Friday, January 8, 2021

15. 14ஆவது அத்தியாயம் - மூன்று குணங்களுக்குமிடையிலான வேறுபாடுகள்

 1. பகவான் கூறினார்:
எல்லா ஞானங்களிலும் உயர்ந்த ஞானத்தை - எதை அறிந்ததன் மூலம் முனிவர்கள் இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு உயர்ந்த நிலையை அடைந்தார்களோ, அந்த ஞானத்தை - உனக்கு நான் மீண்டும் வழங்குகிறேன்.

2. இந்த ஞானத்தைச் சரணடைந்தவர்கள் என் தூய நிலையை அடைகிறார்கள். இந்த உலகம் உண்டாக்கப்படும்போது அவர்கள் பிறப்பதில்லை, பிரளயத்தின் போது (உலகம் அழியும்போது) அவர்கள் அழிவதும் இல்லை.

3. பரத வம்சத்தவனே! பிரம்மம் என்னும் என் கருப்பையில் நான் எல்லாப் பொருட்களையும் உருவாக்குகிறேன்.

4. எல்லா வகை உயிரினங்களின் கருப்பைகளிலும் உருவாகும், எந்த வடிவிலும் இருக்கும் எல்லாப் பிறவிகளும் பிரம்மம் என்ற அந்தப் பெரும் கருப்பையில் உருவானவைதான். அவற்றின் படைப்புக்குக் காரணமான தந்தை நானே.

5. தோள்வலி உடையவனே! சத்வம் (தூய்மை), ரஜஸ் (உணர்ச்சிகளால் உந்தப் படுதல்), தமஸ் (அறியாமை, சோம்பல்) ஆகிய மூன்று குணங்களும் பிரகிருதியிலிருந்து (உடலின் இயல்பிலிருந்து) தோன்றும் குணங்கள். இவை ஆத்மாவை உடலுடன் பிணைக்கின்றன.

6. பாவங்கள் அற்றவனே! அவற்றில் சத்வம் என்பது தூய்மையானது, ஒளி வழங்குவது, தீங்கற்றது. மகிழ்ச்சி, அறிவு இவற்றுடன் ஏற்படும் தொடர்பால், அது ஆத்மாவுக்குப் பிணைப்பை ஏற்படுத்திகிறது. 

7. குந்தி மைந்தனே! ரஜஸ் காமத்துக்கும், பந்தத்துக்கும் காரணமானது என்று அறிவாயாக. புலன்களால் துய்க்கப்படும் இன்பங்களின் மீதான ஆசையைத் தூண்டுவதன் மூலம் அது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களுடனான பிணைப்பை (ஆத்மாவுக்கு) ஏற்படுத்துகிறது. 

8. பரத வம்சத்தவனே! தமஸ் அறியாமையால் விளைவது என்று அறிவாயாக. அது எல்லா உயிர்களிடத்திலும் மாயையை உருவாக்கி அலட்சியம், சோம்பல், தூக்கம் ஆகியவற்றின் மூலம் (ஆத்மாவுக்கு) பிணைப்பை ஏற்படுத்துகிறது

9. பரத வம்சத்தவனே! சத்வ குணம் நம்மை மகிழ்ச்சியுடன் பிணைக்கிறது, ரஜோ குணம் நம்மை (பலனை விரும்பிச் செய்யப்படும்) செயலுடன் பிணைக்கிறது, ஆனால் தமோ குணம் அறிவை மூடி மறைப்பதன் மூலம்  நம்மை அக்கறையின்மையுடன் பிணைக்கிறது.

10. பரத வம்சத்தவனே! ரஜோ, தமோ குணங்களை வென்று சத்வ குணம் நிலை பெறுகிறது. சத்வ, தமோ குணங்களை வென்று ரஜோ குணமும், சத்வ, ரஜோ குணங்களை வென்று தமோ குணம் நிலை பெறுகின்றன.

11. உடலின் எல்லாப் புலன்களின் மூலமும் ஞானம் வெளிப்படும்போது, சத்வ குணம் முதன்மை பெற்றிருப்பதாக அறிவாயாக.

12. பரதகுலத் தோன்றலே! பேராசை, செயல்களைச் செய்வதில் அதிக ஆர்வம், ஆசைகளை அடக்க முடியாத நிலை போன்றவை ரஜோ குணத்தின்  அடையாளங்கள்.

13. இருள் (அறியாமை), செயலற்ற தன்மை, அக்கறையின்மை, மாயை ஆகியவை தமோ குணம் மேலோங்கி இருக்கும்போது விளைகின்றன.  

14. மரணம் நிகழும்போது ஒருவன் சத்வ குணம் மிகுந்தவனாயிருந்தால், அவன் உயர்ந்த முனிவர்கள் வாழும் தூய உலகங்களை அடைவான்.

15. இறக்கும் தருவாயில் ரஜோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் (பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும்) செயல்களில் ஆர்வம் மிகுந்தவர்களிடையே பிறப்பான். இறக்கும் சமயம் தமோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் ஒரு மிருகத்தின் கருவில் பிறப்பான்.

16. சத்வ குணத்தில் செய்யப்பட்ட நற்செயல்கள் தூய்மையை விளைவிக்கும் என்றும், ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்றும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் அறியாமையை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

17. சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜோ குணத்திலிருந்து, பேராசை பிறக்கிறது, தமோ குணத்திலிருந்து அறியாமையுடன் சேர்ந்த மாயையும், தவறான புரிதல்களும் பிறக்கின்றன.

18. சத்வ குணத்தில் நிலை பெற்றவர்கள் மேல் நோக்கி (சொர்க்கம் போன்ற உயர்ந்த உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள், ரஜோ குணத்தில் நிலை பெற்றவர்கள் நடுவில் (பூமி போன்ற உலகங்களில்) நிற்கிறார்கள், கீழ்மையான தமோ குணத்தில் நிலை பெற்றவர்கள் கீழ் நோக்கி (நரகம் போன்ற உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள்.

19. நம் செயல்பாடுகளில் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஒருவன் சரியாகப் புரிந்து கொள்ளும்போது அவன் குணங்களுக்கு மேலாக இருப்பது எது என்பதை அறிந்து என் இயல்பை அடைகிறான்.

20. இந்த உடலில் இருக்கும் ஆத்மா இந்த உடலின் செயல்களை இயக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து சென்றால், அது பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இறப்பற்ற தன்மையை அனுபவிக்கிறது. 

21. அர்ஜுனன் கூறினான்:
பிரபுவே! இந்த குணங்களைக் கடந்து செல்வதை எந்த அடையாளங்களால் அறிய முடியும்? இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்களின் நடத்தை எப்படி இருக்கும்? இந்த குணங்களைக் கடந்து செல்வது எப்படி?

22-25. பகவான் கூறினார்:
பாண்டவனே! ஒளி, செயல், மாயை இவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும், அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும், அவற்றில் அக்கறையின்றி இருந்து கொண்டு, குணங்கள் செயல்படுவதை உணர்ந்து, ஆனால் அவற்றினால் பாதிக்கப்படாமல், நிலையாகவும், சலனமின்றியும் இருந்து கொண்டு, மண், கல், தங்கம் இவற்றினால் இன்பமோ துன்பமோ உணராமல், விருப்பமானவை-விருப்பமற்றவை, இகழ்ச்சி-புகழ்ச்சி  இவற்றிடையே நிலையாக இருந்து கொண்டு, நண்பர்களையும், எதிரிகளையும் சமமாக பாவித்து, செயல் புரியும்போது தான் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவன் குணங்களைக் கடந்தவன் என்று கருதப்படுவான்.

26. திசை மாறாத பக்தியோகத்தின் மூலம் எனக்குச் சேவை புரிபவன் குணங்களைக் கடந்து சென்று பிரம்ம நிலையை அடையத் தகுதி பெறுகிறான். 

27. மரணமற்ற, மாறுபாடற்ற, நிரந்தரமான, தர்மமான, ஆனந்தமான, இறுதியான பிரம்மத்தின் இருப்பிடம் நானே.

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்


No comments:

Post a Comment