Friday, November 6, 2020

10. 9ஆவது அத்தியாயம் - அழிவற்ற பிரம்மம்

1. பகவான் கூறினார்:
என்னிடம் பொறாமை கொள்ளாதவனான உனக்கு மிகவும் ரகசியமான விஷயத்தையும் விவேகத்தையும் அளிக்கிறேன். இதை அறிந்து கொண்டால் இந்த உலக வாழ்க்கையின் துயரத்திலிருந்து நீ விடுபடுவாய்.

2. அறியப்படுபவற்றுக்கெல்லாம் தலையாயதான இந்த அறிவு ரகசியங்களுக்கெல்லாம் தலையாய ரகசியம், தலைசிறந்த தர்மம், நேரடியாக உணரக் கூடியது, தூய்மைப்படுத்துவது, கடைப்பிடிப்பதற்கு ஆனந்தமானது, என்றும் நிலைத்திருப்பது.   

3. எதிரிகளை வெல்பவனே! இந்த தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடையாமல் பிறப்பு இறப்பு என்னும் இந்த உலகப் பாதைக்குத் திரும்ப வருகிறார்கள்.

4. எல்லா உலகங்களும் என் வடிவற்ற தன்மையால் ஊடுருவப்பட்டிருக்கின்றன. எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுக்குள் இல்லை.

5. ஆயினும் எல்லாப் படைப்புகளும் என்னிடத்தில் வசிக்கவில்லை. என் அசாதாராணமான யோக நிலையைப் பார். எல்லாப் படைப்புகளையும் நான் தாங்கி நிற்கிறேன், ஆயினும் நான் அவற்றுக்குள் இல்லை!

6. எல்லா இடத்திலும் வீசிக் கொண்டிருக்கும் காற்று எப்போதும் வெளியில் இருப்பது போல், எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன.

7. ஓ, குந்தி மைந்தனே! ஒவ்வொரு கல்பத்தின் (நான்கு யுகங்கள் கொண்டது ஒரு கல்பம்) முடிவிலும் எல்லாப் படைப்புகளும் எனக்குள் ஒடுங்குகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் துவக்கத்திலும் அவற்றை நான் மீண்டும் படைக்கிறேன்.

8. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள என் இயல்பின்படி, இந்தக் கணக்கற்ற படைப்புகளை அவர்களின் / அவற்றின் இயல்புக்கேற்ப நான் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.

9. ஓ. தனஞ்சயா! எனக்கு எந்தப் பற்றும், விருப்பமும் இல்லாததால், என்னுடைய இந்தச் செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. 

10. அசையும் மற்றும் அசையாப் பொருட்களை இயற்கை என்னுடைய கட்டுப்பாட்டில் உருவாக்குகிறது. இதனால்தான் படைப்புச் சுழற்சி (பிறப்பு இறப்புச் சுழற்சி) நிகழ்கிறது.

11. நான் மனித உருவெடுத்து உலகில் அவதரிக்கும்போது, மூடர்கள் என்னை நிந்திக்கிறார்கள். நான் எல்லாப் படைப்புகளுக்கும் இறைவன் என்பதையும், நான் அனைத்துக்கும் மேலானவன் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

12. அடைய முடியாத ஆசைகளுடனும், பயன் தராத செயல்களுடனும், மாயையான அறிவுடனும் இந்த மனம் குழம்பிய மூடர்கள் அசுரர்கள் மற்றும் தீயவர்களின் இயல்பை மேற்கொள்கிறார்கள்.

13.ஆனால் பார்த்தா! தெய்வத்திடம் சரணடைந்த உயர்ந்த ஆத்மாக்கள் என்னை நிலையான மேலான சக்தி என்று உணர்ந்து மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் என்னிடம் பக்தி செலுத்துகிறார்கள்.

14. என் பக்தர்கள் எப்போதும் என் புகழைப் பாடிக்கொண்டு, உறுதியான மனத்துடனும், பணிவுடனும் என்னை எப்போதும் வணங்குகிறார்கள்.

15. மற்றவர்கள் என்னை ஞானமார்க்கத்தைப் பின்பற்றியோ, ஒன்றாகவோ, பலவாகவோ, அண்ட சராசரங்களின் வடிவாகவோ கருதி வணங்குகிறார்கள்.

16. யாகங்களில் செய்யப்படும் கர்மம் நான்தான். யாகம் நான்தான், யாகங்களில் படைக்கப்படும் பொருள் நான்தான், மருந்து நான்தான், மந்திரம் நான்தான், யாகத்தீயில் ஊற்றப்படும் நெய் நான்தான், யாகத்தீயும் நான்தான், யாகத்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருளும் நான்தான்.

17. இந்த உலகத்தின் தந்தை நான்தான், தாயும் நான்தான், உலகத்தை ஆதரிப்பவன் நான்தான், உலகத்தின் மூதாதையரும் நான்தான், அறியப்பட வேண்டியவன் நான்தான், புனிதமான ஓம் என்ற மந்திரமும் நான்தான், ரிக் வேதம் நான்தான், யஜூர்வேதம் நான்தான், சாமவேதமும் நான்தான்.

18. அடையப்பட வேண்டிய இலக்கு நான், காப்பவன் நான், எஜமானன் நான், சாட்சி நான், வசிக்குமிடம் நான், அடைக்கலம் நான், மிக நெருக்கமான நண்பன் நான், படைப்பு நான், அழிவு நான், அமருமிடம் நான், காரணம் நான், அழிவற்ற விதை நான்.

19. அர்ஜுனா! வெப்பத்தைக் கொடுப்பவன் நான். மழையைக் கொடுப்பவனும், நிறுத்தி வைப்பவனும் நான். மரணமற்ற தன்மை நான், மரணம் நான். இருப்பவை எல்லாம் நான், இல்லாதவை அனைத்தும் நான்.

20. மூன்று வேதங்களையும் அறிந்தவர்கள், சோம பானம் அருந்தியவர்கள், பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் யாகங்களின் மூலம் என்னை வணங்கி சொர்க்கத்தை வேண்டுகிறார்கள். தங்கள் புண்ணியத்தால் அவர்கள் இந்திர லோகத்தை அடைந்து அங்கே சொர்க்கலோகத்தின் இன்பங்களைத் துய்க்கிறார்கள். 

21. சொர்க்க லோகத்தின் இன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் அவர்கள் மீண்டும் இந்த உலகில் வந்து பிறக்கிறார்கள். இவ்வாறு மூன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றி, புலன் இன்பங்களை விரும்பியவர்களாக அவர்கள் இந்த உலகுக்கும் சொர்க்க லோகத்துக்கும் இடையே வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

22. என்னைத் தவிர வேறு எந்த சிந்தனையுமின்றி, என்னுடன் நிரந்தரமாக இருக்க விருப்பம் கொண்டு என்னிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு நான் உயர்ந்த நன்மையை வழங்குகிறேன்.

23. குந்தியின் மைந்தனே! வேறு தெய்வங்களை வணங்குபவர்கள் கூட, அவர்கள் தவறான விதத்தில் வழிபடுகிறார்கள் என்றாலும், என்னைத்தான் வணங்குகிறார்கள்,  

24. எல்லா யாகங்களிலும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களைப் பெறுபவன் நானே, எல்லா யாகங்களுக்கும் அதிபர் நானே. என்னை உண்மையாக அறியாதவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் விழுகிறார்கள்.

25. தேவதைகளை வணங்குபவர்கள் தேவதைகளிடம் செல்வர், பித்ருக்களை முன்னோர்களை) வணங்குபவர்கள் பித்ருக்களிடம் செல்வர், ஆவிகளை வணங்குபவர்கள் ஆவிகளிடம் செல்வர், என்னை வணங்குபவர்கள் நிச்சயம் என்னை வந்தடைவர்.

26. பக்தியுடன் எனக்கு அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் எதையும், அந்தத் தூய உள்ளம் கொண்ட ஆத்மாவிடமிருந்து நான் ஏற்றுக் கொள்வேன்.

27. குந்தியின் மைந்தனே! நீ எதைச் செய்தாலும், எதை உண்டாலும், யாகப் பொருளாக எதை வழங்கினாலும், எதை தானம் செய்தாலும், அதை எனக்கு அர்ப்பணித்து விடு.

28. இவ்விதமாக உன் நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளிலிருந்து நீ விடுபடுவாய். இத்தகைய துறவு மனநிலையைக் (சந்நியாச யோகம்) கடைப்பிடிப்பதால் நீ விடுதலை அடைந்தவனாக என்னை வந்தடைவாய்.

29. நான் எல்லாவற்றிலும் ஒரே விதமாக நிறைந்திருக்கிறேன். எனக்கு யாரிடமும் வெறுப்புமில்லை, விருப்புமில்லை. பக்தியுடன் என்னை வணங்குபவர்களிடத்தில் நான் இருக்கிறேன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.

30. ஒருவன் மிகவும் கொடிய செயல்களைச் செய்தாலும், அவன் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்னிடம் மட்டும் பக்தி செலுத்துபவனாக இருந்தால், அவன் சரியாக நிலை பெற்றிருப்பதால் அவன் உயர்ந்தவனாகவே (சாது என்றே) கருதப்பட வேண்டும்.

31. குந்தியின் மைந்தனே! அத்தகைய பக்தன் விரைவிலேயே அறத்தின் வழி நடப்பவனாகி, நிலையான அமைதியைப் பெறுகிறான். என் பக்தர்கள் எப்போதுமே அழிந்து போக மாட்டார்கள் என்பதை உணர்வாயாக.

32. ஓ, அர்ஜுனா! என்னிடம் சரணடைவதன் மூலம், பாவமான கருவின் முலம் பிறந்தவர்கள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் உயர்ந்த நிலையை அடைவர்.

33. என்னிடம் பக்தி செய்யும் அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் உயர்நிலையை அடைவார்கள் என்று தனியே கூற வேண்டியதில்லை. துன்பம் நிறைந்த, நிலையற்ற  இவ்வுலகில் பிறந்து விட்ட நீ என்னிடம் பக்தி செலுத்து.

34. எப்போதும் என்னையே நினைத்திரு, என் பக்தனாகி, என்னை வணங்கு. எனக்குள் முழுமையாக ஆழ்ந்திரு. நீ நிச்சயம் என்னை அடைவாய்.

அத்தியாயம் 10


No comments:

Post a Comment