Thursday, December 10, 2020

12.11 ஆவது அத்தியாயம் - விஸ்வரூப தரிசனம்

1. அர்ஜுனன் கூறினான்:
என்னை உய்விக்கும் விதமாக ஆதியான பொருள் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களை நீ கூறியதால் என் மாயை அகன்று விட்டது.

2. தாமரைக் கண்ணா! எல்லாப் படைப்புகளும் உருவாவது பற்றியும், அழிவது பற்றியும், உன் அழிவற்ற உயர்வுகளைப் பற்றியும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்டறிந்தேன்.

3. பரமேஸ்வரா! உன் ஆத்ம நிலை பற்றி நீ விரிவாக விளக்கினாய். ஆயினும், புருஷோத்தமா, உன் தெய்வீக வடிவை நான் காண விரும்புகிறேன்.

4. பிரபு, யோகேஸ்வரா! என்னால் அந்த வடிவைக் காண முடியும் என்று நீ கருதினால், உன் பிரம்ம வடிவத்தை எனக்குக் காட்டு.

5. பகவான் கூறினார்:
பார்த்தா! என் கோடிக்கணக்கான, பல்வகையான வண்ணமயமான தெய்வீக வடிவங்களைப் பார்.

6. ஆதித்யர்கள் (அதிதியின் 12 புதல்வர்கள்), வசுக்கள் (எட்டு வசுக்கள்), ருத்ரர்கள் (11 ருத்ரர்கள்), அஸ்வினிகள் (இரட்டையரான அஸ்வினி தேவதைகள்), மருத்துக்கள் (ஒன்பது மருத்துக்கள்) ஆகியோரைப் பார். பரத வம்சத்தவனே! நீ இதுவரை பார்க்காத கணக்கற்ற அற்புதங்களைப் பார்.

7. குடகேசா (தூக்கத்தை வென்றவனே)! அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் கொண்ட அண்டம் முழுவதையும் இன்னும் நீ பார்க்க விரும்பும் எதையும் ஒரே இடத்தில் என் உடலில் இப்போது பார்.

8. ஆனால் உன்னுடைய இயல்பான கண்களால் என்னை உன்னால் பார்க்க முடியாது. எனவே என் யோக ஐஸ்வரியத்தைப் பார்க்க உனக்கு நான் தெய்வீகக் கண்களை வழங்குகிறேன்.

9. சஞ்சயன் கூறினான்:
அரசே! இவ்வாறு கூறி விட்டு, மகாயோகியான ஹரி (விஷ்ணு) அர்ஜுனனுக்குத் தன் உயர்ந்த, எல்லாம் நிறைந்த தோற்றத்தைக் காட்டினார்.

10. கணக்கிட முடியாத எண்ணிக்கையில் அற்புதத் தோற்றங்களாக, எண்ணற்ற வாய்கள், கண்கள், பல தெய்வீக ஆபரணங்கள், தாக்கத் தயாரான நிலையில் பல பெரிய ஆயுதங்கள் ஆகியவற்றை அர்ஜுனன் பார்த்தான்.

11. பல தெய்வீக மாலைகளையும், உடைகளையும் அணிந்து, பல தெய்வீக நறுமணப் பொருட்களையும், சாந்துகளையும் பூசிக்கொண்டு எல்லையற்றதாகவும், வியப்பூட்டுவதாகவும், எங்கும் நிறைந்ததாகவும் இருந்தது அவருடைய தோற்றம். 

12. ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றினால் அவற்றின் ஒளி ஒருவேளை அந்தப் பரம்பொருளின் தோற்றத்துக்கு ஒப்பானதாக இருக்கலாம்.

13. இப்போது அந்த தேவர்களுக்கெல்லாம் தேவனின் உடலில் அண்டம் முழுவதையும் அதன் பல பிரிவுகளாக ஒரே இடத்தில் அர்ஜுனன் பார்த்தான்.

14. அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு ஆச்சரியத்தால் திக்குமுக்காடிய அர்ஜுனன், புளகாங்கிதத்தால் தன் உடலிலிருந்த ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிற்க, தன் முன் நின்ற கடவுளான கண்ணனைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, கை கூப்பியபடி அவரிடம் கூறினான்

15. அர்ஜுனன் கூறினான்:
தேவனே! உன் உடலில் எல்லா தேவர்களையும், பல்வகை உயிர்களையும் பார்க்கிறேன். தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், சிவனையும், பல தெய்வீக முனிவர்களையும், பாம்புகளையும் பார்க்கிறேன்.

16, எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், வாய்கள், கண்கள் ஆகியவற்றை நான் பார்க்கிறேன். முடிவற்ற உருவத்துடன் நீ எங்கும் இருக்கிறாய். பிரபஞ்சத்தின் நாயகனே! அண்டம் தழுவிய உன் உருவத்தின் துவக்கம், நடு, முடிவு எதையும் என்னால் காண முடியவில்லை.

17. உன் கிரீடங்கள், கதைகள், சக்கரங்கள் ஆகியவற்றால், உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுகிறது. அளவிட முடியாத சூரியனைப் போன்ற உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுவதால் உன்னைக் காண்பது எனக்குக் கடினமாக இருக்கிறது.

18. நீ அழிவில்லாதவன், அறியப்பட வேண்டிய இறுதியான உண்மை நீயே. இந்த உலகம் முழுவதும் ஓய்வெடுப்பது உன்னிடம்தான். என்றும் நிலையான தர்மத்தைக் காப்பவன் நீயே. நீதான் மிகவும் பழமையானவன் என்று நான் உறுதியாக அறிகிறேன்.

19. துவக்கம், நடு, முடிவு இவை எதுவும் இல்லாதவனாகவும், எல்லையற்ற சக்தி கொண்டவனாகவும், எண்ணில்லாத கரங்களையும், சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவனாகவும் உன்னை நான் பார்க்கிறேன். உன் வாய்களுக்குள்ளிருந்து ஒரு பிரகாசமான நெருப்பு வீசிக் கொண்டிருக்கிறது. உன் உள்ளொளியால் இந்த அண்டம் முழுவதையும் நீ வெப்பமாக வைத்திருக்கிறாய்.

20. ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் அனைத்திலும், எல்லாத் திசைகளிலும் நீ வியாபித்திருக்கிறாய். பரமாத்மாவே! வியப்பும் அச்சமும் ஊட்டும் உன்னுடைய இந்தத் தோற்றத்தைக் கண்டு மூவுலகங்களும் அச்சத்தினால் நடுங்குகின்றன.

21. விண்ணுலகில் உள்ள தேவர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக உனக்குள் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் பயத்துடன் உன்னைக் கை கூப்பி வணங்கிப் பிரார்தனை செய்கிறார்கள். பல முனிவர்களும், சித்தர்களும்  வேதங்களில் உள்ள ஸ்தோத்திரங்களைக் கூறி உன்னைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

22. (பதினோரு) ருத்ரர்கள், (பன்னிரண்டு) ஆதித்யர்கள், (எட்டு) வசுக்கள், சாத்யர்கள், வசுதேவர்கள், (இரட்டையரான) அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அரக்கர்கள், சித்தர்கள் அனைவரும் உன்னை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

23. சக்தி வாய்ந்த கரங்களைக் கொண்டவனே! இத்தனை முகங்கள், கண்கள், வலுவான கரங்கள், கால்கள், பாதங்கள், வயிறுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்ட உன் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து எல்லா உலகங்களும் நடுங்குகின்றன, நானும் நடுங்குகிறேன்.

24, 25. ஓ, விஷ்ணுவே! பலவேறு வண்ணங்களுடனும், அகலத் திறந்த வாய்களுடனும், ஒளி விடும் பரந்த கண்களுடனுமான விண்ணை முட்டும் உன் விஸ்வரூபத்தைக் கண்டு என் மனத்தில் அச்சம் ஏற்பட்டு, என் உறுதியும், சமநிலையும் குலைந்து போயிருக்கின்றன. அச்சமூட்டும் பற்களுடன் பிரளய கால நெருப்பு போல் என் முன் நிற்பது போல் தோற்றமளிக்கும் உன் முகத்தைப் பார்த்த பிறகு எனக்கு திக்குத் திசை தெரியவில்லை, அமைதி கிட்டவில்லை. எல்லோருக்கும் ஈசனே! எல்லா உலகங்களிலும் வசிப்பவனே! என் மீது கருணை காட்டு.

26, 27. திருதராஷ்டிரரின் புதல்வர்கள், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் எங்கள் தரப்பிலுள்ள படைத்தலைவர்கள் ஆகியோர், அச்சமூட்டும் பற்கள் நிறைந்த உன் வாய்க்குள் வேகமாகப் புகுந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் உன் பற்களுக்கிடேயே தங்கள் தலைகள் நசுக்கப்பட்டு அங்கேயே சிக்கி இருக்கிறார்கள்.

28. நதிகளிலிருந்து பல்வேறு நீரோட்டங்கள் கடலை நோக்கிச் செல்வது போல், மனிதர்கள் வாழும் உலகிலிருந்து இந்த வீரர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் தீப்பிழம்பாகத் திகழும் உன் வாய்களுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். 

29. விட்டில் பூச்சிகள் தங்கள் அழிவைத் தேடி எரியும் நெருப்பை நோக்கி அதி வேகத்துடன் செல்வது போல், இந்த மனிதர்களும் அழிவதற்காக உன் வாய்களுக்குள் அதி வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.

30. இவர்கள் அனைவரையும் எல்லாத் திசைகளிலிருந்தும் நெருப்பாகக் கனல் விடும் உன் வாய்களுக்குள் நீ உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய். ஓ, விஷ்ணு! நெருப்பாகக் கனலும் உன் ஒளிக்கதிர்களால் இந்த அண்டம் முழுவதும் ஒளியும் வெப்பமும் பெற்று விளங்குகிறது.

31. இந்த பயங்கர உருவத்தில் இருக்கும் நீ யார் என்பதை எனக்கு தயவு செய்து விளக்கு. எல்லோருக்கும் இறைவனான உன்னை வணங்குகிறேன். என்னிடம் கருணை காட்டு. ஆதிமூலமான உன்னை நான் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். உன் இயல்பையும், செயல்முறையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

32. பகவான் கூறினார்:
நான் எல்லா உலகங்களையும் அழிக்கும் கொடுமையான காலம். இப்போது நான் மனிதர்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளேன். நீ இல்லா விட்டாலும் எதிர் எதிர் சேனைகளில் உள்ள எல்லா வீரர்களும் அழிக்கப்படுவார்கள்.

33. எனவே, எழுந்து போய்ப் போர் செய்து புகழடைந்து, உன் எதிரிகளை வென்று அளவற்ற செல்வம் கொண்ட நாட்டை ஆள்வாயாக. சவ்யசாசி (இரு கைகளுள் எதனாலும் அம்பு செலுத்தும் திறமை பெற்றவனே)! முன்னமே உருவாக்கப்பட்ட என் திட்டத்தால் அந்த வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ ஒரு கருவிதான்.

34. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே சஞ்சலம் கொள்ளாதே! போரில் ஈடுபடு. உன் எதிரிகளை நீ நிச்சயம் அழிப்பாய்.

35. சஞ்சயன் கூறினான்:
கேசவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அர்ஜுனன் தன் கைகளைக் கூப்பிக்கொண்டு, உடல் நடுங்கியபடி கிருஷ்ணரை மீண்டும் மீண்டும் வணங்கி விட்டு உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினான்:

36. அர்ஜுனன் கூறினான்:
ரிஷிகேஸா (புலன்களுக்கு ஈசனே)! உன் மேன்மைகளால் இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியூட்டப்பட்டு, உன்னிடம் கவர்ந்து இழுக்கப்படுவது இயல்புதானே! அரக்கர்கள் எல்லாப் புறங்களிலும் பறந்து கொண்டிருக்க, சித்தர்கள் கூட்டம் கூட்டமாக உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

37. மஹாத்மாவே! அவர்கள் ஏன் உன்னை வணங்க மாட்டார்கள்? நீ பிரம்மாவை விட உயர்ந்தவன், ஆதியான பரம்பொருள், எல்லையற்றவன். தேவர்களுக்கெல்லாம் தேவன். உலகுக்கு அடைக்கலம் அளிப்பவனே! நீ அழிவற்றவன், காரணம் நீ, காரியம் நீ, இவை இரண்டையும் கடந்து நிற்பவனும் நீ.

38. நீ மூலமான கடவுள், பழமையானவன், எல்லாவற்றுக்கும் மேலானவன், இந்த உலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஆதாரமானவன், அனைத்தையும் அறிபவன், அறியப்பட வேண்டியவன், சென்றடையப்பட வேண்டிய உயர்ந்த இடம். உன் முடிவற்ற வடிவங்களால் எல்லா உலகங்களும் வியாபிக்கப்பட்டுள்ளன.

39. வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரம்மா, எல்லாருக்கும் மூதாதையர் நீயே! உன்னை  ஆயிரம் முறை வணங்குகிறேன். திரும்பத் திரும்ப உன்னை வணங்குகிறேன்.

40. முன்புறத்திலிருந்தும், பின்புறத்திலிருந்தும் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் உன்னை வணங்குகிறேன். அளவற்ற திறனுடனும், எல்லையற்ற சக்தியுடனும் நீ எங்கும் நிறைந்திருக்கிறாய். எல்லாமே உன்னால் சூழப்பட்டுள்ளன. எல்லாமே நீதான்.

41. உன் மேன்மையை அறியாமல், என்னை அறியாமலோ அல்லது உன் மேல் இருக்கும் அன்பினாலோ என் நண்பனே என்றும், கிருஷ்ணா என்றும், யாதவா என்றும் பலவிதமாக உன்னை நான் அழைத்திருக்கிறேன்.

42. அச்சுதா! விளையாடும்போதோ, படுத்திருக்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உணவு உண்ணும்போதோ, தனியாக இருக்கும்போதோ, மற்ற நண்பர்களுடன் இருக்கும்போதோ, உன்னைச் சிறுமைப்படுத்தும் விதமாகவோ, மரியாதைக் குறைவாகவோ நான் நடந்து கொண்டிருந்தால், அளவிட முடியாதவனே, என்னை மன்னிப்பாயாக.

43. அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உள்ளிட்ட இந்த உலகம் முழுவதற்கும் தந்தை நீ. வணங்கப்பட வேண்டியவன் நீ, ஆசான் நீ, புகழுக்குரியவன் நீ. இந்த மூன்று உலகங்களிலும் உனக்குச் சமமானது எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில், எல்லையற்ற சக்தி கொண்டவனே! உன்னை விட உயர்வானது வேறு எது இருக்க முடியும்?

44. எனவே, என் உடலை உன் காலடியில் வைத்து உன்னை வணங்கி, உன் அருளை வேண்டுகிறேன். ஒரு தந்தை தன் மகனையும், ஒருவன் தன் நண்பனையும், ஒரு காதலர் தான் காதலிப்பவரையும்  மன்னிப்பது போல் என்னை மன்னிப்பாயாக.  

45. இதுவரை எப்போதும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே சமயம் என் மனது கலக்கமடைந்து பயத்துடனும், கவலையுடனும் இருக்கிறது. தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகத்தின் இருப்பிடமே! ஆகவே, உன் இயல்பான தெய்வீக உருவத்தை எனக்குக் காட்டு.

46. திருமுடி அணிந்தும், கைகளில் கதை மற்றும் சங்குடனுமான உன் இயல்பான உருவத்தைக் காண விரும்புகிறேன்.ஆயிரம் கரங்கள் கொண்டவனே! நான்கு கரங்களுடனான உன் முந்தைய உருவத்தை எடுத்துக் கொள்.

47. பகவான் கூறினார்:
அர்ஜுனா! என் மேலான இந்த உருவத்தை என் ஆத்ம யோகத்தின் சக்தியால் மனம் மகிழ்ந்து நான் உனக்குக் காட்டினேன். ஒளி மிகுந்த, எல்லையற்ற, ஆதியான இந்த விஸ்வரூபத்தை உனக்கு முன் வேறு யாரும் பார்த்ததில்லை.

48. குரு வம்சத்தவரில் சிறந்தவனே! வேதங்களைக் கற்பதன் மூலமோ, யாகங்கள் செய்வதன் மூலமோ, தானங்கள் செய்வதன் மூலமோ, சடங்குகளைச் செய்வதன் மூலமோ அல்லது பல்வகைத் தவங்களைச் செய்வதன் மூலமோ  என்னைக் காண முடியாது.  இந்தப் பூவுலகில் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய இந்த உருவத்தைக் கண்டதில்லை

49. என்னுடைய இந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து மயக்கமோ, கலக்கமோ அடையாதே! பயங்களிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான மனத்துடன் என்னுடைய இந்த உருவத்தை மீண்டும் பார்.

50. சஞ்சயன் கூறினான்;
இவ்வாறு கூறிய பிறகு, வாசுதேவர் தன் இயல்பான (நான்கு கரங்களுடன் கூடிய) உருவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார். பிறகு, மீண்டும் தன் இனிமையான (இரண்டு கரங்களுடனான) வடிவத்தை எடுத்துக்கொண்டு அந்த மஹாத்மா அச்சமடைந்திருந்த அர்ஜுனனை அமைதிப்படுத்தினார்.

51. அர்ஜுனன் கூறினான்:
ஜனார்த்தனா! இந்த உன் இனிமையான மானுட உருவத்தைப் பார்த்ததும், என் மனம் அமைதி அடைந்து விட்டது. நான் என்  இயல்பான நிலைக்கு வந்து விட்டேன்.

52.  பகவான் கூறினார்:
நீ இப்போது காணும் (இரண்டு கரங்களுடனான) என்னுடைய தோற்றத்தைக் காண்பது மிகவும் கடினம். தேவர்கள் கூட இந்த என் வடிவத்தைக் காண எப்போதும் விழைகின்றனர்.

53. வேதங்களைக் கற்பதாலோ, கடுமையான தவத்தாலோ, தர்மங்கள் செய்வதாலோ, வேறு சடங்குகள் செய்வதாலோ நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விதமான என் தோற்றத்தைக் காண முடியாது.

54. ஆனால், பரந்தபா! (எதிரிகளை வெல்பவனே)! வேறு எதிலும் நாட்டமில்லாத, மனம் ஒருமித்த பக்தியால் என்னுடைய இந்த வடிவத்தை அறிய முடியும், காண முடியும், இதற்குள் நுழையவும் முடியும்.

55. ஆயினும், பாண்டவனே! என்னையே அடைய வேண்டிய உயர்ந்த நோக்கமாகக் கருதி, என் பொருட்டே தன் கர்மங்களைச் செய்தபடி, பலன்களில் பற்றை விட்டு, எந்த உயிரிடமும் விரோதம் பாராட்டாமல் இருப்பவன் என்னை அடைவான்.  

12ஆவது அத்தியாயம்









No comments:

Post a Comment