆத்மாவுக்கு) பிணைப்பை ஏற்படுத்துகிறது

9. பரத வம்சத்தவனே! சத்வ குணம் நம்மை மகிழ்ச்சியுடன் பிணைக்கிறது, ரஜோ குணம் நம்மை (பலனை விரும்பிச் செய்யப்படும்) செயலுடன் பிணைக்கிறது, ஆனால் தமோ குணம் அறிவை மூடி மறைப்பதன் மூலம்  நம்மை அக்கறையின்மையுடன் பிணைக்கிறது.

10. பரத வம்சத்தவனே! ரஜோ, தமோ குணங்களை வென்று சத்வ குணம் நிலை பெறுகிறது. சத்வ, தமோ குணங்களை வென்று ரஜோ குணமும், சத்வ, ரஜோ குணங்களை வென்று தமோ குணம் நிலை பெறுகின்றன.

11. உடலின் எல்லாப் புலன்களின் மூலமும் ஞானம் வெளிப்படும்போது, சத்வ குணம் முதன்மை பெற்றிருப்பதாக அறிவாயாக.

12. பரதகுலத் தோன்றலே! பேராசை, செயல்களைச் செய்வதில் அதிக ஆர்வம், ஆசைகளை அடக்க முடியாத நிலை போன்றவை ரஜோ குணத்தின்  அடையாளங்கள்.

13. இருள் (அறியாமை), செயலற்ற தன்மை, அக்கறையின்மை, மாயை ஆகியவை தமோ குணம் மேலோங்கி இருக்கும்போது விளைகின்றன.  

14. மரணம் நிகழும்போது ஒருவன் சத்வ குணம் மிகுந்தவனாயிருந்தால், அவன் உயர்ந்த முனிவர்கள் வாழும் தூய உலகங்களை அடைவான்.

15. இறக்கும் தருவாயில் ரஜோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் (பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும்) செயல்களில் ஆர்வம் மிகுந்தவர்களிடையே பிறப்பான். இறக்கும் சமயம் தமோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் ஒரு மிருகத்தின் கருவில் பிறப்பான்.

16. சத்வ குணத்தில் செய்யப்பட்ட நற்செயல்கள் தூய்மையை விளைவிக்கும் என்றும், ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்றும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் அறியாமையை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

17. சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜோ குணத்திலிருந்து, பேராசை பிறக்கிறது, தமோ குணத்திலிருந்து அறியாமையுடன் சேர்ந்த மாயையும், தவறான புரிதல்களும் பிறக்கின்றன.

18. சத்வ குணத்தில் நிலை பெற்றவர்கள் மேல் நோக்கி (சொர்க்கம் போன்ற உயர்ந்த உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள், ரஜோ குணத்தில் நிலை பெற்றவர்கள் நடுவில் (பூமி போன்ற உலகங்களில்) நிற்கிறார்கள், கீழ்மையான தமோ குணத்தில் நிலை பெற்றவர்கள் கீழ் நோக்கி (நரகம் போன்ற உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள்.

19. நம் செயல்பாடுகளில் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஒருவன் சரியாகப் புரிந்து கொள்ளும்போது அவன் குணங்களுக்கு மேலாக இருப்பது எது என்பதை அறிந்து என் இயல்பை அடைகிறான்.

20. இந்த உடலில் இருக்கும் ஆத்மா இந்த உடலின் செயல்களை இயக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து சென்றால், அது பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இறப்பற்ற தன்மையை அனுபவிக்கிறது. 

21. அர்ஜுனன் கூறினான்:
பிரபுவே! இந்த குணங்களைக் கடந்து செல்வதை எந்த அடையாளங்களால் அறிய முடியும்? இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்களின் நடத்தை எப்படி இருக்கும்? இந்த குணங்களைக் கடந்து செல்வது எப்படி?

22-25. பகவான் கூறினார்:
பாண்டவனே! ஒளி, செயல், மாயை இவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும், அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும், அவற்றில் அக்கறையின்றி இருந்து கொண்டு, குணங்கள் செயல்படுவதை உணர்ந்து, ஆனால் அவற்றினால் பாதிக்கப்படாமல், நிலையாகவும், சலனமின்றியும் இருந்து கொண்டு, மண், கல், தங்கம் இவற்றினால் இன்பமோ துன்பமோ உணராமல், விருப்பமானவை-விருப்பமற்றவை, இகழ்ச்சி-புகழ்ச்சி  இவற்றிடையே நிலையாக இருந்து கொண்டு, நண்பர்களையும், எதிரிகளையும் சமமாக பாவித்து, செயல் புரியும்போது தான் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவன் குணங்களைக் கடந்தவன் என்று கருதப்படுவான்.

26. திசை மாறாத பக்தியோகத்தின் மூலம் எனக்குச் சேவை புரிபவன் குணங்களைக் கடந்து சென்று பிரம்ம நிலையை அடையத் தகுதி பெறுகிறான். 

27. மரணமற்ற, மாறுபாடற்ற, நிரந்தரமான, தர்மமான, ஆனந்தமான, இறுதியான பிரம்மத்தின் இருப்பிடம் நானே.

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்