Friday, January 15, 2021

16. 15ஆவது அத்தியாயம் - புருஷோத்தம யோகம்

 

1. பகவான் கூறினார்:
பூமிக்குக் கீழே கிளைகளும். பூமிக்கு மேல் வேர்களும் கொண்டு இந்த ஆல மரம் முடிவற்றதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேத மந்திரங்களே அதன் வேர்கள். அதை அறிந்த ஒருவன் வேதத்தை அறிந்தவனாகிறான்.

2. அதன் கிளைகள் கீழேயும், மேலேயும் விரிகின்றன. அது குணங்களால் ஊட்டமளிக்கப் படுகிறது. புலன்களால் உணரப்படும் பொருட்களே அதன் மொட்டுக்கள். அதன் வேர்கள் கீழே விரிந்து மனிதர்களின் உலகில் செயல்களை உருவாக்குகின்றன.

3, 4. அந்த மரத்தின் வடிவத்தையோ, அதன் துவக்கத்தையோ, முடிவையோ, அதன் வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையோ இந்த உலகத்தில் காண முடியாது. அந்த ஆலமரத்தின் வலுவான வேர்களைப் பற்றற்ற தன்மை என்ற ஆயுதத்தின் மூலம் வெட்ட வேண்டும். அதற்குப் பிறகு துவக்கமற்ற காலத்திலிருந்து இந்த முடிவற்ற செயல் யாரிடம் துவங்கி நிலை பெறுகிறதோ அந்தப் பழமையான, ஆதியான, உயர்ந்த புருஷனிடம் சரணடைந்து திரும்பி வர முடியாத அந்த இடத்துக்குச் செல்ல விழைய வேண்டும்.

5.அகங்காரம், மாயை இவற்றிலிருந்து விடுபட்டு, பற்று என்னும் குற்றத்திலிருந்து நீங்கி, ஆதியான பிரம்மத்தை எப்போதும் நினைத்து, காமத்திலிருந்து விலகி, இன்பம் துன்பம் என்ற இரட்டை நிலைகளிலிருந்து விடுபட்டு நிற்கும் அறிவுள்ளவன் அந்த முடிவற்ற நிலையை அடைகிறான்.

6. அங்கே சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளி விடுவதில்லை. அங்கே சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. அதுதான் என் இருப்பிடம்.

7. உயிர்கள் வாழும் இவ்வுலகில் உயிராக இருப்பது என்றும் நிலையாக இருக்கும் என் அம்சம்தான். அது மனம் உள்ளிட்ட ஆறு புலன்களையும் கொண்டு பிரகிருதியில் (உடலில்) நிலை கொண்டு கஷ்டப்படுகிறது. 

8. ஆத்மா உடலுக்குள் நுழையும்போதும், உடலை விட்டு நீங்கும்போதும், காற்று ஒரு நறுமணத்தை அது இருக்கும் இடத்திலிருந்து எடுத்துச் செல்வது போல் ஆத்மா ஆறு புலன்களையும் எடுத்துச் செல்கிறது.

9. கேள்வி, பார்வை, தொடு உணர்வு, சுவை, மணம், மனம் இவற்றில் இருந்து கொண்டு, ஆத்மா புலனின்பங்களை அளிக்கும் பொருட்களை அனுபவிக்கிறது.

10. தெளிவு பெறாமல், குணங்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்களால் ஆத்மா உடலை விட்டுச் செல்வதையோ, உடலில் இருப்பதையோ, புலன்கள் மூலம் அனுபவிப்பதையோ பார்க்க முடியாது. ஆனால் ஞானக் கண்கள் கொண்டவர்களால் இவற்றைப் பார்க்க முடியும்.

11. கடுமையான முயற்சி செய்யும் யோகிகளாலும் உடலுக்குள் இருக்கும் அந்த ஆத்மாவைப் பார்க்க முடியும். ஆனால் ஆத்ம ஞானம் பெறாத, சிந்தனைப் தெளிவற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதைப் பார்க்க முடியாது.

12. சூரியனிலிருந்து வந்து இந்த உலகம் முழுவதற்கும் ஒளியூட்டும் பிரகாசம், சந்திரனிலும், நெருப்பிலும் இருக்கும் ஒளி இவை என்னுடையவை என்று அறிவாயாக.

13. பூமிக்குள் பரவி எல்லா அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் என்னுடைய சக்தியால் நான் தாங்கிக் காக்கிறேன். சோமம் என்ற உயிர்ச் சத்தாகி எல்லாத் தாவரங்களுக்கும் நான் ஊட்டமளிக்கிறேன். 

14. ஜீரண சக்தியாக நான் எல்லா உடல்களிலும் இருந்து கொண்டு உள் வரும்  மற்றும் வெளியேறும் மூச்சுக் காற்றின் மூலம் நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கப்படச் செய்கிறேன்.

15. நான் எல்லோர் இதயத்திலும் இருக்கிறேன். ஞாபகம், அறிந்து கொள்ளுதல், அறியாமை ஆகியவை என்னிடமிருந்துதான் வருகின்றன. வேதங்களிலிருந்து அறிந்து கொள்ளப்பட வேண்டியன் நான்தான். வேதங்களை இயற்றியவன் நான், வேதங்களை அறிந்தவனும் நான்தான்.

16. இவ்வுலகில் இரண்டு விதமான புருஷர்கள் (உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள்) இருக்கிறார்கள் -  அழிவுள்ளவை, அழிவற்றவை. எல்லாப் பொருட்களும், உயிர்களும் அழியக் கூடியவை, ஆனால் உள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது.

17. ஆனால் உயர்ந்தவரான இன்னொருவர்தான் உத்தம (முதன்மையான) புருஷன் என்று சொல்லப்படுகிறார். அவர் மூன்று உலகங்களிலும் பரவி அவற்றைக் காத்து நிற்கும் முடிவற்ற ஈஸ்வரன்.

18. அழிபவை, அழியாதவை இரண்டையும் நான் கடந்து நிற்பதால் இந்த உலகத்தாலும், வேதங்களாலும் நான் புருஷோத்தமன் என்று கொண்டாடப் படுகிறேன்.

19. பரத வம்சத்தவனே! மாயை இல்லாமல் இந்த விதமாக என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்து கொள்பவன் எல்லா விதங்களிலும் என்னிடம் முழுமையாக பக்தி செலுத்துவான்.

20. பாவங்களற்றவனே! இவ்விதமாக சாஸ்திரங்களில் இந்த உயர்ந்த ரகசியம் என்னால் இப்போது கூறப்பட்டது. பரத வம்சத்தவனே! இதை அறிந்து கொண்டவன் அறிவு பெற்றவனாகி அவனுடைய எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்பவனாக ஆவான்.

அத்தியாயம் 16 - தேவ அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்



No comments:

Post a Comment