Sunday, November 8, 2015

3. இரண்டாவது அத்தியாயம் - ஆத்மாவுக்கு அழிவில்லை

1. சஞ்ஜயர் கூறினார்:
இரக்கத்தில் மூழ்கி, துயர் வயப்பட்டு, கண்களில் நீர் தேங்கி, மனம் அலைக்கழிக்கப்பட நிலையில் இருந்த அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணர் சொன்னார்.

2. கிருஷ்ணர் கூறினார்:
இந்த அசந்தர்ப்பமான நேரத்தில் இப்படி ஒரு தவறான சிந்தனை உன்னை எப்படி ஆட்கொண்டது? இத்தகைய சிந்தனை உயர்ந்த மனிதர்களால் புறந்தள்ளப்படும். இதனால் (நீ செய்ய நினைப்பதைச் செய்வதால்) உனக்குப் புகழோ, வீடுபேறோ கிட்டப் போவதில்லை.

3. கோழைத்தனத்துக்கு இடம் கொடுக்காதே அர்ஜுனா! அப்படிச் செய்வது உனக்கு இழுக்கு. எதிரிகளைச் சுட்டெரிப்பவனே! இந்த பலவீனமான சிந்தனைகளைக் கைவிட்டு விட்டு எழுச்சி கொள்!

4. அர்ஜுனன் கூறினான்:
எதிரிகளை அழிப்பவனே! பீஷ்மர், துரோணர் ஆகியோர் மீது அம்பு தொடுத்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்? அவர்கள் எனது மரியாதைக்குரியவர்களாயிற்றே!

5. இத்தகைய உயர்ந்த மனிதர்களைக் கொல்வதை விடப் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதே மேல் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இவர்களைக் கொன்ற பிறகு நாம் பெறப் போகும் செல்வமும் பிற சுகங்களும் ரத்தக் கறை படிந்தவையாகத்தான் இருக்கும்.

6. போரிடுவது நல்லதா, போரிடாமல் இருப்பது நல்லதா என்பது நமக்குத் தெரியாது. நாம் வெல்வோமா அல்லது அவர்கள் நம்மை வெற்றி கொள்வார்களா என்பதும் நமக்குத் தெரியாது. நமக்கு எதிராக அணி வகுத்திருக்கும் திருதராஷ்டிரர்களின் புத்திரர்களைக் கொன்ற பிறகு, நமக்கு உயிர் வாழும் விருப்பம் கூட இருக்காது.

7. என் மனம் பலவீனப்பட்டு, என் கடமை எது என்றே புரியாமல் நான் குழம்பியிருக்கும் நிலையில் நான் உன்னைக் கேட்பது இதுதான். எது நிச்சயமாக நன்மை விளைவிக்கக் கூடியது? நான் உன் சீடன். உன்னிடம் தஞ்சம் அடைந்திருக்கும் எனக்குச் சரியான வழியைக் காட்டு.

8. (போரில் வெற்றி பெறுவதன் மூலம்) இவ்வுலகையே ஆளும் உரிமையும், செல்வம் மிகுந்த ராஜ்யமும், தேவர்களையே அதிகாரம் செய்யும் உரிமையும் கூடக் கிடைத்தாலும், என் புலன்களை வறண்டு போகச் செய்து கொண்டிருக்கும் என் துயரத்தை விரட்டும் வழி எதுவும் எனக்குப் புலப்படவில்லை.

9. சஞ்ஜயர் கூறினார்:
அரசே! கிருஷ்ணரிடம் இவ்வாறு கூறிய அர்ஜுனன் "நான் போர் செய்ய மாட்டேன்" என்று சொல்லி விட்டு மௌனமானான்..

10. திருதராஷ்டிரரே! இரண்டு போர்ப் படைகளுக்கும் இடையே இருந்தபடியே, துயரில் ஆழ்ந்திருந்த அர்ஜுனனிடம், புன்னகை செய்து கொண்டே, கிருஷ்ணர் இவ்வாறு சொன்னார்.

11. கிருஷ்ணர் சொன்னார்:
அர்ஜுனா, யாருக்காக வருத்தப்படக் கூடாதோ, அவர்களுக்காக நீ வருத்தப்படுகிறாய். ஆயினும், கற்றறிந்தவனைப் போல் பேசுகிறாய்! அறிவாளிகள் இறந்தவர்களைப் பற்றியோ, இருப்பவர்களைப் பற்றியோ வருத்தப்பட மாட்டார்கள்

12.  நீயோ, நானோ, இந்த அரசர்களோ இல்லாமல் இருந்த காலம் எதுவும் இல்லை. அதுபோல் (எதிர்காலத்தில்) நாம் இல்லாமல் போவோம் என்பதும் உண்மையில்லை.

13. எப்படி இந்த ஆத்மா இந்த உடல் மூலம் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் போன்ற நிலைகளை அடைகிறதோ, அதுபோல்தான் அது இவ்வுடலை விட்டு விட்டு வேறு உடலை அடைவதும். அறிவாளிகள் இதை அறியாமல் மயங்க மாட்டார்கள்.

14. குந்தியின் புதல்வனே! வெப்பம், குளிர்ச்சி, இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை அளிக்கும் பொருட்களுக்கும், புலன்களுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானது அல்ல. எனவே இவற்றைப் புறக்கணிக்கப் பழகிக் கொள்.

15. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பார்க்கும் ஆற்றல் பெற்ற, அவற்றினால் பாதிக்கப்படாத அறிவாளி அமரத்துவம் அடையும் தகுதியைப் பெறுகிறான்.

16. உண்மையில்லாதது (அசத்யம்) எப்போதுமே இருப்பதில்லை. உண்மையானது எப்போதுமே இல்லாமல் போவதில்லை. உண்மையை அறிந்தவர்கள் இந்த இரண்டின் உண்மைத்தன்மையை உணர்ந்திருக்கிறார்கள்.

17. எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதற்கு அழிவு இல்லை. ஏனெனில் அழிவற்ற பொருளை யாராலும் அழிக்க முடியாது!

18. அழிவற்ற, வரையறுக்க முடியாத, நிலையான ஆத்மாவுடன் தொடர்புடைய இந்த உடல்கள் எல்லாம் அழியக் கூடியவை. எனவே அர்ஜுனா, போர் செய்!

19. ஆத்மாவால் யாரையும் கொல்ல முடியாது என்பதை அறியாதவர்களும், ஆத்மாவைக் கொல்ல முடியும் என்று நினைப்பவர்களும் மூடர்கள். ஏனெனில், உண்மையில் ஆத்மா யாரையும் கொல்வதுமில்லை, யாராலும் கொல்லப்படுவதும் இல்லை.

22. ஒருவன் நைந்து போன ஆடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை அணிவது போல், ஆத்மா இறந்து போன உடலைத் துறந்து விட்டுப் புதிய உடலுக்குள் புகுந்து கொள்கிறது.

23. ஆயுதங்களால் ஆத்மாவைக் காயப்படுத்த முடியாது, தீயால் அதை அழிக்க முடியாது, நீரால் அதை நனைக்க முடியாது, காற்றால் அதைக் காய வைக்கவும் முடியாது.

24. ஏனெனில் ஆயுதங்களால் காயப்படுவது, தீயினால் சுடப்படுவது, தண்ணிர் பட்டு ஈரமாவது, காற்றில் உலர்வது போன்ற தன்மைகள் ஆத்மாவுக்கு இல்லை. ஆத்மா நிலையானது, எங்கும் நிறைந்திருப்பது, அசைக்க முடியாதது, மாறாத்தன்மையுடன் இருப்பது, என்றும் இருப்பது.

25. ஆத்மாவுக்கு உருவம் இல்லை. அது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, மாற்ற இயலாதது. இதைப் புரிந்து கொண்ட பின், நீ வருந்தக் கூடாது.

26. ஆத்மா தொடர்ந்து பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறது என்று நீ நினைத்தாலும், நீ இது போல் வருந்தக்கூடாது.

27. ஏனெனில், அப்படி வைத்துக் கொண்டாலும், இவ்வுலகில் பிறந்தவன் இறப்பது உறுதி. அதுபோல், இறந்தவன் மீண்டும் பிறப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆகையால், தவிர்க்க முடியாத ஒரு விஷயம் குறித்து வருந்துவது உனக்கு அழகல்ல.

28. அர்ஜுனா! இவ்வுலகில் வந்து பிறப்பதற்கு முன், எல்லா உயிர்களும் உருவமற்றுத்தான் இருந்திருக்கின்றன. இறப்புக்குப் பின் அவை மீண்டும் உருவம் இல்லாமல்தான் போகும். இடைப்பட்ட காலத்தில்தான் அவை உருவத்தோடு இருக்கின்றன. அதனால் வருந்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

29. சிலர் ஆத்மாவை ஒரு ஆச்சரியமான பொருளாகப் பார்க்கிறார்கள். சிலர் ஆத்மாவை ஒரு ஆச்சரியமான பொருள் என்று வர்ணிக்கிறார்கள். வேறு சிலர், ஆத்மா ஒரு ஆச்சரியமான பொருள் என்று (யாரோ சொல்லக்) கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஆத்மாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும், அதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

30. அர்ஜுனா, எல்லோர் உடலிலும் நிறைந்திருக்கும் இந்த ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது. அதனால் யார் பொருட்டும் (யாருடைய மரணம் குறித்தும்) நீ வருந்தத் தேவையில்லை.

31. மேலும், உன்னுடைய கடமையைக் கருத்தில் கொண்டு, நீ உன் நிலையிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியனுக்கு தர்மத்துக்காகப் போர் செய்வதை விட விருப்பமான வேறு விஷயம் இருக்க முடியாது.

32. க்ஷத்திரியர்களில் அதிர்ஷ்டம் செய்த சிலருக்கே போர் செய்யும் வாய்ப்பு தானாகவே வந்து வாய்க்கிறது. அத்தகைய வாய்ப்பு சொர்க்கத்துக்கான நுழைவாயில் ஆகும்.

33. இந்த தர்ம யுத்தத்தில் நீ ஈடுபடாவிட்டால், நீ கடமை தவறியவனாகி, உன் நற்பெயரை, இழந்து பாவம் செய்தவனாக ஆவாய்.

34. உன் மீது மக்கள் அவப்பெயரைச் சுமத்துவார்கள். அதை உன்னால் எப்போதும் போக்கிக் கொள்ள முடியாது. நற்பெயருடன் வாழ்பவனுக்கு வரும் அவப்பெயர் மரணத்தை விடக் கொடியது.

35. உன் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் மகாரதர்கள் (தேர்ப் போரில் மிகச் சிறந்தவர்கள்) நீ அச்சத்தினால்தான் போர் புரியவில்லை என்று கருதி உன்னை மிகவும் துச்சமாக மதிப்பார்கள்.

36. உன் எதிரிகள் உன்னுடைய திறமையைக் களங்கப்படுத்தி உன்னை இழித்தும், பழித்தும் பலவிதமாகப் பேசுவார்கள். இதை விட மன வருத்தம் அளிக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?

37. போரில் நீ கொல்லப்பட்டால், விண்ணுலகம் ஏகுவாய். போரில் நீ வெற்றி பெற்றால், இந்த மண்ணுலகை ஆள்வாய். ஆதலால் அர்ஜுனா, வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொண்டு, எழுச்சியுடன் போரிடு!

38. மகிழ்ச்சி-துயரம், லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி இவற்றை சமநோக்குடன் எதிர்கொண்டு இந்தப் போருக்குத் தயாராகு. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால், பாவம் உன்னைத் தீண்டாது.

39. இதுவரை நான் கூறிய வழிமுறை ஞானயோக அடிப்படையில் அமைந்தது. இனி கர்மயோக அடிப்படையில் இதை அணுகுவோம். கர்மயோகம் என்பது பலனை எதிர்பாராத செயல்பாடு. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் உன் செயல்களின் (கர்மாவின்) விளைவுகளிலிருந்து நீ விடுபடுவாய்.

40. இந்த யோகத்தைப் பின்பற்றினால், முயற்சி வீணாவதும் இல்லை, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதும் இல்லை. (எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு என்ற கோட்பாடு இங்கே செயல்படாது!) இந்தக் கர்ம யோகத்தை ஓரளவு செயல்படுத்தினால் கூடப் போதும். பிறப்பு-இறப்பு பற்றிய பயங்களிலிருந்து உனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.

41. அர்ஜுனா, இந்த உயர்ந்த பாதையில் செல்பவனுடைய சிந்தனை ஒருமுகப்பட்டும், உறுதியாகவும் இருக்கும். ஆசைகளினால் இழுக்கப்பட்டவனுடைய சிந்தனை பல திசைகளிலும் சிதறி, நோக்கமற்றதாக இருக்கும்.

42, 43, 44. அர்ஜுனா! ஆசைகள் வசப்பட்டு, வேதங்களில் ஈடுபாடு கொண்டு, சொர்க்கத்தை அடைவதையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு, சொர்க்கத்துக்கு மேல் எதுவும் இல்லை என்று சாதிப்பவர்கள் விவேகமற்றவர்கள். இவர்கள் மறுபிறவியையே இலக்காகக் கொண்டு, இவ்வுலகில் செல்வங்களையும், சுகங்களையும் அனுபவிப்பதற்காகப் பலவித செயல்களைச் செய்ய வேண்டும் என்று கவர்ச்சிகரமாகப் பேசுவார்கள். இந்தப் பேச்சுகளில் மயங்குபவர்களாலும், சுகமான வாழ்க்கையிலும், இவ்வுலகில் உள்ள செல்வங்களிலும் ஈடுபாடு கொண்டவர்களாலும் மனதை ஒருமுகப்படுத்தி இறைபக்தியில் ஈடுபட முடியாது.

45. அர்ஜுனா! இவ்வுலக விஷயங்கள் மூன்று வகை குணங்களால் அமைந்திருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக, இன்பம் துன்பம் போன்ற இரு எதிர் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, பொருட்களை அடைவது, அவற்றைப் பாதுகாப்பது போன்ற நோக்கங்களிலிருந்து விடுபட்டு, உன் உண்மை நிலையை அடைய வேண்டும்.

46. எல்லாப் புறமும் நீரால் சூழப்பட்ட இடத்தில் வசிக்கும் ஒருவனுக்கு ஒரு குட்டை எவ்வளவு பயன்படுமோ, அந்த அளவுக்குத்தான் உண்மையான அறிவு பெற்ற ஒரு அந்தணனுக்கு வேதங்கள் பயன் படும்.

47. உன் கடமையைச் செய்யத்தான் உனக்கு உரிமை இருக்கிறது. உன் செயல்களின் பலன்கள் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை. உன் செயல்களால் கிடைக்கக் கூடிய பலன்கள் உன் இலக்காக இருக்கக் கூடாது. அதற்காக நீ உன் கடமைகளைச் செய்யாமலும் இருக்கக் கூடாது.

48. பலன்கள் மீது பற்று வைக்காமல், வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், ஒரு யோகம் போல் உன் கடமையைச் செய். எப்போதும் சமமான மனநிலையில் இருப்பதுதான் யோகம்.

49. தனஞ்ஜயா, நீ உன் அறிவைப் பயன்படுத்தி, பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் அற்பமான செயல்களைக் கைவிட்டு, சமமான மனநிலையில் செய்யப்படும் யோகத்தைத் தேர்ந்தெடு. பலனை எதிர்பார்த்துச் செயல்படுபவர்கள் கீழானவர்கள்.

50. உயர்ந்த அறிவைப் பெற்றிருக்கும் ஒருவன் நற்செயல், தீச்செயல் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடுவான். அதனால் நீ சிந்தித்து யோக மார்க்கத்தைத் தேர்ந்தெடு. யோகம் உன் செயலைச் சிறப்பானதாக ஆக்கும்.

51. தேர்ந்த சிந்தனையினால் தன் செயல்களின் பலன்களைத் துறக்கும் மனிதர்கள் பிறப்பு இறப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

52. உன்னுடைய அறிவினால் நீ மோகம் என்னும் மயக்கத்தை வெற்றி கொண்டால், இந்த உலக வாழ்க்கையைப் பற்றி நீ கேட்டு அறிந்த விஷயங்கள், எதிர்காலத்தில் கேட்கப் போகிற விஷயங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்த மாட்டாய்.

53. வேதங்கள் பற்றிய பல்வேறு கருத்துக்களைக் கேட்டுக் குழப்பமடையாமல், உன் தெளிவான சிந்தனையால், நீ உறுதியாக இருந்தால், உன் மனம் சமநிலை பெற்று, நீ யோக நிலையை அடைவாய்.

54. அர்ஜுனன் கூறினான்:
கேசவா! ஒருவன் மனம் சமநிலை பெற்று ஸ்திதப்ரக்ஞன் (மாறாத மனநிலையில் இருப்பவன்) ஆகி விட்டதைக் காட்டும் அடையாளங்கள் எவை? மனம் ஒருமுகப்பட்டவனின் பேச்சு, உடல் அசைவுகள் ஆகியவை எப்படி இருக்கும்?

55. கிருஷ்ணர் கூறினார்:
பார்த்தா! ஒருவன் தன் மனதில் எழும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, தன்னை முழுமையாக அறிந்து கொள்வதிலேயே திருப்தி அடைந்து ஆத்ம நிலையில் இருக்கும்போது அவன் ஸ்திதப்ரக்ஞன் (மாறாத மனநிலையை அடைந்தவன்) ஆகிறான்.

56. துயரத்தினால் சஞ்சலப்படாமலும், சுகங்கள் மீது ஆசைப்படாமலும், ஆசை, பயம், கோபம் போன்ற உணர்வுகள் இல்லாமலும் இருப்பவனுடைய மனம் ஆன்மாவில் நிலைத்திருக்கும்.

57. எல்லாவிதப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு, நன்மை வரும்போது துள்ளிக் குதிக்காமலும், துன்பம் வரும்போது வெறுப்பை வெளிப்படுத்தாமலும் இருப்பவன் தூய ஞானத்தில் நிலைத்திருக்கிறான்.

58. ஆமை தன் உடல் உறுப்புக்களை ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வது போல் தனது புலன்களை அடக்கி வைத்திருப்பவன் தூய ஞானத்தில் நிலைத்திருக்கிறான்.

59. தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் புலன்களுக்கு சுகம் அளிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருக்கலாம். ஆயினும் புலன்களினால் நுகரப்படும் ஆசை அடிமனதில் இருந்து கொண்டேதான் இருக்கும். அனைத்தினும் மேலான ஆத்மாவை அறிந்தவனிடம் ஆசையின் சிறு கூறு கூட இருக்காது.

60. குந்தியின் புதல்வனே! புலன்கள் வலுவான ஈர்ப்பு சக்தி உள்ளவை. அவை கட்டுப்பாடான சிந்தனை உள்ளவனின் மனத்தைக் கூடத் தவறான வழிக்குத் தள்ளி விடும்.

61. எனவே அவற்றை (புலன்களை) அடக்கி, மனதைச் சமநிலையில் வைத்து என்னைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட வேண்டும் (என்னை தியானிக்க வேண்டும்). புலன்களை அடக்கியவனின் மனம் முழுமையான ஞானத்தில் நிலை பெற்றிருக்கும்.

62. புலன்களுக்கு இன்பம் தரும் விஷயங்களில் மனது வைக்கும் மனிதன் அந்த விஷயங்கள் மீது பற்று வைக்கிறான். பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து (ஆசை நிறைவேறாதபோது) கோபம் உண்டாகிறது.

63. கோபத்திலிருந்து வெறி பிறக்கிறது. வெறியினால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தினால் சிந்தனையில் தெளிவில்லாமல் போகிறது . தெளிவற்ற சிந்தனை அழிவுக்கு வழி வகுக்கிறது.

64. ஆனால் சுயக்கட்டுப்பாடு உள்ளவன், ஆத்மஞானத்தின் மூலம் விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டவனாக, தன் புலன்களால் இன்பங்களை அனுபவித்தாலும், மன அமைதியை அடைகிறான்.

65. ஒருவன் மன அமைதியை அடையும்போது, அவன் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். மன அமைதியை அடைந்தவனுடைய அறிவு தூய நிலையை அடைகிறது.

66. மனத்தைக் கட்டுப்படுத்தாதவனுக்கு சிந்தனைத் தெளிவு இருக்காது. தெளிவான சிந்தனை இல்லாதவனால் இறைவனிடத்தில் ஈடுபட முடியாது. இறைவனிடத்தில் ஈடுபடாதவனுக்கு மன அமைதி இருக்காது. மன அமைதி இல்லாதவனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

67. ஒரு ஓடத்தைக் காற்று அலைக்கழிப்பது போல், ஒருவனின் மனம் எந்தப் புலனில் நிலைத்திருக்கிறதோ அந்தப் புலன் அவன் அறிவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கிறது.

68. ஆகையால் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனின் மனம் நிலையாக இருக்கிறது.

69. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, மனத்தை ஒருமுகப்படுத்தியவன் விழித்திருக்கிறான். மற்றவர்கள் விழித்திருக்கும் நேரம்தான் ஆழ்மனச் சிந்தனையில் மூழ்கியிருக்கும் முனிவனுக்கு இரவு.

70. எல்லா நதிகளும் கடலில் வந்து கலக்கும்போது கடல் அசைவற்று இருப்பது போல், அந்த முனிவன்  புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருட்கள் தன்னை அணுகும்போது சலனமற்று இருக்கிறான். புலன் இன்பங்களுக்கு ஆசைப்படுபவனால் அப்படி இருக்க முடியாது.

71. ஆசைகளைத் துறந்து, பற்றுக்களிலிருந்து விடுபட்டு தான், தனது என்ற அகந்தை கொள்ளாமல் வாழ்பவனுக்கே அமைதி கிடைக்கும்.

72. அர்ஜுனா, இதுதான் கடவுளை அடைந்தவனுடைய நிலை. இந்த நிலையை அடைந்தவன் மாயையிலிருந்து விடுபடுகிறான். தன் இறுதிக் காலத்தில் இந்த நிலையை அடைபவனுக்குக் கூட பிரம்மநிலை என்னும் பேரானந்தம் கிட்டும்.

Friday, April 17, 2015

2. முதல் அத்தியாயம் - அர்ஜுனனின் தடுமாற்றம்

(குருட்சேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் துவங்க இருக்கிறது. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை, துரியோதனனின் தந்தையான கண் பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டியும், நண்பருமான சஞ்சயர் விவரிக்கிறார். 

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தியை சஞ்சயருக்கு வியாசர் அருளியிருந்தார். அதனால் அரண்மனையில் இருந்தபடியே போர்க்களத்தில் நடந்தவற்றைப் பார்க்கவும், அங்கே நடைபெற்ற உரையாடல்களைக் கேட்கவும் சஞ்சயரால் முடிந்தது. இதோ பகவத் கீதை துவங்குகிறது)

1. திருதராஷ்டிரர் வினவினார்:
சஞ்சயா! தர்மபூமியான குருட்சேத்திரத்தில், போர் புரியும் நோக்கத்துடன் கூடியிருக்கும் என் பிள்ளைகளும், பாண்டுவின் பிள்ளைகளும் (இப்போது) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

2. சஞ்சயர் கூறினார்:
தங்களுடன் போர் புரியத் தயாராக அணிவகுத்திருக்கும் பாண்டவ சேனையைக் கண்ணுற்ற இளவரசன் துரியோதனன் (துரோணரிடம்) சொன்னான்.

3. "துருபதனின் மைந்தனான உங்கள் மாணவன் திருஷ்டத்துய்மன் பாண்டவர்களின் பலம் பொருந்திய சேனையைப் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்திருப்பதைப் பார்த்தீர்களா குருதேவரே?

4. "இந்தச் சேனையில், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான பலம் கொண்ட சாத்யகி, விராடர் போன்ற வீரர்களும், மகாரதியான (தேர்ப்படையை நடத்துவதில் வல்லவர்) துருபதனும் தங்கள் கைகளில் பெரும் விற்களை ஏந்தி நிற்கிறார்கள்.

5. மிகச் சிறந்த வீரர்களான திருஷ்டகேது, சேகிதானன், மாவீரரான காசி அரசர், புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற சிறந்த வீரர்களும் அங்கே இருக்கிறார்கள்.

6. சக்தி வாய்ந்த யுதிமன்யு, வீரம் பொருந்திய உத்தமௌஜன், சுபத்திரையின் செல்வன் அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகிய அனைவரும் மகாரதிகள்.

7. "அந்தணர்களில் சிறந்தவரே! நம் பக்கம் இருக்கும் பெரும் வீரரர்களையும், தளபதிகளையும் நீங்கள் அறிவீர்கள். ஆயினும், அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

8. "தாங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றியைத் தவிர வேறு எதையும் சந்திக்காத கிருபர், அஸ்வத்தாமா, விகர்ணன், சோமதத்தரின் புதல்வன் பூரிஸ்ரவன்.

 9. "இவர்களைத் தவிர, பல்வகை ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் ஏந்தியிருக்கும், போர்முறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற மேலும் பல வீரர்கள் எனக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாக இங்கே இருக்கிறார்கள்.

10. "பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டுள்ள நமது படையை யாரும் வெல்ல முடியாது. ஆனால் பீமனால் பாதுகாக்கப்பட்டிருக்கும் அவர்கள் படையைச் சுலபமாக வென்று விடலாம்.

11. "அதனால், நீங்கள் அனைவரும் உங்கள் நிலைகளில் இருந்தபடியே, பீஷ்மரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்."

12. கௌரவர்களின் தாத்தாவும், அனைவரிலும் வயதில் மூத்தவருமான பீஷ்மர் துரியோதனனை உற்சாகப்படுத்தும் வகையில் சிங்கம் போல் கர்ஜனை செய்து விட்டுத் தனது சங்கை எடுத்து ஊதினார்.

13. அதைத் தொடர்ந்து பல சங்குகளும், முரசுகளும், ஊதுகுழல்களும் முழக்கமிட்டன. இதனால் எழுந்த சத்தம் பெரும் கூச்சலாக ஒலித்தது.

14. பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் அமர்ந்தபடி, கிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை ஊதினர்.

15. பாஞ்சஜன்யம் என்ற சங்கை கிருஷ்ணர் ஊதினார். தேவதத்தம் என்ற சங்கை அர்ஜுனன் ஊத, பௌண்டம் என்ற பெரும் சங்கை, செயற்கரிய செயல்களைச் செய்யும் வல்லமை பெற்ற பீமன் ஊதினான்.

16. குந்திபுத்திரரான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற தனது சங்கை ஊதினார். நகுலனும், சகாதேவனும், சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற தங்கள் சங்குகளை ஊதினர்.

17. சிறந்த வில்லாளியான காசி அரசன், மகாரதியான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்வதற்கு அரியவனான சாத்யகி ஆகியோரும் அவ்வாறே செய்தனர் (தங்கள் சங்குகளை ஊதினர்).

18. பூவுலகின் தலைவரே! துருபதன், திரௌபதியின் ஐந்து புதல்வர்கள், சுபத்திரையின் புதல்வனும், வலிமையான தோள்களை உடையவனுமான அபிமன்யு ஆகியோரும் தனித்தனியே தங்கள் சங்குகளை ஊதினர்.

19. இதனால் எழுந்த பெரும் ஓசை மண்ணிலும் விண்ணிலும் எதிரொலித்து திருதிராஷ்டிர புத்திரர்களின் இதயங்களைப் பிளந்தது.

20, 21. பூலோகத்தின் சக்ரவர்த்தியே! உங்கள் புதல்வர்கள் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பதையும், அஸ்திரங்கள் ஏவி விடப்படத் தயாராக இருந்ததையும் கண்ட பாண்டுபுத்திரனான அர்ஜுனன், வில்லைக் கையில் எடுத்தபடியே கிருஷ்ணரிடம் கூறினான்: "கிருஷ்ணா, தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்து.

22. "போருக்காக அணி வகுத்திருக்கும் வீரர்களை - நான் யார் யாருடன் எல்லாம் போரிட வேண்டுமோ அந்த வீரர்களை - நான் நன்றாகப் பார்க்கும் வரை தேரை அங்கேயே நிறுத்தி வை.

23. "தீய எணணம் கொண்ட துரியாதனுக்காகப் போரிடத் தயாராக இங்கே அணி வகுத்திருக்கும் வீரர்களில் என் நலம் நாடுபவர்கள் யார் யார் என்று நான் பார்க்க வேண்டும்."

24, 25. அரசே! அர்ஜுனன் இவ்வாறு கூறியதும், கிருஷ்ணர் அந்த பிரும்மாண்டமான தேரை, இரு சேனைகளுக்கும் இடையே, பீஷ்மர், துரோணர், பல அரசர்கள் ஆகியோர் முன் கொண்டு போய் நிறுத்தி விட்டு, "அர்ஜுனா! இங்கே அணிவகுத்திருக்கும் கௌரவர்களை நன்கு பார்த்துக் கொள்!" என்றார்.

26-29. அந்த இடத்தில் இருந்தபடி அர்ஜுனன், இரு சேனைகளிலும் இருந்த தன் தந்தையின் சகோதரர்கள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்மாமன்கள், சகோதரர்கள், ஒன்று விட்ட சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், அவன் நலத்தை விரும்புபவர்கள் ஆகியோரைப் பார்த்தான். தனது எல்லா உறவினர்களையும் அங்கே ஒருங்கே பார்த்த அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டு, மன வருத்தத்துடன் இவ்வாறு கூறினான்.

அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! போரிடுவதற்காக இங்கே அணி வகுத்திருக்கும் எனது உறவினர்களைப் பார்க்கும்போது, என் உடல் உறுப்புகள் செயலிழந்து போனது போல் உணர்கிறேன். எனது நாக்கு வறண்டு போகிறது. என் உடல் நடுங்குகிறது. என் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

30. என் வில் காண்டீபம் என் கையிலிருந்து நழுவுகிறது. உடல் முழுவதும் என் தோல் எரிகிறது. என் தலை  சுற்றுவது போல் இருக்கிறது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை.

31. கேசவா! சில கெட்ட சகுனங்களையும் நான் காண்கிறேன். என் உறவினர்களையும், நண்பர்களையும் போரில் கொல்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

32. கிருஷ்ணா! வெற்றியிலோ, அரசாள்வதிலோ, சுகங்களிலோ எனக்கு நாட்டம் இல்லை. அரசாள்வதாலோ, ஆடம்பரங்களாலோ என்ன பயன்? ஏன், இந்த உலக வாழ்க்கையாலேயே என்ன பயன்?

33, 34. நாம் யாருக்காக இந்த அரியணை, ஆடம்பரங்கள், சுகங்கள் ஆகியவற்றை அடைய நினைகிறோமோ, அவர்கள் எல்லாம் - ஆசிரியர்கள், தாய், தந்தை ஆகியோரின் சகோதரர்கள், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் எல்லோரும் - இந்தப் போர்க்களத்தில் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பணயம் வைத்து அணி வகுத்து நிற்கின்றனர்.

35. கிருஷ்ணா! அவர்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் மூவுலகும் என் ஆளுகைக்குள் வரும் என்றாலும், நான் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது, கேவலம் இந்த மண்ணுலகை ஆள்வதற்காக நான் எப்படி அவர்களைக் கொல்ல முடியும்?

36. கிருஷ்ணா! திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு எப்படி மகிழ்ச்சி கிட்டும்? இந்தக் கயவர்களைக் கொல்வதன் மூலம் நம்மிடம் பாவம்தான் வந்து சேரும்.

37. அதனால் நமது உறவினர்களான திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வது நமக்கு அழகல்ல. நமது உறவினர்களைக் கொன்று விட்டு நம்மால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

38, 39. பேராசை இவர்கள் மனங்களை செயலிழக்கச் செய்து விட்டதால், தங்கள் வம்சத்தையே அழிப்பதும், நண்பர்களை விரோதிகளாகப் பார்ப்பதும் எத்தகைய தீய செயல்கள் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணா, நமது குடும்பத்தை அழிப்பது எத்தகைய பாவச் செயல் என்பதை உணர்ந்திருக்கும் நாம் ஏன் இந்தக் கொடிய செயலிலிருந்து விலகக் கூடாது?

40. ஒரு குடும்பம் அழிக்கப்படும்போது, அந்தக் குடும்பம் காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த மரபுகளும் அழிந்து போகின்றன. நன்மை அழிக்கப்பட்டு விட்டதால், (மீதமிருக்கும்) அந்தக் குடும்பம் தீமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

41. கிருஷ்ணா! தீமை ஆட்சி செய்யும்போது, அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஒழுக்கம் தவறுவார்கள். பெண்கள் ஒழுக்கம் தவறுவதால், ஜாதிகள் கலந்து போகும் நிலை ஏற்படும்.

42. ஜாதிகள் கலந்து போவதால், ஒரு இனமே அழிந்து போவதுடன், அந்த இனம் நரகத்துக்குப் போகும். தவசம், தர்ப்பணம் போன்ற சடங்குகள் மூலம் உணவும், நீரும் கிடைக்காமல் அந்த இனத்தின் முன்னோர்கள் நலிந்து போவார்கள்.

43. ஜாதிகள் கலப்பதால் ஏற்படும் இந்த விளைவுகளால், இனத்தை அழித்தவர்களின் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் அழிந்து போகும்.

44. கிருஷ்ணா! தங்கள் குடும்பம் பின்பற்றி வந்த மரபுகளைத் தொலைத்தவர்கள் நெடுங்காலம் நரகத்தில் உழல நேரிடும்.

45. நமக்குச் சிந்திக்கும் திறன் இருந்தும், அரியணை மோகத்தாலும், சுகங்களின் ஈர்ப்பினாலும் உந்தப்பட்டு, நம் உறவினர்களைக் கொல்லவும் துணிந்ததன் மூலம் நம் மனத்தைப் பாவத்தில் செலுத்துகிறோம்.

46. ஆயுதம் எதையும் ஏந்தாமல், எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருக்கும் நிலையில், ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரரின் புதல்வர்களால் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.

47. சஞ்ஜயர் கூறினார்:
தன் மனம் துயரத்தால் அலைக்கழிப்பட்டதால் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தன் கையிலிருந்த வில்லையும், அம்புகளையும் கீழே போட்டு விட்டுத் தேரின் இருக்கையில் சாய்ந்தான்.

அத்தியாயம் 2 - ஆத்மாவுக்கு அழிவில்லை

Tuesday, April 7, 2015

1. பகவத் கீதை - ஒரு அறிமுகம்

பகவத் கீதையின் பின்னணி அனைவருக்கும் தெரியும்.

பாரதப்போர் துவங்குமுன், அர்ஜுனன் மனதில், 'என் பாட்டனார் பீஷ்மர், குரு துரோணர், துரியோதனன் முதலான சகோதரர்கள் ஆகியோரைக் கொன்று இந்த ராஜ்யத்தை அடைய வேண்டுமா?' என்ற எண்ணம் தோன்றுகிறது. 

இதை 'சஞ்சலம்' என்று கூறுவார்கள். ஒரு முக்கியமான காரியத்தைச் செய்யுமுன் இதைச் செய்யத்தான் வேண்டுமா என்ற சிந்தனை எவருக்கும் எழுவது இயல்பு.

அர்ஜுனன் தன் உறவினர்களைக் கொல்ல வேண்டுமே என்று புலம்பினாலும் அவனுடைய தயக்கத்துக்கு மனோதத்துவக் காரணம் ஒன்று இருந்திருக்கலாம்.

 'இந்தப் போரில் நமக்கு வெற்றி கிடைக்குமா?' என்று அவன் அடி மனத்தில் எழுந்த சந்தேகம் கூட அவனது தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்!

போரில் வெற்றி தோல்வி இரண்டுக்குமே வாய்ப்பு இருக்கிறது. 'ஒருவேளை இந்தப் போரில் நாம் தோற்று விட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?' என்று நிச்சயமாக அர்ஜுனன் நினைத்துப் பார்த்திருப்பான். 

போர் நடந்தால்தானே வெற்றி தோல்வி? ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போரையே நடக்காமல் செய்து விட்டால், தோல்விக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடலாமே என்ற எண்ண ஓட்டம் அவன் ஆழ்மனதில் தோன்றி, அதன் காரணமாகவே, 'உறவினர்களைக் கொல்ல வேண்டுமா?' என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.

ஒரு செயலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையில், அதைத் தவிர்க்க நினைத்தால், நாம் என்ன செய்வோம்? 

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தச் செயலிலேயே ஈடுபடாமல் தவிர்க்கப் பார்ப்போம். இது மனித இயல்பு.

உதாரணமாக, ஒரு அலுவலகத்தில், ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை அவர் தாமதமாக அலுவலகத்துக்கு வருவதற்காகக் கண்டிக்க விரும்புகிறார். 

ஆனால் அப்படிக் கண்டித்தால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்று அவருக்கு உள்ளூற ஒரு அச்சம் இருக்கிறது. 

ஊழியர் எதிர்த்துப் பேசித் தன்னை அவமதிக்கலாம். அல்லது, கோபித்துக் கொண்டு தன் வேலையைச் சரியாமல் செய்யாமல் போகலாம். 

இந்த அச்சங்கள் அதிகாரியின் அடிமனதில் இருக்கக் கூடும். ஆனால் அவர் ஊழியரைக் கண்டிக்காமல் இருப்பதற்கு, வேறொரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார். 

உதாரணமாக அந்த ஊழியர் மற்ற ஊழியர்களை விடத் திறமையானவர், குறைவான நேரத்தில் அதிக வேலையைச் செய்பவர். அதனால், அவர் தாமதமாக வருவதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார். 

அந்த ஊழியர் திறமையானவர் என்பது கூட, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காக அந்த அதிகாரி கற்பனை செய்து கொண்ட காரணமாக இருக்கலாம்.

அதுபோல், 'என் உறவினர்களைக் கொல்ல வேண்டுமா?' என்று அர்ஜுனனின் மனதில் எழுந்த கேள்விக்குப் பின்னே 'நாம் போரில் தோற்று விடக் கூடாதே!' என்ற கவலை கூட இருந்திருக்கலாம்.

இதனால் அர்ஜுனன் போரைக் கண்டு அஞ்சுபவன் என்று பொருள் அல்ல. ஒரு யதார்த்தக் கண்ணோட்டத்தில், வெற்றி தோல்விகளைச் சிந்தித்துப் பார்த்தவன் என்று மட்டும்தான் கூற முடியும்.

ஒரு செயலை நாம் செய்ய வேண்டிய நிலையில், நம்மால் அதைச் சரியாகச் செய்ய முடியுமா, ஒருவேளை அதைச் சரியாகச் செய்யாவிட்டாலோ, அல்லது அந்தச் செயலின் விளைவாகவோ, வேறு ஏதாவது சங்கடங்கள் விளையுமா என்பவை போன்ற பல கவலைகள் நம் மனத்தில் எழுவது இயல்பு. 

ஒரு காரியம் வெற்றி பெறுமா பெறாதா என்ற ஐயமே (அச்சமே) பல சமயம் நம்மைச் செயல்பட விடாமல் தடுக்கிறது.

நம்மைப் போன்ற சராசரி மனிதர்களின் மனநிலை அர்ஜுனன் மனநிலையை ஒத்திருப்பதால்தான், போர்க்களத்தில் அர்ஜுனனுக்காகக் கண்ணனால் சொல்லப்பட்ட கீதை  நமது நிலைமைக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. 

'ஒரு கடமையைச் செய்யும்போது, அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்ற சிந்தனை இல்லாமல் நம் கடமையைச் செய்ய வேண்டும்' என்பதுதான் கீதையின் மையக் கருத்து.

இதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், நீங்கள் இதைப் படிப்பதை இப்போதே நிறுத்தி விட்டு உங்கள் கடமைகளைச் செய்யப் போகலாம்!

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட இந்த சஞ்சலத்தைப் போக்கி அவன் மனதைத் தெளிய வைத்து அவனைச் செயலில் ஈடுபடுத்திய, அர்ஜுனனுடைய தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா கூறிய வார்த்தைகள்தான் பகவத் கீதை.

பகவத் கீதையின் சுலோகங்களுக்கு எளிய தமிழில் (பொழிப்புரை) பொருள் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். விளக்கங்கள், வியாக்கியானங்கள், விவாதங்கள் இதில் இடம்பெறா. விரிவான விளக்கம் வேண்டுவோர் வேறு பல நூல்களை நாடலாம். 

ஆயினும் கீதையில் உள்ள எழுநூறு செய்யுட்களின் பொருளை மட்டும் அறிந்து கொண்டாலே, நமது சிந்தனை தெளிவடைந்து, நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பது எனது பணிவான கருத்து.