Tuesday, April 7, 2015

1. பகவத் கீதை - ஒரு அறிமுகம்

பகவத் கீதையின் பின்னணி அனைவருக்கும் தெரியும்.

பாரதப்போர் துவங்குமுன், அர்ஜுனன் மனதில், 'என் பாட்டனார் பீஷ்மர், குரு துரோணர், துரியோதனன் முதலான சகோதரர்கள் ஆகியோரைக் கொன்று இந்த ராஜ்யத்தை அடைய வேண்டுமா?' என்ற எண்ணம் தோன்றுகிறது. 

இதை 'சஞ்சலம்' என்று கூறுவார்கள். ஒரு முக்கியமான காரியத்தைச் செய்யுமுன் இதைச் செய்யத்தான் வேண்டுமா என்ற சிந்தனை எவருக்கும் எழுவது இயல்பு.

அர்ஜுனன் தன் உறவினர்களைக் கொல்ல வேண்டுமே என்று புலம்பினாலும் அவனுடைய தயக்கத்துக்கு மனோதத்துவக் காரணம் ஒன்று இருந்திருக்கலாம்.

 'இந்தப் போரில் நமக்கு வெற்றி கிடைக்குமா?' என்று அவன் அடி மனத்தில் எழுந்த சந்தேகம் கூட அவனது தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்!

போரில் வெற்றி தோல்வி இரண்டுக்குமே வாய்ப்பு இருக்கிறது. 'ஒருவேளை இந்தப் போரில் நாம் தோற்று விட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?' என்று நிச்சயமாக அர்ஜுனன் நினைத்துப் பார்த்திருப்பான். 

போர் நடந்தால்தானே வெற்றி தோல்வி? ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போரையே நடக்காமல் செய்து விட்டால், தோல்விக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடலாமே என்ற எண்ண ஓட்டம் அவன் ஆழ்மனதில் தோன்றி, அதன் காரணமாகவே, 'உறவினர்களைக் கொல்ல வேண்டுமா?' என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.

ஒரு செயலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையில், அதைத் தவிர்க்க நினைத்தால், நாம் என்ன செய்வோம்? 

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தச் செயலிலேயே ஈடுபடாமல் தவிர்க்கப் பார்ப்போம். இது மனித இயல்பு.

உதாரணமாக, ஒரு அலுவலகத்தில், ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை அவர் தாமதமாக அலுவலகத்துக்கு வருவதற்காகக் கண்டிக்க விரும்புகிறார். 

ஆனால் அப்படிக் கண்டித்தால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்று அவருக்கு உள்ளூற ஒரு அச்சம் இருக்கிறது. 

ஊழியர் எதிர்த்துப் பேசித் தன்னை அவமதிக்கலாம். அல்லது, கோபித்துக் கொண்டு தன் வேலையைச் சரியாமல் செய்யாமல் போகலாம். 

இந்த அச்சங்கள் அதிகாரியின் அடிமனதில் இருக்கக் கூடும். ஆனால் அவர் ஊழியரைக் கண்டிக்காமல் இருப்பதற்கு, வேறொரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார். 

உதாரணமாக அந்த ஊழியர் மற்ற ஊழியர்களை விடத் திறமையானவர், குறைவான நேரத்தில் அதிக வேலையைச் செய்பவர். அதனால், அவர் தாமதமாக வருவதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார். 

அந்த ஊழியர் திறமையானவர் என்பது கூட, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காக அந்த அதிகாரி கற்பனை செய்து கொண்ட காரணமாக இருக்கலாம்.

அதுபோல், 'என் உறவினர்களைக் கொல்ல வேண்டுமா?' என்று அர்ஜுனனின் மனதில் எழுந்த கேள்விக்குப் பின்னே 'நாம் போரில் தோற்று விடக் கூடாதே!' என்ற கவலை கூட இருந்திருக்கலாம்.

இதனால் அர்ஜுனன் போரைக் கண்டு அஞ்சுபவன் என்று பொருள் அல்ல. ஒரு யதார்த்தக் கண்ணோட்டத்தில், வெற்றி தோல்விகளைச் சிந்தித்துப் பார்த்தவன் என்று மட்டும்தான் கூற முடியும்.

ஒரு செயலை நாம் செய்ய வேண்டிய நிலையில், நம்மால் அதைச் சரியாகச் செய்ய முடியுமா, ஒருவேளை அதைச் சரியாகச் செய்யாவிட்டாலோ, அல்லது அந்தச் செயலின் விளைவாகவோ, வேறு ஏதாவது சங்கடங்கள் விளையுமா என்பவை போன்ற பல கவலைகள் நம் மனத்தில் எழுவது இயல்பு. 

ஒரு காரியம் வெற்றி பெறுமா பெறாதா என்ற ஐயமே (அச்சமே) பல சமயம் நம்மைச் செயல்பட விடாமல் தடுக்கிறது.

நம்மைப் போன்ற சராசரி மனிதர்களின் மனநிலை அர்ஜுனன் மனநிலையை ஒத்திருப்பதால்தான், போர்க்களத்தில் அர்ஜுனனுக்காகக் கண்ணனால் சொல்லப்பட்ட கீதை  நமது நிலைமைக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. 

'ஒரு கடமையைச் செய்யும்போது, அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்ற சிந்தனை இல்லாமல் நம் கடமையைச் செய்ய வேண்டும்' என்பதுதான் கீதையின் மையக் கருத்து.

இதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், நீங்கள் இதைப் படிப்பதை இப்போதே நிறுத்தி விட்டு உங்கள் கடமைகளைச் செய்யப் போகலாம்!

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட இந்த சஞ்சலத்தைப் போக்கி அவன் மனதைத் தெளிய வைத்து அவனைச் செயலில் ஈடுபடுத்திய, அர்ஜுனனுடைய தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா கூறிய வார்த்தைகள்தான் பகவத் கீதை.

பகவத் கீதையின் சுலோகங்களுக்கு எளிய தமிழில் (பொழிப்புரை) பொருள் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். விளக்கங்கள், வியாக்கியானங்கள், விவாதங்கள் இதில் இடம்பெறா. விரிவான விளக்கம் வேண்டுவோர் வேறு பல நூல்களை நாடலாம். 

ஆயினும் கீதையில் உள்ள எழுநூறு செய்யுட்களின் பொருளை மட்டும் அறிந்து கொண்டாலே, நமது சிந்தனை தெளிவடைந்து, நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பது எனது பணிவான கருத்து.

No comments:

Post a Comment