Monday, March 8, 2021

19. 18 ஆவது அத்தியாயம் - மோட்ச யோகம்

 1. அர்ஜுனன் கூறினான்:
புஜபலம் மிகுந்தவனே! நான் சந்நியாசம் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஹ்ரிஷிகேசா! தியாகம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன், கேசவா!

2. பகவான் கூறினார்:
பலன்களுக்காகச் செய்யப்படும் செயல்களைக் கைவிடுதல் கற்றவர்களால் சந்நியாசம் என்று அழைக்கப்படுகிறது. செயல்களின் பலனைத் துறத்தல் அனுபவம் உள்ளவர்களால் தியாகம் என்று அழைக்கப்படுகிறது.

3. எல்லாச் செயல்களுமே தீயவை, அவற்றைக் கைவிட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர் யாகம், தானம், தவம் ஆகிய செயல்களைக் கைவிடக் கூடாது என்று கூறுகிறார்கள்.

4. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! தியாகம் செய்வதைப் பற்றிய உண்மையை நான் கூறுவதைக் கேள். மனிதருக்குள் வேங்கை போன்றவனே! தியாகம் மூன்று வகைகளாக வகுக்கப்பட்டுள்ளது..

5. யாகம், தர்மம், தவம் இவற்றுக்கான செயல்களைக் கைவிடக் கூடாது. இவை செய்யப்பட வேண்டும். யாகம், தர்மம், தவம் ஆகியவை மனிதர்களுக்குள் சிறந்தவர்களைக் கூடத் தூய்மைப்படுத்துகின்றன. 

6. இந்தச் செயல்கள் கூட, கடமைகள் என்று கருதப்பட்டு, செயல்களின் பலன்களில் பற்றைத் துறந்து செய்யப்பட வேண்டும். பார்த்தா! இது என்னுடைய உறுதியான கருத்து.

7. விதிக்கப்பட்டுள்ள கடமைகளைத் துறப்பது முறையல்ல. மாயையின் காரணமாக அத்தகைய செயல்களைத் துறத்தல் தமோ குண இயல்பைக் குறிக்கும்.

8. துயரம் மற்றும் உடலுக்கு சிரமம் அல்லது வேதனையை ஏற்படுத்தும் என்ற, பயம் இவற்றின் காரணமாக ஒரு செயலைத் துறத்தல் ரஜோ குணத்தின் அடிப்படையிலான துறத்தல். இவ்வாறு செய்பவனுக்குத் துறத்தலின் பலன் கிடைக்காது.

9. அர்ஜுனா! விதிக்கப்பட்டுள்ள கடமைகளைத் தன் பொறுப்பு என்று கருதிச் செய்து, அந்தச் செயல்களின் பலன் மீதான பற்றை முழுமையாக ஒருவன் துறந்தால், அதை சாத்விகமான துறத்தல் என்று நான் கருதுகிறேன்.

10. அறிவள்ளவனாகவும், ஐயங்கள் இல்லாதவனாகவும் துறவு மனநிலையில் இருப்பவன், சாத்வீகத்தில் வலுவாக நிலை பெற்று, மகிழ்ச்சி அளிக்காத செயல்கள் மீது வெறுப்பும், மகிழ்ச்சி அளிக்கும் செயல்கள் மீது விருப்பும் இல்லாமல் இருக்கிறான். 

11. உடலில் குடியிருக்கும் ஆத்மாவுக்கு எல்லாச் செயல்களையும் துறப்பது சாத்தியமில்லை. ஆனால் தன் செயல்களின் பலன்களைத் துறந்தவன் துறந்தவன் என்று கருதப்படுகிறான்.

12. செயல்களின் பலன்களைத் துறக்காதவர்களுக்கு, அவர்கள் மரணத்துக்குப் பின், கசப்பான (நரகம்), இனிப்பான (சொர்க்கம்), இரண்டும் கலந்த என்று மூன்று விதமான பலன்கள் உள்ளன. ஆனால் துறந்தவர்களுக்கு இவை இல்லை.

13. வலுவான கரங்களை உடையவனே! எல்லாச் செயல்களையும் செய்வதற்கான ஐந்து காரணங்கள் சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள. அவற்றை நான் இப்போது கூறுகிறேன், கேள்.

14. உடல், செய்பவன், பல்வேறு புலன்கள், கணக்கற்ற செயல்கள் மற்றும் ஐந்தாவதாக கடவுள்.

15. ஒரு மனிதனால் அவன் உடலாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயல்கள் - முறையானவையோ, முறையற்றவையோ - செய்யப்பட்டாலும், அச் செயல்களுக்கான காரணங்கள் இந்த ஐந்தும்தான்.

16. இவ்வாறு இருக்கையில், செயல்களைச் செய்வது ஆத்மாதான் என்று கருதுபவன் சரியான புரிதல் அற்றவன். அறிவற்ற அவனால் எதையும் அறிய முடியாது.

17. தான் என்ற எண்ணம் இல்லாத, தன் செயலுக்கான பலனில் பற்றில்லாத சிந்தனை உடைய ஒருவன் இவ்வுலகில் கொலைகள் புரிந்தாலும், அவன் கொலை செய்யவில்லை. அவன் தன் செயல்களால் பிணைக்கப்பட்டவன் அல்ல.

18. அறிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதலின் நோக்கம், அறிந்து கொள்பவன் இவை செயலை இயக்கும் மூன்று விசைகள். புலன்கள், செயல் மற்றும் செயல் புரிபவன் இவை செயலின் மூன்று அடிப்படைகள்.

19. அறிந்து கொள்ளுதல், செயல், செயல் புரிபவன் என மூன்றும் மூன்று குணங்களின் அடிப்படையில் மூன்று வகையானவை என்று கூறப்பட்டுள்ளது. அவற்றை நான் கூற அறிந்து கொள்.

20. தனித்தனியாகப் பிரிந்திருக்கும் எல்லாப் பொருட்களுக்குள்ளும் அழிவில்லாத, பிரிக்க முடியாத ஒன்று இருப்பதை ஒருவன் அறிந்து கொண்டால்.அந்த அறிவு சாத்வீகமானது என்று அறிந்து கொள்.

21. பல்வேறு பொருட்கள் தனித்தனியே இருப்பதால் அவற்றுக்குள் இருப்பதைப் பலவாகப் பார்க்கும் அறிவு ரஜோ தன்மையுடையது என்று அறிந்து கொள்.

22. எல்லாப் பொருட்களும் ஏதோ ஒன்றுடன் காரணமின்றி இணைந்திருப்பதாக உண்மையை அறியாமல் அர்த்தமற்ற விதத்தில் அறிந்திருப்பது தமோ தன்மை கொண்டது.

23. கட்டுப்பாட்டுடன், பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான பலன்களில் எந்த விருப்பும் இல்லாமல், விதிக்கப்பட்டபடி செய்யப்படும் செயல்கள் சாத்வீகத்தன்மை உடையவை.

24. செயல்களின் பலன்களில் விருப்பத்துடனோ, தான் என்ற எண்ணத்துடனோ,  அதிக உழைப்புடனோ ஒரு செயலைச் செய்வது ரஜோ தன்மை உள்ளதாகக் கருதப்படுகிறது.

25. மாயையினால் (அறியாமையால்) தொடங்கப்பட்டு, எதிர்கால விளைவுகளைப் பற்றியோ, இழப்பு, (தனக்கோ மற்றவர்களுக்கோ ஏற்படக் கூடிய) துன்பம், செயலைச் செய்து முடிக்கத் தனக்குள்ள திறமை ஆகியவற்றையோ கருதாமல் செய்யப்படும் செயல் தமோ இயல்புடையது.

26. பற்றின்றி, தான் என்ற எண்ணமின்றி, வெற்றி தோல்வியைக் கருதாமல் உற்சாகத்துடன், உறுதியுடன் ஒரு செயலைச் செய்பவன் சாத்வீகமாகச் செயல் புரிபவன் என்று கூறப்படுகிறது.

27. செயலில் பற்றுடனும், செயலின் பலனில் விருப்புக் கொண்டும், பேராசையுடனும், முரட்டுத்தனமாகவும், தூய்மையின்றியும், வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படும் மனநிலையுடனும் ஒரு செயலைச் செய்பவன் தமோ குணத்துடன் செயல்படுபவன் என்று கருதப்படுகிறான்.

28. முறையற்று, பண்பாடற்று, பிடிவாதமாக, ஏமாற்றும் விதமாக, மற்றவர்களைப் புண்படுத்தும் விதமாக, சோம்பேறித்தனமாக, மனச்சோர்வுடன், தாமதம் செய்தபடி செயல்படுபவன் தமோ குணத்துடன் செயல்படுபவன் என்று கருதப்படுகிறான்.

29. தனஞ்சயா! என்னால் விவரமாக விளக்கப்பட்ட குணங்களின் அடிப்படையில் சிந்தனைத் திறன், மன உறுதி இவற்றின் மூன்று பிரிவுகளை நான் விளக்கிக் கூறுவதைக் கேள்.

30. பார்த்தா! முறையானது-முறையற்றது, செய்யக் கூடியது-செய்யக் கூடாதது, அச்சம்-அச்சமின்மை, பிணைப்பு-விடுதலை இவற்றைப் புரிந்து கொண்டிருக்கும் அறிவு சாத்வீகமானது.

31. பார்த்தா! எது அறம், எது அறத்துக்குப் புறம்பானது, செய்யக் கூடியது எது, செய்யக் கூடாதது என்பதைப் பற்றித் தவறான புரிதல் கொண்ட அறிவு ரஜோ குணமுடையது.

32. பார்த்தா! அறமற்றதை அறமென்றும், எல்லாவற்றையும் விபரீதமாகவும் (முறையற்ற விதத்தில்) புரிந்து கொள்ளும் அறியாமை வயப்பட்ட அறிவு தமோ குணமுடையது.

33. மனம், மூச்சு, புலன்கள், செயல்கள் அனைத்தையும் யோகத்தால் கட்டுப்படுத்தி திசை மாறிச் செல்லாமல் இருக்கும் மன உறுதி சாத்வீகமானது.

34. பார்த்தா! செயல்களின் பலன்களின் மீது உள்ள பற்றின் காரணமாக அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் ஈடுபடுவதில் ஒருவனுக்கு இருக்கும் மன உறுதி ரஜோ இயல்புடையது.

35. கனவு, பயம், வருத்தம், மனச்சோர்வு, ஆணவம் ஆகிவற்றிலிருந்து விடுபட முடியாமல் ஒரு மூடன் அவற்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் உறுதி தமோ இயல்புடையது.

36. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! எதைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவனுக்கு இனிய அனுபவம் ஏற்படுமோ, மற்றும்  துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமோ அந்த இன்பத்தின் மூன்று வகைகளை நான் கூறக் கேள்.

37. ஆரம்பத்தில் விஷம் போலவும், போகப் போக அமிர்தம் போலவும் தோன்றும் இன்பம் சாத்வீக இயல்புடையது. இது ஆத்மஞானத்தால் வருவது.

38. புலன்களுக்கு இன்பம் தரும் பொருட்கள் புலன்களுடன் சேரும்போது வரும் இன்பம் ஆரம்பத்தில் அமிர்தம் போலவும், போகப் போக விஷம் போலவும் போன்றும். இது ரஜோ இயல்பு உடையதாகக் கருதப்படுகிறது.

39. தூக்கத்தாலும், சோம்பேறித்தனத்தாலும்,பொறுப்பின்மையாலும் கிடைக்கும் இன்பம் ஆத்ம ஞானத்தைத் தராமல் துவக்கத்திலிருந்து இறுதி வரை மாயை வசப்பட்டதாக இருக்கும். இது தமோ இயல்பு உடையதாகக் கருதப்படுகிறது.

40. இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களின் பாதிப்பு இல்லாதவர்கள் யாரும் இந்த உலகத்திலோ, வேறு எந்த உலகத்திலோ, தேவ உலகத்திலோ இருக்க முடியாது.

41. எதிரிகளை வீழ்த்துபவனே! மக்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று செயல்ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது அவர்களுடைய இயல்பான குணங்களின் அடிப்படையில்தான்.

42. மனம் சமநிலையில் இருத்தல், சுயக் கட்டுப்பாடு, தவ வாழ்க்கை, தூய்மை, பொறுமை, நேர்மை, கல்வியறிவு, விவேகம், கடவுள் பக்தி இவை ஒரு அந்தணனுக்கு அவனுடைய இயல்பால் எழும் கடமைகளாகும்.

43. வீரம், சக்தி, உறுதி, திறமை, போர்க்களத்திலிருந்து பின்வாங்காத தன்மை, தாராள குணம், தலைமைப் பண்பு ஆகியவை ஒரு க்ஷத்திரியனுக்கு இயல்பாக அமைந்த செயல்களாகும்.

44. பயிர் செய்தல், பசுக்களைப் பாதுகாத்தல், வணிகம் ஆகியவை ஒரு வைசியனுக்கு அவன் இயல்பால் அமைந்த கடமை ஆகும். மற்றவர்களுக்குச் சேவை செய்வது ஒரு சூத்திரனுக்கு அவன் இயல்பால் அமைந்த செயல் ஆகும்.

45. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவனால் முழுமை அடைய முடியும். தன் கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவன் முழுமை அடைவது எப்படி என்பதை நான் கூறக் கேள்.

46. எவரிடமிருந்து எல்லாப் பொருட்களும் தோன்றினவோ, எவர் அனைத்துள்ளும் புகுந்தவராக இருக்கிறாரோ, அவரைத் தன் கடமைகள் மூலம் (கடமைகளைச் செய்வதன் மூலம்) வணங்குவதால் ஒருவன் முழுமை அடைகிறான்.

47. மற்றவர்களுக்கான கடமையைச் சிறப்பாகச் செய்வதை விடத் தன் கடமையைக் குறைகளுடன் செய்வது சிறப்பானது. தன் இயல்புக்கேற்றபடி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவனுக்குப் பாவம் ஏற்படாது.

48. குந்தி மைந்தனே! ஒருவர் இயல்புக்கு ஏற்றபடி விதிக்கப்பட்ட கடமை,  குறையுள்ளதாக இருந்தாலும் அது ஒருபோதும் கைவிடப்படக் கூடாதது. நெருப்பைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாச் செயல்களும் குறைகளால் சூழப்பட்டவைதான். 

49. பற்றற்ற மனம் கொண்டு, எல்லா இடங்களிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஆசைகளிலிருந்து விடுபட்டவனாக இருக்கும் ஒருவன் துறவின் மூலம் செயல்களிலிருந்தும் அவற்றின் எதிர்வினைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறான். 

50. குந்தி மைந்தனே! சித்தி (முழுமை) அடைந்தவன் எவ்வாறு உயர்ந்த அறிவான பிரம்மத்தை அடைகிறான் என்பதை என்னிடமிருந்து சுருக்கமாக அறிந்து கொள்.

51-53. தூய்மையான அறிவுடன், மன உறுதியின் மூலம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, புலனுக்கு இன்பம் அளிக்கும் ஒலி முதலியவற்றைத் துறந்து, விறுப்பு-வெறுப்புகளைக் கைவிட்டு, தனிமையான இடத்தில் இருந்து கொண்டு, உணவைக் குறைத்துக் கொண்டு, மனம், வாக்கு, உடல் இவற்றைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்திலும், யோகத்திலும் நிலைபெற்று,  பற்றற்ற தன்மையைக் கடைப்பிடித்து, தான் என்ற எண்ணம், வலிமை, கர்வம், ஆசை, கோபம், பொருட்களைப் பெறுவதில் விருப்பம் ஆகியவற்றைக் கைவிட்டு, தன்னுடையது என்ற எண்ணம் இன்றி, அமைதியுடன் இருப்பவன் பிரம்மத்தை அடையத் தகுதி பெறுகிறான்.

54. பிரம்மத்துடன் ஒன்று பட்டவனாக, ஆனந்தத்தில் ஆழ்ந்தவனாக வருத்தங்கள், ஆசைகள் இல்லாதவனாக, எல்லா உயிர்களிடமும் ஒரே மன நிலையில் இருக்கும் அவன் என்னிடம் உயர்ந்த பக்தி கொள்ளும் நிலையைப் பெறுகிறான்.

55. பக்தியின் மூலம் ஒருவன் என்னை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு என்னை உண்மையாக அறிந்ததும் அவன் எனக்குள் புகுகிறான்.

56. எப்போதும் செயலில் ஈடுபட்டிருந்தாலும், என்னைச் சரண்டபவன், என் அருளால் நிலையான அழிவற்ற விடுபேற்றை அடைகிறான்.

57. மனதளவில் எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, அடைய வேண்டிய உயர்ந்த இலக்காக என்னைக் கருதி, மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் யோகத்தைக் கடைப்பிடித்து எப்போதும் என்னையே சிந்தித்திரு.

58. உன் மனம் என்னிடத்தில் நிலை பெற்றிருக்கும்போது, என் கருணையால் நீ எல்லாத் தடைகளையும் வெற்றி கொள்வாய். ஆனால் தான் என்ற எண்ணத்தால் என் பேச்சைக் கேட்காவிட்டால் நீ அழிந்து விடுவாய்.

59. தான் என்ற எண்ணத்தால் இயக்கப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நீ முடிவு செய்தால் அந்த முடிவு வீணானதாக இருக்கும். உன் இயல்பே உன்னைப் போரில் ஈடுபடச் செய்யும். 

60. குந்தியின் மைந்தனே! உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மாயையால் நீ செய்ய விரும்பாமல் இருந்தாலும், உன் இயல்பினால் அவற்றை உன்னை அறியாமலே நீ செய்ய வேண்டி இருக்கும்.

61. ஓ, அர்ஜுனா! எல்லோருடைய இதயத்திலும் வசிக்கும் ஈஸ்வரன் தன் மாயையினால் எல்லா உயிர்களையும் இயந்திரத்தில் அமர்ந்து பயணம் செய்வது போல் இயங்கச் செய்கிறார்.

62. பரத வம்சத்தைச் சேர்ந்தவனே! அவரையே முழுமையாகச் சரணடை. அவர் அருளால் உனக்கு எல்லாம் கடந்த அமைதியும், நிலையான வீடுபேறும் கிடைக்கும். 

63. ரகசியங்களில்லாம் அதி ரகசியமான விஷயத்தை நான் இவ்வாறாக உனக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறேன். அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த பின் நீ விரும்பியவாறு செயல்படு.

64. உயர்ந்த ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் கூறக் கேள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக நான் இதை வெளிப்படுத்துகிறேன்.

65. உன் மனத்தை என் மீது நிலை பெறச் செய். என்னுடைய பக்தனாகவும், என்னை வணங்குபவனாகவும் இரு. என்னை வணங்கு. நீ நிச்சயம் என்னை வந்தடைவாய். நீ எனக்குப் பிரியமானவன் என்பதால் உனக்கு நான் இதை அறுதியிட்டுச் சொல்கிறேன்.  

66. எல்லா தர்மங்களையும் (விதிக்கப்பட்ட கடமைகளையும்) கைவிட்டு என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். கலக்கம் அடையாமல் இரு.

67. தவம் இல்லாத ஒருவனுக்கோ, பக்தி இல்லாத ஒருவனுக்கோ, ஆன்மீக சேவையில் ஈடுபடாத ஒருவனுக்கோ, என் மீது வெறுப்பு கொண்ட ஒருவனுக்கோ இதை நீ ஒருபோதும் சொல்லக் கூடாது.

68. மிக ரகசியமான இந்த விஷயத்தை என் பக்தர்களுக்கிடையே பரப்புபவன் எவனும் பக்தியால் உயர்ந்த நிலையை அடைந்து என்னிடத்தில் வந்து சேர்வான். இதில் எந்த ஐயமும் இல்லை.

69. அத்தகைய ஒருவனை விட எனக்குப் பிரியமானவர்கள் மனிதர்களுக்குள் வேறு எவரும் இல்லை, எதிர்காலத்திலும் இவ்வுலகில் அவ்வாறு யாரும் இருக்கவும் மாட்டார்கள்.

70. நம்மிடையேயான இந்த உரையாடலைப் படிக்கும் ஒருவன் யாகத்தின் மூலமும் ஞானத்தின் மூலமும் என்னை வணங்கியவனாகிறான். இது என் நிச்சயமான கருத்து.

71. நம்பிக்கையுடனும், பொறாமையின்றியும் இதைக் கேட்கும் ஒருவன் கூட விடுதலை பெற்று, நற்செயல்கள் மூலம் அடையப்படும் உயர்ந்த உலகங்களை அடைவான்.

72. பார்த்தா? இதை நீ உன் முழு மனதையும் செலுத்தி கவனமாகக் கேட்டாயா? மாயாயினால் ஏற்பட்ட அறியாமை நிங்கி விட்டதா, தனஞ்சயா?

73. அர்ஜுனன் கூறினான்:
உன் அருளால் என் மாயை அகன்று என் அறிவு எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டது. இப்போது என் மனம் சமநிலை அடைந்து என் ஐயங்கள் மறைந்து விட்டன. நான் இப்போது உன் வார்த்தைகளைப் பின்பற்றி நடப்பேன்.

74. சஞ்சயன் கூறினான்:
வாசுதேவனுக்கும் உயர்ந்த ஆத்மாவான அர்ஜுனனுக்கும் நிகழ்ந்த உரையாடலை இவ்விதமாக நான் கேட்டேன். நான் கேட்டது மிகவும் அற்புதமானது, மெச்சிலிர்க்க வைக்கக் கூடியது.

75. வியாசரின் அருளால், மிகவும் ரகசியமான, மிகவும் புனிதமான இந்த யோக அறிவை யோகேஸ்வரனான கிருஷ்ணனிடமிருந்து அவரே கூறக் கேட்டேன்.

76. ஓ, அரசரே! கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த  அற்புதமான புனிதமான உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.

77. ஓ, பேரரசரே! ஹரியின் இந்த அற்புதமான வடிவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து நான் வியப்பு வசப்பட்டு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.

78. எங்கே யோகங்களுக்கு ஈஸ்வரனான கிருஷ்ணரும், எங்கே பெரும்  வில்லாளியான அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அங்கே வளமும், வெற்றியும், சக்தியும், தர்ம்மும் இருக்கும். இது என் உறுதியான நம்பிக்கை.

(பகவத் கீதை நிறைவடைந்தது)

No comments:

Post a Comment