Wednesday, February 3, 2021

18. 17ஆவது அத்தியாயம் - மூன்று வகை நம்பிக்கைகள்

1. அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! சாஸ்திரங்களை மீறி நடந்து கொண்டாலும், நம்பிக்கையுடன் யாகங்களைச் செய்பவர்களின் நிலை என்ன? அவர்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது - சத்வ, ரஜோ, தமோ குணங்களில் எவ்வகையைச் சேர்ந்தது?

2. பகவான் கூறினார்:
உயிர்களின் நம்பிக்கை அவர்கள் இயல்புக்கேற்ப மூன்று வகையானது - சத்வம், ரஜஸ், தமஸ். இவை பற்றி நான் கூறுவதைக் கேள்.

3. பரத வம்சத்தவனே! ஒருவனின் நம்பிக்கை அவனது தன்மையைப் பொருத்துத்ததான், அமைகிறது. ஒரு மனிதன் அவனுடைய நம்பிக்கையின் வடிவமாக இருக்கிறான். ஒருவனுடைய நம்பிக்கை எப்படியோ அவன் அப்படி.

4. சத்வ குணம் உள்ளவர்கள் தெய்வங்களை வணங்குகிறார்கள். ரஜோ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் வணங்குகிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள் இறந்தவர்களின் ஆவிகளையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

5-6. சாஸ்திரங்களால் விதிக்கப்படாத கடுமையான நியமங்களைக் கடைப்பிடிப்பவர்கள் போலித்தன்மை, அகங்காரம் இவற்றின் பிடியில் இருந்து கொண்டு, காமத்தாலும், பற்றுக்களாலும் உந்தப்பட்டு, சிந்தனையின்றி உடலின் எல்லாக் கூறுகளையும், உடலில் இருக்கும் என்னையும் கூடத் துன்புறுத்திக் கொண்டிருப்பவர்கள் அசுர இயல்பு கொண்டவர்கள் என்று அறிந்து கொள். 

7. இனியவனே! அனைவருக்கான உணவிலும் மூன்று வகைகள் இருக்கின்றன. யாகங்கள், தவங்கள், தானங்கள் ஆகியவையும் அவ்வாறே. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கேள்.

8. ஆயுள், தூய்மை, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை அதிகரிக்கும் சாறுள்ள, கொழுப்புச்சத்து மிகுந்த, ஊட்டமளிக்கக் கூடிய மனதுக்கு இதமளிக்கும் உணவையே சாத்வீக குணம் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.

9. கசப்பு, புளிப்பு, உப்பு இவை மிகுதியாக உள்ள, வெப்பமளிக்கும், காரமான, வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட, உலர்ந்த, எரிச்சல் தன்மை உள்ள, வருத்தம், துன்பம்,நோய் ஆகியவற்றை விளைவிக்கும் உணவுகளை ரஜோ குணம் மிகுந்தவர்கள் விரும்புவர்.

10.  பழைய, சுவையற்ற, கெட்டுப்போன, துர்நாற்றம் மிகுந்த, வீணான, பிறர் உண்டு மிச்சம் வைத்த உணவுகளைத் தமோ குணம் உள்ளவர்கள் விரும்புவர். 

11. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி, ஈடுபாட்டுடன், பலனை விரும்பாமல் செய்யப்படும் யாகம் சத்வ இயல்புடையது.

12. பரதகுலத் திலகனே! பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்துக்காகவும் செய்யப்படும் யாகம் ரஜோ இயல்புடையதாகக் கருதப்படுகிறது என்று அறிந்து கொள்.

13. சாஸ்திர விதிகளுக்கு முரணாகவும், உணவு விநியோகிக்கப்படாமலும், மந்திரங்கள் சரியாகச் சொல்லப்படாமலும், புரோகிதர்களுக்கான காணிக்கை வழங்கப்படாமலும், ஈடுபாடின்றியும் செய்யப்படும் யாகம் தமோ இயல்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. 

14. தெய்வங்கள், ஆசிரியர்கள், குருமார்கள், ஆசிரியர்கள், அறிவில் சிறந்தவர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை - இவை இந்த உடலுக்கான தவங்கள் ஆகும்.

15. ஆவேசமற்ற (மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டாத), உண்மையான, இனிமையான, பயனுள்ள பேச்சு, வேதங்களை முறையாக ஓதுதல் ஆகியவை பேச்சுக்கான தவங்கள் ஆகும். 

16. மனத்திருப்தி, மென்மையான தன்மை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, சிந்தனைத் தூய்மை இவை மனத்துக்கான தவங்கள் ஆகும்.

17. இந்த மூன்று வகைத் தவங்களும் தங்கள் செயல்களுக்கான பலன்களில் விருப்பம் இல்லாதவர்களால் ஈடுபாட்டுடன் செய்யப்படும்போது, அவை சாத்விகம் என்று அழைக்கப்படுகின்றன..

18. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், புகழுக்காகவும், பகட்டுக்காகவும் மேற்கொள்ளப்படும் தவங்கள் நிலையற்றவை, ஒருமித்த சிந்தனயின்றிச் செய்யப்படுபவை. இவை ராஜஸம் என்று கருதப்படுகின்றன.

19. அறியாமையின் அடிப்படையிலான புரிதல், தன்னை வருத்திக் கொள்ளுதல், மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் இவற்றுடன் செய்யப்படும் தவம் தாமஸ இயல்பு கொண்டது.

20. தகுதியுள்ள நபருக்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில், தகுதியுள்ள வகையில் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றிக் கொடுக்கப்படும் தானம் சாத்விகமானது என்று கருதப்படும்.

21. பதிலுக்கு ஒரு  நன்மையை எதிர்பார்த்தோ, ஒரு பலனை எதிர்பார்த்தோ, அரை மனத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜஸமானது என்று கருதப்படும்.

22. இடம், பொருள் இவற்றைக் கருதாமல், தகுதியற்ற நபர்களுக்கு, முறையான மரியாதைகள் இன்றி, முறையான புரிதல் இன்றிக் கொடுக்கப்படும் தானம் தாமஸ இயல்புடையது என்று கருதப்படும்.

23. ஓம் தத் சத் - கடந்த காலத்தில் வேதங்களைக் கற்கும்போதும், யாகங்களைச் செய்யும்போதும், பிரம்மம் இவ்வாறுதான் மூன்று விதமாக அந்தணர்களால் குறிப்பிடப்பட்டது.

24. எனவே பிரம்மத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள், யாகங்கள், தர்மங்கள், தவங்கள், நியமங்கள் ஆகியவற்றை சாஸ்திரங்களில் குறிப்பிட்டபடி எப்போதும் ஓம் என்றுதான் துவங்குகிறார்கள்.

25. இவ்வாறு தங்கள் செயல்களுக்குப் பலன்களை எதிர்பார்க்காமல் முக்தியை விரும்பிச் செய்யப்படும் தங்கள் யாகங்கள், தவங்கள், தர்மங்கள் மற்றும் பல நியமங்கள் ஆகியவற்றை அவர்கள் 'தத்' என்று சொல்லிச் செய்கிறார்கள்.

26. 'சத்' என்ற சொல் நிலையான உண்மையையும், இந்த நிலையான  உண்மையை உணர்ந்து அதைப் பின்பற்றுபவரையும் குறிக்கும். ஓ, பார்த்தா! 'சத்'  என்ற சொல் இந்த நிலையான உண்மையை உணர்ந்த செயல்களையும் குறிக்கும்.

27. 'சத்' யாகம், தவம், தானம் இவற்றில் நிலைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலையான உண்மைக்காகச் செய்யப்படும் செயலும் 'சத்' என்று குறிப்பிடப்படுகிறது.

28. ஓ, பார்த்தா! ஆயினும், ஈடுபாடு இல்லாமல் செய்யப்படும் யாகம், கொடுக்கப்படும் தானம், பின்பற்றப்படும் தவம் ஆகியவை இவ்வுலகிலும், இறப்புக்குப் பின் வரும் உலகிலும் சரி 'அசத்' (பொய்யானது') என்று கருதப்படும்.

அத்தியாயம் 18

No comments:

Post a Comment