Sunday, November 8, 2015

3. இரண்டாவது அத்தியாயம் - ஆத்மாவுக்கு அழிவில்லை

1. சஞ்ஜயர் கூறினார்:
இரக்கத்தில் மூழ்கி, துயர் வயப்பட்டு, கண்களில் நீர் தேங்கி, மனம் அலைக்கழிக்கப்பட நிலையில் இருந்த அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணர் சொன்னார்.

2. கிருஷ்ணர் கூறினார்:
இந்த அசந்தர்ப்பமான நேரத்தில் இப்படி ஒரு தவறான சிந்தனை உன்னை எப்படி ஆட்கொண்டது? இத்தகைய சிந்தனை உயர்ந்த மனிதர்களால் புறந்தள்ளப்படும். இதனால் (நீ செய்ய நினைப்பதைச் செய்வதால்) உனக்குப் புகழோ, வீடுபேறோ கிட்டப் போவதில்லை.

3. கோழைத்தனத்துக்கு இடம் கொடுக்காதே அர்ஜுனா! அப்படிச் செய்வது உனக்கு இழுக்கு. எதிரிகளைச் சுட்டெரிப்பவனே! இந்த பலவீனமான சிந்தனைகளைக் கைவிட்டு விட்டு எழுச்சி கொள்!

4. அர்ஜுனன் கூறினான்:
எதிரிகளை அழிப்பவனே! பீஷ்மர், துரோணர் ஆகியோர் மீது அம்பு தொடுத்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்? அவர்கள் எனது மரியாதைக்குரியவர்களாயிற்றே!

5. இத்தகைய உயர்ந்த மனிதர்களைக் கொல்வதை விடப் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதே மேல் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இவர்களைக் கொன்ற பிறகு நாம் பெறப் போகும் செல்வமும் பிற சுகங்களும் ரத்தக் கறை படிந்தவையாகத்தான் இருக்கும்.

6. போரிடுவது நல்லதா, போரிடாமல் இருப்பது நல்லதா என்பது நமக்குத் தெரியாது. நாம் வெல்வோமா அல்லது அவர்கள் நம்மை வெற்றி கொள்வார்களா என்பதும் நமக்குத் தெரியாது. நமக்கு எதிராக அணி வகுத்திருக்கும் திருதராஷ்டிரர்களின் புத்திரர்களைக் கொன்ற பிறகு, நமக்கு உயிர் வாழும் விருப்பம் கூட இருக்காது.

7. என் மனம் பலவீனப்பட்டு, என் கடமை எது என்றே புரியாமல் நான் குழம்பியிருக்கும் நிலையில் நான் உன்னைக் கேட்பது இதுதான். எது நிச்சயமாக நன்மை விளைவிக்கக் கூடியது? நான் உன் சீடன். உன்னிடம் தஞ்சம் அடைந்திருக்கும் எனக்குச் சரியான வழியைக் காட்டு.

8. (போரில் வெற்றி பெறுவதன் மூலம்) இவ்வுலகையே ஆளும் உரிமையும், செல்வம் மிகுந்த ராஜ்யமும், தேவர்களையே அதிகாரம் செய்யும் உரிமையும் கூடக் கிடைத்தாலும், என் புலன்களை வறண்டு போகச் செய்து கொண்டிருக்கும் என் துயரத்தை விரட்டும் வழி எதுவும் எனக்குப் புலப்படவில்லை.

9. சஞ்ஜயர் கூறினார்:
அரசே! கிருஷ்ணரிடம் இவ்வாறு கூறிய அர்ஜுனன் "நான் போர் செய்ய மாட்டேன்" என்று சொல்லி விட்டு மௌனமானான்..

10. திருதராஷ்டிரரே! இரண்டு போர்ப் படைகளுக்கும் இடையே இருந்தபடியே, துயரில் ஆழ்ந்திருந்த அர்ஜுனனிடம், புன்னகை செய்து கொண்டே, கிருஷ்ணர் இவ்வாறு சொன்னார்.

11. கிருஷ்ணர் சொன்னார்:
அர்ஜுனா, யாருக்காக வருத்தப்படக் கூடாதோ, அவர்களுக்காக நீ வருத்தப்படுகிறாய். ஆயினும், கற்றறிந்தவனைப் போல் பேசுகிறாய்! அறிவாளிகள் இறந்தவர்களைப் பற்றியோ, இருப்பவர்களைப் பற்றியோ வருத்தப்பட மாட்டார்கள்

12.  நீயோ, நானோ, இந்த அரசர்களோ இல்லாமல் இருந்த காலம் எதுவும் இல்லை. அதுபோல் (எதிர்காலத்தில்) நாம் இல்லாமல் போவோம் என்பதும் உண்மையில்லை.

13. எப்படி இந்த ஆத்மா இந்த உடல் மூலம் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் போன்ற நிலைகளை அடைகிறதோ, அதுபோல்தான் அது இவ்வுடலை விட்டு விட்டு வேறு உடலை அடைவதும். அறிவாளிகள் இதை அறியாமல் மயங்க மாட்டார்கள்.

14. குந்தியின் புதல்வனே! வெப்பம், குளிர்ச்சி, இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை அளிக்கும் பொருட்களுக்கும், புலன்களுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானது அல்ல. எனவே இவற்றைப் புறக்கணிக்கப் பழகிக் கொள்.

15. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பார்க்கும் ஆற்றல் பெற்ற, அவற்றினால் பாதிக்கப்படாத அறிவாளி அமரத்துவம் அடையும் தகுதியைப் பெறுகிறான்.

16. உண்மையில்லாதது (அசத்யம்) எப்போதுமே இருப்பதில்லை. உண்மையானது எப்போதுமே இல்லாமல் போவதில்லை. உண்மையை அறிந்தவர்கள் இந்த இரண்டின் உண்மைத்தன்மையை உணர்ந்திருக்கிறார்கள்.

17. எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதற்கு அழிவு இல்லை. ஏனெனில் அழிவற்ற பொருளை யாராலும் அழிக்க முடியாது!

18. அழிவற்ற, வரையறுக்க முடியாத, நிலையான ஆத்மாவுடன் தொடர்புடைய இந்த உடல்கள் எல்லாம் அழியக் கூடியவை. எனவே அர்ஜுனா, போர் செய்!

19. ஆத்மாவால் யாரையும் கொல்ல முடியாது என்பதை அறியாதவர்களும், ஆத்மாவைக் கொல்ல முடியும் என்று நினைப்பவர்களும் மூடர்கள். ஏனெனில், உண்மையில் ஆத்மா யாரையும் கொல்வதுமில்லை, யாராலும் கொல்லப்படுவதும் இல்லை.

22. ஒருவன் நைந்து போன ஆடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை அணிவது போல், ஆத்மா இறந்து போன உடலைத் துறந்து விட்டுப் புதிய உடலுக்குள் புகுந்து கொள்கிறது.

23. ஆயுதங்களால் ஆத்மாவைக் காயப்படுத்த முடியாது, தீயால் அதை அழிக்க முடியாது, நீரால் அதை நனைக்க முடியாது, காற்றால் அதைக் காய வைக்கவும் முடியாது.

24. ஏனெனில் ஆயுதங்களால் காயப்படுவது, தீயினால் சுடப்படுவது, தண்ணிர் பட்டு ஈரமாவது, காற்றில் உலர்வது போன்ற தன்மைகள் ஆத்மாவுக்கு இல்லை. ஆத்மா நிலையானது, எங்கும் நிறைந்திருப்பது, அசைக்க முடியாதது, மாறாத்தன்மையுடன் இருப்பது, என்றும் இருப்பது.

25. ஆத்மாவுக்கு உருவம் இல்லை. அது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, மாற்ற இயலாதது. இதைப் புரிந்து கொண்ட பின், நீ வருந்தக் கூடாது.

26. ஆத்மா தொடர்ந்து பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறது என்று நீ நினைத்தாலும், நீ இது போல் வருந்தக்கூடாது.

27. ஏனெனில், அப்படி வைத்துக் கொண்டாலும், இவ்வுலகில் பிறந்தவன் இறப்பது உறுதி. அதுபோல், இறந்தவன் மீண்டும் பிறப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆகையால், தவிர்க்க முடியாத ஒரு விஷயம் குறித்து வருந்துவது உனக்கு அழகல்ல.

28. அர்ஜுனா! இவ்வுலகில் வந்து பிறப்பதற்கு முன், எல்லா உயிர்களும் உருவமற்றுத்தான் இருந்திருக்கின்றன. இறப்புக்குப் பின் அவை மீண்டும் உருவம் இல்லாமல்தான் போகும். இடைப்பட்ட காலத்தில்தான் அவை உருவத்தோடு இருக்கின்றன. அதனால் வருந்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

29. சிலர் ஆத்மாவை ஒரு ஆச்சரியமான பொருளாகப் பார்க்கிறார்கள். சிலர் ஆத்மாவை ஒரு ஆச்சரியமான பொருள் என்று வர்ணிக்கிறார்கள். வேறு சிலர், ஆத்மா ஒரு ஆச்சரியமான பொருள் என்று (யாரோ சொல்லக்) கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஆத்மாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும், அதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

30. அர்ஜுனா, எல்லோர் உடலிலும் நிறைந்திருக்கும் இந்த ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது. அதனால் யார் பொருட்டும் (யாருடைய மரணம் குறித்தும்) நீ வருந்தத் தேவையில்லை.

31. மேலும், உன்னுடைய கடமையைக் கருத்தில் கொண்டு, நீ உன் நிலையிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியனுக்கு தர்மத்துக்காகப் போர் செய்வதை விட விருப்பமான வேறு விஷயம் இருக்க முடியாது.

32. க்ஷத்திரியர்களில் அதிர்ஷ்டம் செய்த சிலருக்கே போர் செய்யும் வாய்ப்பு தானாகவே வந்து வாய்க்கிறது. அத்தகைய வாய்ப்பு சொர்க்கத்துக்கான நுழைவாயில் ஆகும்.

33. இந்த தர்ம யுத்தத்தில் நீ ஈடுபடாவிட்டால், நீ கடமை தவறியவனாகி, உன் நற்பெயரை, இழந்து பாவம் செய்தவனாக ஆவாய்.

34. உன் மீது மக்கள் அவப்பெயரைச் சுமத்துவார்கள். அதை உன்னால் எப்போதும் போக்கிக் கொள்ள முடியாது. நற்பெயருடன் வாழ்பவனுக்கு வரும் அவப்பெயர் மரணத்தை விடக் கொடியது.

35. உன் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் மகாரதர்கள் (தேர்ப் போரில் மிகச் சிறந்தவர்கள்) நீ அச்சத்தினால்தான் போர் புரியவில்லை என்று கருதி உன்னை மிகவும் துச்சமாக மதிப்பார்கள்.

36. உன் எதிரிகள் உன்னுடைய திறமையைக் களங்கப்படுத்தி உன்னை இழித்தும், பழித்தும் பலவிதமாகப் பேசுவார்கள். இதை விட மன வருத்தம் அளிக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?

37. போரில் நீ கொல்லப்பட்டால், விண்ணுலகம் ஏகுவாய். போரில் நீ வெற்றி பெற்றால், இந்த மண்ணுலகை ஆள்வாய். ஆதலால் அர்ஜுனா, வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொண்டு, எழுச்சியுடன் போரிடு!

38. மகிழ்ச்சி-துயரம், லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி இவற்றை சமநோக்குடன் எதிர்கொண்டு இந்தப் போருக்குத் தயாராகு. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால், பாவம் உன்னைத் தீண்டாது.

39. இதுவரை நான் கூறிய வழிமுறை ஞானயோக அடிப்படையில் அமைந்தது. இனி கர்மயோக அடிப்படையில் இதை அணுகுவோம். கர்மயோகம் என்பது பலனை எதிர்பாராத செயல்பாடு. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் உன் செயல்களின் (கர்மாவின்) விளைவுகளிலிருந்து நீ விடுபடுவாய்.

40. இந்த யோகத்தைப் பின்பற்றினால், முயற்சி வீணாவதும் இல்லை, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதும் இல்லை. (எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு என்ற கோட்பாடு இங்கே செயல்படாது!) இந்தக் கர்ம யோகத்தை ஓரளவு செயல்படுத்தினால் கூடப் போதும். பிறப்பு-இறப்பு பற்றிய பயங்களிலிருந்து உனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.

41. அர்ஜுனா, இந்த உயர்ந்த பாதையில் செல்பவனுடைய சிந்தனை ஒருமுகப்பட்டும், உறுதியாகவும் இருக்கும். ஆசைகளினால் இழுக்கப்பட்டவனுடைய சிந்தனை பல திசைகளிலும் சிதறி, நோக்கமற்றதாக இருக்கும்.

42, 43, 44. அர்ஜுனா! ஆசைகள் வசப்பட்டு, வேதங்களில் ஈடுபாடு கொண்டு, சொர்க்கத்தை அடைவதையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு, சொர்க்கத்துக்கு மேல் எதுவும் இல்லை என்று சாதிப்பவர்கள் விவேகமற்றவர்கள். இவர்கள் மறுபிறவியையே இலக்காகக் கொண்டு, இவ்வுலகில் செல்வங்களையும், சுகங்களையும் அனுபவிப்பதற்காகப் பலவித செயல்களைச் செய்ய வேண்டும் என்று கவர்ச்சிகரமாகப் பேசுவார்கள். இந்தப் பேச்சுகளில் மயங்குபவர்களாலும், சுகமான வாழ்க்கையிலும், இவ்வுலகில் உள்ள செல்வங்களிலும் ஈடுபாடு கொண்டவர்களாலும் மனதை ஒருமுகப்படுத்தி இறைபக்தியில் ஈடுபட முடியாது.

45. அர்ஜுனா! இவ்வுலக விஷயங்கள் மூன்று வகை குணங்களால் அமைந்திருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக, இன்பம் துன்பம் போன்ற இரு எதிர் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, பொருட்களை அடைவது, அவற்றைப் பாதுகாப்பது போன்ற நோக்கங்களிலிருந்து விடுபட்டு, உன் உண்மை நிலையை அடைய வேண்டும்.

46. எல்லாப் புறமும் நீரால் சூழப்பட்ட இடத்தில் வசிக்கும் ஒருவனுக்கு ஒரு குட்டை எவ்வளவு பயன்படுமோ, அந்த அளவுக்குத்தான் உண்மையான அறிவு பெற்ற ஒரு அந்தணனுக்கு வேதங்கள் பயன் படும்.

47. உன் கடமையைச் செய்யத்தான் உனக்கு உரிமை இருக்கிறது. உன் செயல்களின் பலன்கள் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை. உன் செயல்களால் கிடைக்கக் கூடிய பலன்கள் உன் இலக்காக இருக்கக் கூடாது. அதற்காக நீ உன் கடமைகளைச் செய்யாமலும் இருக்கக் கூடாது.

48. பலன்கள் மீது பற்று வைக்காமல், வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், ஒரு யோகம் போல் உன் கடமையைச் செய். எப்போதும் சமமான மனநிலையில் இருப்பதுதான் யோகம்.

49. தனஞ்ஜயா, நீ உன் அறிவைப் பயன்படுத்தி, பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் அற்பமான செயல்களைக் கைவிட்டு, சமமான மனநிலையில் செய்யப்படும் யோகத்தைத் தேர்ந்தெடு. பலனை எதிர்பார்த்துச் செயல்படுபவர்கள் கீழானவர்கள்.

50. உயர்ந்த அறிவைப் பெற்றிருக்கும் ஒருவன் நற்செயல், தீச்செயல் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடுவான். அதனால் நீ சிந்தித்து யோக மார்க்கத்தைத் தேர்ந்தெடு. யோகம் உன் செயலைச் சிறப்பானதாக ஆக்கும்.

51. தேர்ந்த சிந்தனையினால் தன் செயல்களின் பலன்களைத் துறக்கும் மனிதர்கள் பிறப்பு இறப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

52. உன்னுடைய அறிவினால் நீ மோகம் என்னும் மயக்கத்தை வெற்றி கொண்டால், இந்த உலக வாழ்க்கையைப் பற்றி நீ கேட்டு அறிந்த விஷயங்கள், எதிர்காலத்தில் கேட்கப் போகிற விஷயங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்த மாட்டாய்.

53. வேதங்கள் பற்றிய பல்வேறு கருத்துக்களைக் கேட்டுக் குழப்பமடையாமல், உன் தெளிவான சிந்தனையால், நீ உறுதியாக இருந்தால், உன் மனம் சமநிலை பெற்று, நீ யோக நிலையை அடைவாய்.

54. அர்ஜுனன் கூறினான்:
கேசவா! ஒருவன் மனம் சமநிலை பெற்று ஸ்திதப்ரக்ஞன் (மாறாத மனநிலையில் இருப்பவன்) ஆகி விட்டதைக் காட்டும் அடையாளங்கள் எவை? மனம் ஒருமுகப்பட்டவனின் பேச்சு, உடல் அசைவுகள் ஆகியவை எப்படி இருக்கும்?

55. கிருஷ்ணர் கூறினார்:
பார்த்தா! ஒருவன் தன் மனதில் எழும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, தன்னை முழுமையாக அறிந்து கொள்வதிலேயே திருப்தி அடைந்து ஆத்ம நிலையில் இருக்கும்போது அவன் ஸ்திதப்ரக்ஞன் (மாறாத மனநிலையை அடைந்தவன்) ஆகிறான்.

56. துயரத்தினால் சஞ்சலப்படாமலும், சுகங்கள் மீது ஆசைப்படாமலும், ஆசை, பயம், கோபம் போன்ற உணர்வுகள் இல்லாமலும் இருப்பவனுடைய மனம் ஆன்மாவில் நிலைத்திருக்கும்.

57. எல்லாவிதப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு, நன்மை வரும்போது துள்ளிக் குதிக்காமலும், துன்பம் வரும்போது வெறுப்பை வெளிப்படுத்தாமலும் இருப்பவன் தூய ஞானத்தில் நிலைத்திருக்கிறான்.

58. ஆமை தன் உடல் உறுப்புக்களை ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வது போல் தனது புலன்களை அடக்கி வைத்திருப்பவன் தூய ஞானத்தில் நிலைத்திருக்கிறான்.

59. தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் புலன்களுக்கு சுகம் அளிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருக்கலாம். ஆயினும் புலன்களினால் நுகரப்படும் ஆசை அடிமனதில் இருந்து கொண்டேதான் இருக்கும். அனைத்தினும் மேலான ஆத்மாவை அறிந்தவனிடம் ஆசையின் சிறு கூறு கூட இருக்காது.

60. குந்தியின் புதல்வனே! புலன்கள் வலுவான ஈர்ப்பு சக்தி உள்ளவை. அவை கட்டுப்பாடான சிந்தனை உள்ளவனின் மனத்தைக் கூடத் தவறான வழிக்குத் தள்ளி விடும்.

61. எனவே அவற்றை (புலன்களை) அடக்கி, மனதைச் சமநிலையில் வைத்து என்னைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட வேண்டும் (என்னை தியானிக்க வேண்டும்). புலன்களை அடக்கியவனின் மனம் முழுமையான ஞானத்தில் நிலை பெற்றிருக்கும்.

62. புலன்களுக்கு இன்பம் தரும் விஷயங்களில் மனது வைக்கும் மனிதன் அந்த விஷயங்கள் மீது பற்று வைக்கிறான். பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து (ஆசை நிறைவேறாதபோது) கோபம் உண்டாகிறது.

63. கோபத்திலிருந்து வெறி பிறக்கிறது. வெறியினால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தினால் சிந்தனையில் தெளிவில்லாமல் போகிறது . தெளிவற்ற சிந்தனை அழிவுக்கு வழி வகுக்கிறது.

64. ஆனால் சுயக்கட்டுப்பாடு உள்ளவன், ஆத்மஞானத்தின் மூலம் விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டவனாக, தன் புலன்களால் இன்பங்களை அனுபவித்தாலும், மன அமைதியை அடைகிறான்.

65. ஒருவன் மன அமைதியை அடையும்போது, அவன் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். மன அமைதியை அடைந்தவனுடைய அறிவு தூய நிலையை அடைகிறது.

66. மனத்தைக் கட்டுப்படுத்தாதவனுக்கு சிந்தனைத் தெளிவு இருக்காது. தெளிவான சிந்தனை இல்லாதவனால் இறைவனிடத்தில் ஈடுபட முடியாது. இறைவனிடத்தில் ஈடுபடாதவனுக்கு மன அமைதி இருக்காது. மன அமைதி இல்லாதவனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

67. ஒரு ஓடத்தைக் காற்று அலைக்கழிப்பது போல், ஒருவனின் மனம் எந்தப் புலனில் நிலைத்திருக்கிறதோ அந்தப் புலன் அவன் அறிவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கிறது.

68. ஆகையால் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனின் மனம் நிலையாக இருக்கிறது.

69. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, மனத்தை ஒருமுகப்படுத்தியவன் விழித்திருக்கிறான். மற்றவர்கள் விழித்திருக்கும் நேரம்தான் ஆழ்மனச் சிந்தனையில் மூழ்கியிருக்கும் முனிவனுக்கு இரவு.

70. எல்லா நதிகளும் கடலில் வந்து கலக்கும்போது கடல் அசைவற்று இருப்பது போல், அந்த முனிவன்  புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருட்கள் தன்னை அணுகும்போது சலனமற்று இருக்கிறான். புலன் இன்பங்களுக்கு ஆசைப்படுபவனால் அப்படி இருக்க முடியாது.

71. ஆசைகளைத் துறந்து, பற்றுக்களிலிருந்து விடுபட்டு தான், தனது என்ற அகந்தை கொள்ளாமல் வாழ்பவனுக்கே அமைதி கிடைக்கும்.

72. அர்ஜுனா, இதுதான் கடவுளை அடைந்தவனுடைய நிலை. இந்த நிலையை அடைந்தவன் மாயையிலிருந்து விடுபடுகிறான். தன் இறுதிக் காலத்தில் இந்த நிலையை அடைபவனுக்குக் கூட பிரம்மநிலை என்னும் பேரானந்தம் கிட்டும்.