Saturday, January 23, 2021

17. 16 ஆவது அத்தியாயம் - தேவ, அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

 

1-3. பகவான் கூறினார்:
பரத வம்சத்தவனே! அச்சமின்மை, மனத்தூய்மை, ஞானம் பெறுவதில் யோக நிலையிலான ஈடுபாடு, கொடை, சுயக்கட்டுப்பாடு, யாகம் போன்ற சடங்குகள், வழிபாடு, வேத நூல்களைப் படித்தல் ஆகியவற்றில் ஈடுபாடு, தவம், எளிமை, அகிம்சை, உண்மை, கோபமின்மை, தியாக மனப்பான்மை, மன அமைதி, குற்றம் கூறாமை, எல்லா உயிர்களிடமும் கருணை, பேராசைப்படாமை, மென்மை, அடக்கம், மன உறுதி, ஒளி விடல், அறிவுக் கூர்மை, மன்னிக்கும் இயல்பு, மன வலிமை, தூய்மை, பொறாமையின்மை, ஆணவமின்மை ஆகியவை தேவ இயல்போடு பிறந்தவர்களின் தன்மைகள்.

4. பார்த்தா! போலித்தனம், தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுதல், கர்வம், கோபம், பணிவின்மை, அறியாமை ஆகியவை அசுர இயல்போடு பிறந்தவர்களின் குணங்கள்.

5. தேவ குணங்கள் விடுதலைக்கானவை என்றும், அசுர குணங்கள் பிணையை ஏற்படுத்தும் வகையானவை என்றும் கருதப்படுகிறது.. பாண்டவனே, கவலைப்படாதே! நீ தேவகுணங்களோடு பிறந்தவன்.

6. தேவ குணம் கொண்டவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்று இரண்டு வகை மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்படுகிறார்கள். தேவ குணங்களைப் பற்றி நான் விரிவாகச் சொல்லி விட்டேன், பார்த்தா! இப்போது அசுர குணங்கள் பற்றி நான் கூறுவதைக் கேள்.

7. அசுர இயல்பு உள்ளவர்களால் எது சரியான செயல், எது முறையற்ற செயல் என்று அறிய முடியாது. அவர்களிடம் தூய்மையோ, முறையான நடத்தையோ, உண்மையோ இருக்காது.

8. இந்த உலகம் பொய்யென்றும், (தர்மம் என்ற) அடிப்படை இல்லாதது என்றும், கடவுளைக் கொண்டு அமையாதது என்றும், கூடலால் மட்டுமே உருவானது என்றும், காமத்தைத் தவிர வேறு காரணம் இல்லாதது என்றும் அவர்கள் கூறுவர்.

9. இந்தக் கருத்தைக் கொண்டவர்களாக, தங்கள் ஆத்மாவை இழந்த, குறைந்த அறிவு பெற்ற இவர்கள் இந்த உலகத்தை அழிப்பதற்கான பயனற்ற, கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

10. எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தியை ஏற்படுத்தாத ஆசைகள், போலி கௌரவம், ஆணவம், திமிர், மாயை இவற்றினால் பீடிக்கப்பட்டு, நிலையற்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் தூய்மையற்ற நோக்கங்களுடன் செயலாற்றுகிறார்கள்.

11. எண்ணிலடங்காத கவலைகளிலும் பயங்களிலும் இறக்கும் வரையில் சிறைப்பட்டு, அசுர இயல்பு உடையவர்கள் புலன் இன்பங்களை அனுபவிப்பதையே உயர்ந்த நோக்கமாகக் கருதுகிறார்கள்.

12. நூற்றுக்கணக்கான ஆசாபாசங்களால் பிணைக்கப்பட்டு, ஆசை மற்றும் கோபத்தால் இயக்கப்பட்டுப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக அவர்கள் தவறான வழிகளில் பொருள் ஈட்டுகிறார்கள்.

13. "இன்று என்னால் இது பெறப்பட்டது. நான் விரும்பும் இதை நான் அடைவேன். இது என்னுடையது. எதிர்காலத்தில் நான் மீண்டும் செல்வம் பெறுவேன்.

14. "என்னுடைய இந்த எதிரியை நான் வீழ்த்தி விட்டேன். மற்றவர்களையும் நான் வீழ்த்துவேன். நானே எஜமானன். நானே அனுபவிப்பவன். நான் சிறந்தவன், சக்தி வாய்ந்தவன், மகிழ்ச்சியாக இருப்பவன்.

15. "நான் செல்வந்தன், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு நிகரானவன் யார்? நான் யாகம் செய்வேன், தர்மம் செய்வேன், சுகமாக இருப்பேன்" -  அசுர இயல்பு உள்ளவன் அறியாமையினால் இவ்வாறு தவறாகச் சிந்திப்பான்.

16. பல்வகைக் கவலைகளாலும் பயங்களாலும் பீடிக்கப்பட்டு, மாயையின் வலையில் வீழ்ந்து, ஆசைப்படுபவற்றை அனுபவிப்பதில் ஆழ்ந்து கீழான நரகத்தில் அவர்கள் வீழ்கிறார்கள்.

17. தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டு, ஆணவத்துடன், செலவத்தினால் செருக்கும், வெறியும் கொண்டு, நியமங்களைப் பின்பற்றாமல் அவர்கள் ஆடம்பரத்துக்காகப் பெயரளவில் யாகங்களைச் செய்கிறார்கள்.  

18. அகங்காரம், சக்தி, ஆணவம், ஆசை, கோபம் ஆகியவற்றால் ஆளப்பட்டு, அசுர இயல்பு கொண்டவர்கள் தங்கள் உடலிலும், மற்ற உடல்களிலும் இருக்கும் என் மீது வெறுப்பு கொண்டு என்னை நிந்திக்கிறார்கள்.

19. வெறுப்பணர்வு கொண்ட இந்தக் கொடூரமான, உலகின் மிகக் கீழான மனிதர்களை நான் மீண்டும் மீண்டும் துன்பத்தைத் தரும் அசுரக் கருப்பைகளுக்குள் தள்ளுகிறேன்.

20. குந்தியின் மகனே! அசுரக் கருக்களை அடைந்து,  இந்த மூடர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் கீழான நரகத்தை அடைகிறார்கள்.

21. ஆத்மாவுக்குத் தீங்கான இந்த நரகங்களுக்கு மூன்று வாசல்கள் உண்டு - காமம், கோபம், ஆசை.எனவே இந்த மூன்றையும் ஒருவன் கைவிட வேண்டும்.

22. குந்தியின் மைந்தனே! இருளுக்கு இட்டுச் செல்லும் இந்த மூன்று வாசல்களிலிருந்தும் விடுபட்டவன் ஆத்மாவுக்கு நன்மையளிக்கும் செயல்களைச் செய்து உயர்ந்த நிலையை அடைகிறான்.

23. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதைக் கைவிட்டு, ஆசையினால் உந்தப்படும் செயல்களைப் புரிபவன் சித்தியையோ (நிறைவு) மகிழ்ச்சியையோ உயர்ந்த கதியையோ அடைவதில்லை.

24. எனவே, செயத்தக்கவை எவை, செயத்தகாதவை எவை எனபதைத் தீர்மானிப்பதில் சாஸ்திரங்கள் உனக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவற்றை முறையாக  அறிந்து கொண்டு நீ உன் செயல்களைப் புரிய வேண்டும்.

அத்தியாயம் 17 - மூன்று வகை நம்பிக்கைகள்



No comments:

Post a Comment